திங்கள், 10 செப்டம்பர், 2012

Jeyalalitha's latest தமாஷ்.அண்ணா வளைவு அகற்றம் பத்திரிகை செய்தி மூலம்அறிந்து கொண்டேன்

அண்ணா வளைவு தமாஷ்: ஜெயலலிதா வீட்டு ‘பேப்பர் பாய்’ பொறுப்பு ஏற்கிறார்! முதல்வர் வீட்டுக்கு பேப்பர் போடும் நபர், ஒரு வாரத்துக்கு மேல் பேப்பர் போடாமல் டிமிக்கி கொடுத்து விட்டார்.. அல்லது பழைய பேப்பர் போடுகிறார்!

Viruvirupu
“சென்னை அண்ணா நகரில் உள்ள பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவை அகற்ற நான் உத்தரவிடவில்லை” இந்த அதிரடி அறிவிப்பு, முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து வந்துள்ளது!
முதல்வர் தமது அறிக்கையில் என்ன சொல்கிறார்?
“சென்னையில் அண்ணா வளைவை அகற்ற முதலில் அனுமதி அளித்துவிட்டு, இடிப்புப் பணிகள் பாதியளவு முடிந்த பின்னர், இடிக்கக் கூடாது என நான் திடீரென உத்தரவிட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.அப்படிங்களா ?

2010-ம் ஆண்டு முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின்போதுதான், ரூ.117 கோடியில் நெல்சன் மாணிக்கம் சாலை – அண்ணாநகர் 3-வது நிழற்சாலை சந்திப்பை இணைத்து மேம்பாலம் கட்ட அனுமதிக்கப்பட்டது. 2011-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று, நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, முந்தைய அரசால் விட்டுச் செல்லப்பட்ட பணிகள் வழக்கமாக மேற்கொள்ளப்படுவதுபோல், இந்த மேம்பாலப் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த மேம்பாலப் பணி குறித்தோ அல்லது அண்ணா வளைவு அகற்றப்படுவது குறித்தோ என்னிடம் யாரும் கலந்தாலோசிக்கவில்லை. நான் எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
அரசின் அனைத்து முடிவுகளும் முதல்வர் ஒப்புதல் பெற்று வெளியிடப்படுவதில்லை என்பது 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்குத் தெரியாதா? அரசின் அலுவல் விதிகளின்படி பல்வேறு நிலைகளில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பது கருணாநிதிக்கு தெரியாதா? தெரிந்து கொண்டே, வேண்டுமென்றே, அதிகாரிகள் நிலையில் முடிவு செய்து அண்ணா வளைவை அகற்ற முடிவு செய்திருக்க முடியாது என்று கூறியுள்ளாரா? அல்லது அரசு நிர்வாகம் எப்படி செயல்படும் என்று தெரியாமலேயே முதல்வராக காலத்தை தள்விட்டு இது போன்ற கேள்வியை தனக்குத் தானே எழுப்பி பதிலளிக்கிறாரா?
இந்தக் கேள்விகளுக்கு, 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிதான் பதில் சொல்ல வேண்டும்.
மேம்பாலம் அமைக்க முந்தைய தி.மு.க. ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டபோதே, அந்தப் பாலம் பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு வழியாகத்தான் செல்லும் என்பதும், அதனை அகற்ற வேண்டும் என்பதும் கருணாநிதிக்குத் தெரியாதா? ஒரு வேளை பேரறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். புகழ்பாடும் வகையில் சென்னையின் அடையாளச் சின்னமாக அமைந்துள்ள இந்த வளைவை அகற்றும் எண்ணத்தில் மேம்பாலப் பணிக்கு தான் வழங்கிய உத்தரவு இன்று எனது முடிவால் தடைபட்டு விட்டதே என்ற கோபத்தில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார் போலும்.
எது எப்படியோ, முந்தைய தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட இந்த முடிவு எனது கவனத்திற்கு முன்பே கொண்டுவரப்பட்டு இருந்தால், அண்ணா வளைவை இடிக்காமல் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளுமாறு நிச்சயம் உத்தரவிட்டு இருப்பேன்.
அண்ணா வளைவு அகற்றப்படுவது குறித்து பத்திரிகைகளில் வந்த செய்தியின் மூலம்தான் நான் அறிந்து கொண்டேன். உடனே, சென்னை மாநகரின் அடையாளச் சின்னமாக விளங்கும் அண்ணா வளைவை அகற்றும் பணியை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். மேலும், அண்ணா வளைவை அகற்றாமல் மேம்பாலப் பணியை நிறைவேற்றிட ஆய்வு செய்யுமாறும், அது குறித்து விரிவாக விவாதிக்கப்படலாம் என்றும் உத்தரவிட்டேன்” என்று முதல்வரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எமது சந்தேகங்கள்:
1) தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள், தற்போதைய அ.தி.மு.க. அரசால் நிறைவேற்றப்படுகின்றனவா? எப்போது முதல் இது நடைபெறுகிறது? அ.தி.மு.க. அரசு செய்த முதல் வேலையே, தி.மு.க. திட்டங்களை குழி தோண்டிப் புதைத்தது அல்லவா?
2) ரூ.117 கோடியில் மேம்பாலம் அமைக்கும் திட்டம் ஒன்று முதல்வர் கவனத்துக்கே வராமல், அதிகாரிகள் மட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறதா? ஏங்க.. இந்தம்மா தமிழகத்தை பற்றித்தான் சொல்றாங்களா?
3) “அண்ணா வளைவு அகற்றப்படுவது குறித்து பத்திரிகைகளில் வந்த செய்தியின் மூலம்தான் நான் அறிந்து கொண்டேன்” என்கிறார் முதல்வர். பாதி இடிக்கப்பட்ட நிலையில்தான் பத்திரிகை பார்த்தாரா? இடிக்கப்படுவதற்கு கிரேன் போவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே இந்த செய்தி மீடியாவில் அடிபட்டதே!
பாருங்கள்..  முதல்வர் வீட்டுக்கு பேப்பர் போடும் நபர், ஒரு வாரத்துக்கு மேல் பேப்பர் போடாமல் டிமிக்கி கொடுத்து விட்டார்.. அல்லது பழைய பேப்பர் போடுகிறார்!
அமைச்சர்களுக்கு அவ்வப்போது கல்தா கொடுப்பதுபோல, முதல்வர் வீட்டுக்கு பேப்பர் போடும் நபரையும் அவ்வப்போது மாற்ற வேண்டும்!

கருத்துகள் இல்லை: