வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞரை மாற்ற கோரி திமுக மனு தாக்கல்

பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றக் கோரி திமுக பொதுச்செயலர் அன்பழகன் சார்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக பொறுப்பு வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகாரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு; அரசு வழக்கறிஞரை மாற்றக் கோரி திமுக மனு! பல்வேறு தடைகளைத் தாண்டி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென திமுக சார்பில் கடந்த வாரம் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில் தங்களையும் இந்த வழக்கில் வாதாட அனுமதிக்கக் கோரப்பட்டது. இதற்கு நீதிபதி அனுமதி அளித்திருந்தார். தற்போது திமுக பொதுச்செயலர் அன்பழகன் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூருக்கு மாற்றியதன் நோக்கத்துக்கு எதிராகவே தற்போது வழக்கின் நிலை இருக்கிறது. தற்போதைய அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றிவிட்டு திறமை வாய்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த மனு மீது வரும் திங்கள்கிழமையன்று விசாரணை நடைபெற உள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: