புதன், 19 டிசம்பர், 2012

கறுப்புப் பணம் பதுக்கல்: 8ஆவது இடத்தில் இந்தியா

By வாஷிங்டன்
 கறுப்புப் பணம் பதுக்கல் முறைகேட்டில் உலகளவில் இந்தியா 8ஆவது இடம் பிடித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த உலக நிதித்துறை ஒருங்கமைவு (ஜிஎஃப்ஐ) என்னும் அமைப்பு இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
"2001-2010ஆம் ஆண்டுகளில் வளரும் நாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கல்' என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை இந்நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இந்தியா 8 ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இருந்து 12,300 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.6.76 லட்சம் கோடி) சட்டவிரோதமாக வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. சீனா 27,400 கோடி அமெரிக்க டாலர்களுடன் (சுமார் ரூ.150.73 லட்சம் கோடி) இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மெக்ஸிகோ, மலேசியா, சவூதி அரேபியா, ரஷியா, பிலிப்பின்ஸ், நைஜீரியா ஆகிய நாடுகள் முறையே 2 முதல் 7வரையிலான இடத்தைப் பிடித்துள்ளன. முதல் 20 இடங்களில் தெற்காசியாவில் இருந்து இந்தியா மட்டுமே இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜிஎஃப்ஐ நிறுவனத்தின் முதன்மை பொருளாதார நிபுணர் தேவ் கர் கூறியது:
கறுப்புப் பணமாக ரூ.6.76 லட்சம் கோடி இந்தியாவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது நாட்டுக்கு பேரிழப்பாகும்.

இந்தத் தொகை வெளிநாடுகளில் பதுக்கப்படாமல் இருந்திருந்தால் கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்புகளில் இந்தியா முதலீடு செய்திருக்க முடியும். இதில் குறிப்பிட்ட தொகை, மின்சார உள்கட்டமைப்பில் முதலீடு செய்யப்பட்டிருந்தால் கடந்த கோடை காலத்தில் ஏற்பட்ட பெரும் மின்தட்டுப்பாட்டைத் தவிர்த்திருக்க முடியும் என்றார்.
கறுப்புப் பணத்தை தடுக்க கடந்த சில ஆண்டுகளாக இந்தியா நடவடிக்கை எடுத்து வந்த போதும், அந்நாட்டின் வளம் கறுப்புப் பணத்தால் இழப்புக்குள்ளாவது தொடர்கிறது என்று ஜிஎஃப்ஐ இயக்குநர் ரேமண்ட் பாக்கர் தெரிவித்துள்ளார்.  dinamani.com

கருத்துகள் இல்லை: