சனி, 22 டிசம்பர், 2012

மிரட்டும் பொறுக்கியை தமிழ் சினிமா ஹீரோவாகக் காட்டுகிறது

தர்மபுரியில் தலித் குடியிருப்புகள் தலித்தல்லாத சாதியினரால் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்துக்கு காதல் காரணமா இல்லையா என்ற ஆராய்ச்சி அரசியல் களத்தில் நடந்து வருகிறது. இன்னும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாத ஒரே அம்சம், நடந்தது வன்முறையா இல்லையா என்ற அபத்தமான தலைப்பு மட்டும்தான். தலித் இளைஞனும் வன்னியப் பென்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாலும் அதில் விரக்தியடைந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொண்டதாலும்தான் இந்த தாக்குதல் நடந்தது என்று நானும் கருதவில்லை.தாக்குதல் நடத்துவதற்கான மனநிலை ஏற்கனவே கனன்றுகொண்டிருந்தது. அதற்கு ஒரு சாக்காக இந்த காதல் திருமணம் அமைந்தது என்றே தோன்றுகிறது.  இது இல்லாவிட்டால், இன்னொரு சாக்கு கிடைத்திருக்கக்கூடும். காதல் திருமணம்தான் உண்மையான பிரச்சினை என்றால், நடந்த வன்முறையில் காதலர்கள் தாககப்படவில்லை. அவ்வளவு ஏன், எந்த வீட்டிலும் எந்த நபரும் தாக்கப்படவில்லை. தாக்கிய கும்பல்கள் வீடுகளிலிருந்து ஆட்களை விரட்டிவிட்டு, வீடுகளையே தாககி அழித்திருக்கிறார்கள் தங்களை விட மோசமான நிலையில் இருந்த தலித்துகளின் குடும்பங்களிலிருந்து பலர் படித்து வேலை வாய்ப்புகளை அடைந்து நகரங்களில் குடியேறி பொருள் சம்பாதித்து, கிராமத்தில் இருக்கும் குடும்பத்தின் நிலையை மேம்படுத்தி, தங்களை விட வசதியாக தங்கள் கண்ணெதிரே வாழ்வது பற்றிய பொறாமையும் எரிச்சலுமே தாக்குதலின் பின்னால் இருப்பதாகவே தெரிகிறது. அந்தப் பொறாமைக்கும் எரிச்சலுக்கும் பின்னால் இருப்பது சுயசாதிப் பெருமையும் சாதிவெறியும்தான். பொருளாதாரத்தில் முன்னேறி சமூக அந்தஸ்தில் அடுத்த படிக்குச் சென்றால் தங்கள் சாதி மேலாண்மை பாதிக்க்ப்படும் என்ற கவலையில் தலித்துகளின் செல்வத்தை, வளத்தை அழித்திருப்பதாகவே தெரிகிறது.

நடந்த தாக்குதல் காதல் திருமணப் பிரச்சினையால் நடக்கவில்லை என்று வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு சாதியினர் சொன்னபோதும், இந்த தாக்குதலையொட்டி, சமூக அரசியல் களத்தில், இன்று காதல் திருமணம் என்பது விவாதத்துக்குரிய விஷயமாக மாறியிருக்கிறது. இது இப்படி விவாதத்துக்கு உட்படுவது எனக்கு நல்லதாகவே படுகிறது. எது காதல், எப்படி காதலிப்பது, எப்போது காதலிக்கலாம், எந்தக் காதலை ஏற்கலாம், நிராகரிக்கலாம் என்றெல்லாம் அரசியல் தலைவர்களே பேசவேண்டிய கட்டாயம் வந்திருப்பது நல்லது.
மாற்று சாதிப் பெண்களை மயக்கி தங்களைக் காதலிக்க வைத்து பின்னர் ஏமாற்றி பணம் பறிக்கும் வேலையில் தலித் இளைஞர்கள் ஈடுபடுவதாக டாக்டர் ராமதாஸ் பகிரங்கமாகவே புகார் சொல்கிறார்.  திட்டமிட்டு ஒரு பெண்ணை மயக்கிக் கவிழ்த்து பணம் பறிக்கும் கயமையுடையவர்கள் எல்லா சாதிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் ஏமாற்றுவது மறு சாதிப் பெண்ணை மட்டும் அல்ல, தன் சுய சாதிப் பெண்ணையும்தான். வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு சிக்கியவர்களைப் பற்றி ஏராளமான செய்திகளை காலம் காலமாகப் படித்து வருகிறோம்.அவர்களை அம்பலப்படுத்தி வழக்கமான கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை யாரும் எதிர்க்கமாட்டார்கள். அப்படி பெண்ணை ஏமாற்றுவோர் இந்தக் குறிப்பிட்ட சாதியில்தான் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுச் சொல்வதுதான் சாதிவெறி. இந்த சாதியினரெல்லாம் குற்றம் செய்யக்கூடியவர்கள் என்று சில சாதிகளை ஆங்கில ஆட்சியில் வரையறுத்தது போல, இந்த சாதியினர் போலிக் காதலர்கள் என்று புதிய  வரையறையை ராமதாசும அவருடன் அணி சேர்ந்திருக்கும் இதர சாதித்தலைவர்களும் உருவாக்குகிறார்கள்.
ஜீன்ஸ் போட்டுக் கொண்டு கூலிங் கிளாஸ் மாட்டிக் கொண்டுப் பெண்களை மயக்கிவிடுகிறார்கள் என்று ராமதாஸ் சொல்கிறார். காதல் இவ்வளவு ஈசியானதென்று எனக்குத்தெரியாமல் போய்விட்டது. நானும் வயசுக் காலத்தில் ஜீன்ஸ் போட்டுத் திரிந்திருக்கிறேன். அதைப் பார்த்து ஒருத்தியும் என்னைக் காதலிககவில்லை. கூலிங் கிளாஸ் போடமுடியாமல் திக் கண்ணாடி போட்டிருந்ததுதான் தப்போ என்னவோ ?!  இன்று ஜீன்ஸ், கூலிங் கிளாசைப் பார்த்தே மயங்கிவிடும் நிலையில் தங்கள் சாதிப் பெண்கள் இருக்கிறார்கள் என்றால் அது ஏன்அப்படி என்றும்,  அதை சரி செய்ய என்ன வழி என்றும்தான் ராமதாசும் இதர சாதித் தலைவர்களும் கவலைப்படவேண்டும்.
எந்தப் புரிதலும் இல்லாமல், கண்டதும் காதல் என்று வெறும் பாலியல் கவர்ச்சியைக் காதல் என்று இன்று பல யுவன்களும் யுவதிகளும்  குழப்பிக் கொள்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது ராமதாஸ் சொல்வது போல தலித் இளைஞர்கள் மத்தியில் மட்டும் நடக்கும் விஷயமல்ல. எல்லா சாதிகளிலும் இருக்கும் ஆண்கள், பெண்கள் மத்தியில் காதலைப் பற்றிய சரியான புரிதலே இல்லாத  விடலைத்தனம் இருக்கிறது.
காதல் பற்றிய அந்த விடலைத்தனத்துக்கு உரம் போட்டு நீர் ஊற்றி வளர்ப்பது யாரென்று அடையாளம் காணவேண்டும். அது சினிமாதான். ”அறியாத வயசு. புரியாத மனசு . ரெண்டும் சேர்ந்து காதல் செய்யும் நேரம்” என்று ‘காதலை’ கிண்டர்கார்டனுக்கே கொண்டு போனது தமிழ் சினிமாதான். அது காட்டி வருவது காதலே அல்ல. காமப் பசியைத் தான் காதல் என்று சித்திரித்துக் கொண்டிருக்கிறது. விடலை மனங்களுக்கு சினிமா கற்றுக் கொடுத்திருக்கும் ஈவ் டீசிங் கொஞ்சநஞ்சமல்ல. பள்ளிக் கூடத்துக்கு படிக்கப் போகும் மாணவியின் சைக்கிளை மடக்கிப் பிடித்து வைத்துக் கொண்டு என்னை லவ் பண்ணாதான் விடுவேன் என்று மிரட்டும் பொறுக்கியை தமிழ் சினிமா ஹீரோவாகக் காட்டுகிறது சினிமாவில் அந்தப் பெண் ஏழெட்டு முறை மிரட்டலுக்குப் பின் அந்தக் ‘காதலை’ ஏற்றுக் கொண்டு விடுவாள். வாழ்க்கையில் என்ன நடக்கும்? ஒரே சாதிக்காரராயிருந்தால், முதல்முறை டீசிங்குக்குப் பிறகு அந்தப் பெண்ணை ஸ்கூலுக்குப் போகாதே என்று நிறுத்திவிடுவார்கள் .எதிரெதிர் சாதியானால் இது சாதிக் கலவரமாக மாறிவிடும். அடுத்த சினிமாவில் குழந்தை உழைப்பை நிறுத்தி கல்வி தரவேண்டிய அவசியம் பற்றி உபதேசிக்கலாம்.
கடந்த பத்தாண்டுகளில் வந்திருக்கும் தமிழ்ப்படங்களில் பெரும்பாலானவை, மீடியாவால், பத்திரிகைகளால் கொண்டாடப்பட்டவை, விருதுகள் பெற்றவை பொறுக்கிகள், பொறுக்கித்தனம், பெண்ணை வலுக்கட்டாயமாகக் காதலிக்கவைத்தல் போன்ற அம்சங்களையே கதாநாயக அம்சங்களாக உயர்த்திப் பிடித்தவை. விதிவிலக்கான நல்ல படங்கள் மிகச் சில. பெண் உடலுக்கு ஆணும் ஆண் உடலுக்குப் பெண்ணும் ஆசைப்பட்டு ஏங்குவதும் அதை அடைய விதவிதமான வன்முறையில் ஈடுபடுவதையுமே காதல் என்று வணிகப் படங்கள் நம்மை நம்பவைத்து வருகின்றன. இவற்றின் ஒட்டு மொத்த விளைவு என்ன ? காம உணர்ச்சியால் மட்டும் உந்தப்பட்ட இளைஞர்கள் தன்னை காதலிக்காத,  தனக்குக் கிடைக்காத பெண்ணை அழித்துவிடும் வெறியுடன் ஆசிட் ஊற்றும் வரை போகிறது. நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் சென்னையில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறாள் காரைக்கால் விநோதினி. ஏழைப்பெண். படித்து வேலைக்குப் போய் தன் குடும்பத்தைக் காப்பாற்றும் கட்டத்துக்கு வந்த சமயத்தில் விடலை இளைஞன் செய்த ஆசிட் தாககுதலினால் இரு கண்பார்வையையும் இழந்து அவள் உயிருக்குப் போராட,  அவளைக் காப்பாற்றத் தேவையான சிகிச்சைக்கே பல லட்சங்களையும் திரட்ட  அவளுடைய ஏழைப் பெற்றோர் கடுமையாகப் போராடிக் கொண்டிருகிறார்கள்.
இந்த விடலை வக்கிரங்களின் ஊற்றுக் கண்ணான படங்களை எடுத்தவர்கள்- பணம் போட்டவர் முதல் எழுதி இயக்கி நடித்தவர் வரை – பல சாதிகளையும் சேர்ந்தவர்கள். இந்தப் படங்களால் மனம் பேதலிக்கும் விடலைகளும் பல சாதிகளிலும் இருப்பவர்கள்தான். இப்படிப்பட்ட படங்களுக்கெதிராக அனைத்து சாதியினரும் ஒன்று சேர்ந்துதான் எதிர்க்க வேண்டுமே தவிர,  உங்க சாதிப் பையன்கதான் மோசம், எங்க சாதிப் பொண்ணுங்க அப்பாவி என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பது அர்த்தமற்றது.
சிறு வயதிலிருந்தே ஆணும் பெண்ணும் சகஜமாகப் பழகி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள விடாமல் தடுக்கும் சமூகத்தில், எது காதல் என்ற குழப்பம் ஏற்படுவதே இயற்கை. தன் உடலில் ஏற்படும் மாற்றங்கள், மனதில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியெல்லாம் விடலை வயதில் அறிவுப்பூர்வமாக தெரிந்துகொள்ள வழியில்லாமல் வளரும் சிறுவரும் சிறுமியும் காம ஈர்ப்பை காதல் என்று மயங்குவதுதான் நடக்கும். படிப்பு, சொந்தக் காலில் நிற்பதற்கான வேலைவாய்ப்பு, சம்பளம் இவற்றையெல்லாம் இருவரும் அடைந்தபின்னர்தான் நாம் சேர்ந்து நமக்கான குடும்பத்தை உருவாக்கமுடியும், ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான பரஸ்பர மதிப்பும் அன்பும் நம்மிடையே இருக்கிறதா என்ற அறிவு முதிர்ச்சி இல்லாமல் உருவாகும் எந்தக் காதலும் உடல்களைத் தாண்டி நீடிக்காது.
நம் சமூகப் பிணிகளில் ஒன்றான சாதியை ஒழிக்க காதல் திருமணங்கள் நிச்சயம் உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் சாதி கடந்த திருமணங்கள் எளிதானவை அல்ல.  பாரதி தன் சந்திரிகை என்ற நாவலிலே, கோபால அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை வருணித்திருக்கிறார். அது பாரதியின் லட்சியங்களில் ஒன்று. ஆனால் பாரதிக்கு அடுத்த தலைமுறையான புதுமைப்பித்தன் காலத்திலும் சாதி கடந்த கலப்பு மணம் எளிதாகிவிடவில்லை. பாரதியின் லட்சியத்தை புதுமைப்பித்தன் பகடி செய்து ஒரு கதையே எழுதியிருக்கிறார்.  கதைக்கு ஒரு முன்குறிப்பு எழுதும் புதுமைப்பித்தன்,  “கதையின் போக்கு ‘கண்டதும் காதல்’ என்ற கோபால அய்யங்காரின் இலட்சியத்துடன் – ஏன் பிரமை என்றும் கூறலாம் – முடிவடைகிறது. முடிவு பெறாத இரண்டாவது பாகத்தில் வருணிப்பாரோ, என்னவோ? மனிதன், ‘காதல் பெண்ணின் கடைக்கண் பணியிலே’ அனலை விழுங்கலாம், புளித்த குழம்பையும் குழைந்த சோற்றையும் உண்ணச் சம்மதிப்பானோ என்னவோ? பின் கதையை என் போக்கில் எழுதுகிறேன். பாரதியின் போக்கு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதில்லை” என்று ஆரம்பிக்கிறார். அவர் கதையில் மீனாட்சியால் கோபாலய்யங்காரின் சைவ உணவுமுறைக்கு மாற முடியாத கஷ்டம் சித்திரிக்கப்படுகிறது. புதுமைப்பித்தன் சொல்லும் தீர்வு தம்பதிகள் மது அருந்துவதும், கோபாலய்யங்கார் அசைவ உணவுக்கு மாறுவதும்தான் !.
சாதி, மதம் கடந்த கலப்புத் திருமணங்கள் வெற்றி பெற பல அம்சங்கள்  முக்கியமானவை. உணவுப் பழக்கத்தில் அவரவர் விருப்பத்தை மற்றவர் மதிக்கும் அம்சம் அதில் ஒன்று. சாதி மதம் சார்ந்த குடும்பப் பழக்க வழக்கங்கள் அடுத்தவை. இருவருமே தங்கள் வாழ்க்கையின் இனிமைக்கு சாதியோ மதமோ பிரதானமானதல்லல /தேவையில்லை என்ற அறிவுடன் இருப்பது முக்கியம். இருபக்க உறவினர்களும் இழுக்கும் இழுப்புகளுக்கெல்லாம் ஆட்படாமல் சுயமாக சிந்திக்கவும் அதன்படி செயல்படுவதற்குமான ஆற்றல் தேவை. இதையெல்லாம் அவர்களுக்கு எது தரும் ? சுயசார்பு இருக்க வேண்டும். அறிவு முதிர்ச்சி இருக்க வேண்டும்.இருவருக்கும் ஒருவர் மீது மற்றவருக்கு அன்பும் மதிப்பும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட காதல் விடலை வயதில் எப்படி சாத்தியம் ? அதுவும் காதல் என்றால் காமம் என்றே நமபவைக்கும் சினிமா சூழலில் ? ஒரு சிறுவனும் சிறுமியும் பேசினாலே   கற்பு பறிபோய்விடும் என்று அஞ்சும் சமூக சூழலில் ?  தன் உடலைத் தானே புரிந்து வசப்படுத்த இயலாத வாழ்க்கை முறையில் ?  இந்தச் சூழலை  மாற்றினால்தான் மெய்யான காதல் தழைக்க முடியும். மெய்யான காதலே சாதி மதங்களைக் கடக்கும் வல்லமையுடையது. அப்படிப்பட்ட காதலர்களை எந்த வயதில் பார்த்தாலும் நம் மனதிலும் காதல் ஊறும் என்பது என் அனுபவம். என் கண்ணெதிரே நான் பார்த்தவர்கள் பாப்பாவும் உமாநாத்தும். கிருஷ்ணம்மாளும் ஜெகந்நாதனும் ! gnani.net

கருத்துகள் இல்லை: