வெள்ளி, 21 டிசம்பர், 2012

மும்பை இங்க் ரிமூவர் ஒயிட்னர் போதையில் பள்ளி மாணவர்கள்

மும்பை : மகாராஷ்டிராவில் மும்பை, புனே போன்ற நகரங்களில் பள்ளிக் குழந்தைகளிடையே போதைப் பழக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இவர்கள் போதைக்காக ஸ்டேஷனரி பொருட்களாக கருதப்படும் ‘இங்க் ரிமூவர்’, ‘ஒயிட் னர்’ போன்றவற்றை பயன்படுத்துவது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அலுவலகங்களில் டைப் செய்த கடிதத்தில் திருத்தம் செய்யவும், காகிதத்தில் பட்ட மையை அழிக்கவும் ஒயிட்னர், இங்க் ரிமூவர் போன்றவற்றை பயன்படுத்துவது வழக்கம். அனைத்து ஸ்டேஷனரி கடைகளிலும் இது தாராளமாக குறைந்த விலையில் கிடைக்கிறது. சிலர் இதை போதை பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். சமீப காலமாக பள்ளி குழந்தைகளும் இங்க் ரிமூவர், ஒயிட்னர் போன்றவற்றை போதைக்காக பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக சேத்னா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும், தேசிய போதை ஒழிப்பு மையமும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஒயிட்னர், இங்க் ரிமூவர் போன்றவை யி35 முதல் யி40 வரையிலான விலையில் கிடைக்கிறது. இன்றைய மாணவர்களுக்கு இந்த பணம் ஒன்றும் பெரிய தொகையல்ல. பாக்கெட் மணியாக அவர்களுக்கு இதை விட அதிகம் கிடைப்பதால், அவர்கள் எளிதாக கடைகளில் இவற்றை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

ஒயிட்னர், இங்க் ரிமூவர் பாட்டில் மூடியை திறந்து முகர்ந்து பார்ப்பதன் மூலம் லேசான போதை ஏற்படுகிறது. சில மாணவர்கள் இதை கைக்குட்டையில் கொட்டி முகர்ந்து பார்த்து போதை ஏற்றிக் கொள்கின்றனர். வகுப்பறையிலோ அல்லது வீட்டிலோ இப்படி செய்தால் கூட யாருக்கும் சந்தேகம் ஏற்படுவதில்லை என்பதால், மாணவர்களிடையே இந்த பழக்கம் அதிகரித்து வருவதாக சேத்னா தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சஞ்சய் குப்தா கூறுகிறார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில், ‘‘ஒயிட்னர், இங்க் ரிமூவர் போன்றவை ஸ்டேஷனரி பொருட்களாக கருதப்படுவதால், பெற்றோரோ அல்லது பள்ளி ஆசிரியர்களோ இதை கவனத்தில் எடுத்து கொள்வதில்லை. இதனால், மாணவர்களிடையே இந்த பழக்கம் அதிகரித்துள்ளது. இந்த பழக்கம் முற்றி எங்களிடம் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது’’ என்றார்.

ஆனந்த்வன் என்ற போதை ஒழிப்பு மற்றும் புனர்வாழ்வு மையத் தலைவர் அஜய் துதானே கூறுகை யில், ‘‘எங்கள் கணக்குப்படி ஒயிட்னர், இங்க் ரிமூவர் போன்றவற்றை முகர்ந்து பார்த்து போதை ஏற்றிக் கொள்ளும் பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த பழக்கத்துக்கு அடிமையான குறைந்தது 30 குழந்தைகள் எங்கள் மையத்துக்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.

இதனால், புனேயில் மேலும் 5 மையங்களை திறந்திருக்கிறோம். பெரும்பாலும் சிறுவர்கள் மற்றும் டீன்ஏஜ் மாணவர்களிடையே இந்த பழக்கம் அதிகளவில் உள்ளது. 30 ரூபாய்க்கு கிடைக்கும் ஒயிட்னரை ஒரு கைக்குட்டையில் கொட்டி முகர்ந்து பார்த்தால் அந்த போதை குறைந்தது 10 மணி நேரம் வரை இருக்கும். சிறார் குற்றவாளிகள், குடிசைப் பகுதிகள் மற்றும் தெருவோரங்களில் வசிக்கும் குழந்தைகளிடையேயும் இந்த பழக்கம் அதிகளவில் உள்ளது’’ என்றார்.

8 ஆயிரம் குழந்தைகள்

ஒயிட்னர், இங்க் ரிமூவர் மூலம் போதைக்கு அடிமையாகி சிகிச்சைக்கு வரும் 1,500 பள்ளிக் குழந்தைகளில் சராசரியாக 500 பேர் மட்டுமே இந்த கொடிய பழக்கத்தில் இருந்து முழுவதுமாக விடுதலை பெறுகின்றனர். மற்ற குழந்தைகள் சிகிச்சைக்கு பிறகு, சில மாதங்களில் மீண்டும் இந்த பழக்கத்துக்கு ஆளாகி விடுகின்றனர்’’ என்றார். மும்பையை போல் புனேயிலும் பள்ளி குழந்தைகளிடையே இந்த பழக்கம் அதிகளவில் உள்ளது. இந்த நகரில் மட்டும் 8 ஆயிரம் குழந்தைகள் இந்த போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. .dinakaran.com

கருத்துகள் இல்லை: