ஞாயிறு, 16 டிசம்பர், 2012

மதுரை ஆதீனத்தை அரசு ஏற்க தடை கோரிய மனு தள்ளுபடி

மதுரை ஆதீன மடத்தை அரசு ஏற்கும் வழக்குக்கு தடை கேட்ட அருணகிரிநாதரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அறநிலையத் துறையையும், மதுரை தெற்கு சார்பதிவாளரையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மதுரை ஆதீன மடம் நிர்வாகத்தை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால் மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை, ஆதீன மடம் நிர்வாகம் தொடர்பாக அருணகிரிநாதரும், நித்தியானந்தாவும் சேர்ந்து ஏற்படுத்திய அறக்கட்டளைக்கு தடை விதிக்க வேண்டும். ஆதீன மட சொத்துக்களில் அருணகிரிநாதர் மற்றும் அவரது ஆட்களால் வில்லங்கம் ஏற்படுத்த கூடாது என இடைக்கால உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அருணகிரிநாதர் சார்பில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனுவில், ‘ஆதீன மடத்தை அரசு ஏற்பது தொடர்பாக 1994ல் சப்-கோர்ட்டில் அரசு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு 2001ல் தள்ளுபடியானது. அந்த உத்தரவை மறு சீராய்வு செய்யக்கோரி அரசு சார்பில் அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதே கோரிக்கைக்காக இந்த மனுவை அறநிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்துள்ளார். கீழ் கோர்ட்டில் அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு விசாரணை முடியும் வரையில் தற்போது அறநிலையத்துறை தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க தடை விதிக்க வேண்டும்“ என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி குருவையா விசாரித்து தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தார்.இந்நிலையில், அருணகிரிநாதர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார். அந்த உத்தரவில், “கீழ்கோர்ட்டில் அரசு தாக்கல் செய்துள்ள மனு இன்னும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை. இந்த சூழ்நிலையில், இந்த மனு விசாரணைக்கு தடை விதிக்க அருணகிரிநாதர் உரிமை கோர முடியாது“ என குறிப்பிட்டிருந்தார்.இதே கோர்ட்டில் அருணகிரிநாதர் மற்றொரு மனுவும் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:  இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா, அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இளைய ஆதீனமா இருந்தபோது நானும், அவரும் சேர்ந்து ஆதீன சொத்துக்களை நிர்வகிக்க அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தினோம்.

அதை மதுரை தெற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். தற்போது நித்தியானந்தா நீக்கப்பட் டுள்ள நிலையில், அந்த அறக்கட்டளையும் கலைக்கப்பட்டு விட்டது. இதனால் அறக்கட்டளைக்கான பதிவை ரத்து செய்ய தெற்கு சார்பதிவாளரிடம் மனு அளித்தோம். அவர் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த அறக்கட்டளை பதிவை ரத்து செய்ய தெற்கு சார்பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். நித்தியானந்தாவும், அவரது ஆட்களும் மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய தடைவிதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.நித்யானந்தா மனு: இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவில் அறநிலையத்துறையையும், மதுரை தெற்கு சார்பதிவாளரையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என நித்தியானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி குருவையா நேற்று உத்தரவிட்டார். பின்னர், அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் 17ம் தேதிக்கு நீதிபதிக்கு தள்ளி வைத்தார்  dinakaran.com

கருத்துகள் இல்லை: