மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டை முடித்து வைத்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா சில, பல முடிவுகளை பாசிச ரசனையோடு அறிவித்திருக்கிறார்.
போலீசாருக்கான ரொக்கப்பரிசு உயர்த்தப்படுதல், போலீஸ் அதிகாரிகளுக்கு இடையே வீடியோ கான்பரன்சிங் ஏற்படுத்துதல், சிறை கைதிகளை அழைத்து வரும் போலீசாருக்கான செலவுத் தொகையை உயர்த்துதல், மத்திய சிறைச்சாலைகளில் ஸ்கேன் கருவிகள் வாங்குதல், போலீசுக்கு உதவும் பொருட்டு மாவட்டம் தோறும் சட்ட அதிகாரி நியமித்தல் என்று போலிசாருக்கு ஏராளம் சலுகைகள் வசதிகளை ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இவற்றில் முக்கியமானது குண்டர் சட்டம் குறித்த அறிவிப்பு!
ஏற்கனவே இருக்கும் குண்டர் சட்டத்தில் தொழில்முறைத் திருடர்கள், ரவுடிகள், போதை பொருள் கடத்துபவர்கள், திருட்டு விசிடி தயாரிப்பவர்கள் – விற்பவர்கள் மற்றும் ஜெயலலிதாவுக்கு பிடிக்காத அரசியல்வாதிகள் குறிப்பாக தி.மு.க தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வந்தனர். எங்கள் தோழர்கள் கூட முன்னரும் இப்போதும் இப்படி கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தச் சட்டப்படி கைது செய்யப்படுபவர்கள் யாரும் ஒரு வருடம் வரை சிறையில் இருந்தாக வேண்டும், பிணை கிடையாது. வழக்கு, விசாரணை தாமதம் என்று எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.  சுத்தி வளைப்பானேன் சகல எதிர்கட்சிகளையும் ஆதரிப்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும் என்று சட்டம் கொண்டுவாருங்கள் மாம் .  அனுபவ அறிவு நன்றே தமிழ்நாட்டு மக்களுக்கு இது அனுபவ அறிவு பெறுங்காலம் 

தற்போது இந்த குண்டர் சட்டத்தின் வரம்புகளை அகற்றிவிட்டு இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறார்கள். அதன் படி, “பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முதல் முறை குற்றம் செய்பவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்”. அதாவது இனி கைது செய்யப்படுபவர்கள் யாரும் தொழில்முறைத் திருடர்களாகவோ, ரவுடிகளாகவோ இருக்க வேண்டியதில்லை. ஒரு குற்றம் புரிந்திருந்தாலே போதும். முதல் குற்றம் புரிபவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் குற்றம் செய்பவர்களாக போலிசால் கருதப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.
முக்கியமாக இந்த விதி கிரிமனல்களை மட்டும் குறிவைக்கவில்லை. மக்களுக்காக போராடுபவர்களை பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என்று தீர்மானித்து கைது செய்து ஒரு வருடம் சிறையில் அடைப்பதற்கு வழிவகுக்கிறது. இதன்படி இனி கல்வியில் தனியார்மயத்தை எதிர்த்து போராடும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களை குண்டர்கள் சட்டத்தில் அடைக்க முடியும். போலிசாரின் லாக்கப் கொலையை எதிர்த்து போராடும் மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களையும் ஒரு வருடம் உள்ளே தள்ள முடியும்.
சரி இது ஏதோ வெளியே போராட்டம் நடத்துபவர்களுக்கு மட்டும் என்று நினைத்து விடாதீர்கள். பாசிச ஜெயாவின் குண்டர்கள் சட்ட அறிவிப்பில் அடுத்து வரும் அணுகுண்டு அறிவிப்பு என்னவென்றால் “சைபர் கிரைம் குற்றம் செய்தவர்கள் மீதும் குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதாகும். சைபர் கிரைம் என்றால் ஏதோ நைஜீரியன் மோசடி மட்டும் என்று நினைத்து விடாதீர்கள். அரசியல் ரீதியாக எழுதுபவர்கள், அரசுகள், கட்சிகள், மதவெறி, சாதிவெறிகளைக் கண்டித்து எழுதுபவர்களும் கூட பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் என்ற முகாந்திரத்தில் கைது செய்யப்படலாம்.
வினவு தளம் இந்து மதத்தை தாக்கி எழுதுகிறது, சாதிய சமூக ‘இணக்கத்தை’ குலைக்கும் வகையில் எழுதுகிறது என்று யாராவது ஒரு புகார் கொடுத்தால் அல்லது போலீசே அப்படி ஒரு வழக்கு பதிவு செய்தால் எங்களையும் கேட்பார் கேள்வியின்றி ஒரு வருடம் உள்ளே தள்ள முடியும். ஜெயலலிதாவை கண்டித்து யாராவது ஒரு ஓவியர் கார்ட்டூன் வரைந்தால் கூட குண்டர்கள் சட்டம் பாயலாம். அந்த ஓவியத்தை விரும்பி லைக் செய்தவர்களும் கூட கைது செய்யப்படலாம். இப்படி ஓரிரு முறை நடந்து விட்டால் மற்றவர்கள் பயந்து ஒதுங்கி விடுவார்கள்.
இதன்போக்கில் இணையப்பரப்பில் அரசியல் ரீதியாக பேசுபவர்களும், வினையாற்றுபவர்களும் இல்லாமல் போய்விடுவார்கள். இதற்கு தோதாக “பள்ளி படிப்பிலேயே சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது தொடர்பான பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்” என்று ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். அதாவது முகநூலிலோ, பதிவுகளிலோ அரசியல் பிரச்சினைகளை எழுதாமல் கடி ஜோக், சினிமா, முதலியவற்றை மட்டும் மாணவர்கள் எழுதலாம், இல்லையெனில் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது என்று மிரட்டப்படுவார்கள்.
அடுத்து போலீசு இந்த குண்டர் சட்டத்தை சுறுசுறுப்பாகவும் அதிகமாகவும் பயன்படுத்த வேண்டும் என்று உற்சாகப்படுத்தும் வகையில் “குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்வதற்கான செலவுத் தொகை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.8ஆயிரமாக உயர்த்தப்படும்” என்றும் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இனி ஏட்டையாவுக்கு ஏதாவது பாக்கெட் மணி வேண்டுமென்றால் கூட கடைதெருவில் புதிய ஜனநாயகம் இதழை படித்துக் கொண்டிருக்கும் ஒருவரை கைது செய்து குண்டாசில் போடலாம். பணத்துக்கு பணம், பாசிசத்துக்கு பாசிசம் இரண்டும் நிறைவேறும்.
இப்படி மெய்யுலகிலும், மெய் நிகர் உலகிலும் பாசிச ஜெயாவின் போலீஸ் ராஜ்ஜியம்தான் நடக்கப் போகிறது. அப்படி நடக்கக் கூடாது என்றால் நாம் இணையத்திலும், இணையத்திற்கு வெளியிலும் போராட வேண்டும். பாசிச ஜெயாவின் இந்த அடக்குமுறை தர்பாரை வாசகர்களும், பதிவர்களும், முகநூல் – ட்விட்டர் நண்பர்களும் கடுமையாக கண்டிப்பதோடு இந்த பிரச்சாரத்தை பரந்து பட்ட அளவில் கொண்டு செல்லுமாறும் தோழமையோடு கோருகிறோம்.