திங்கள், 10 செப்டம்பர், 2012

சாய்பாபா மரணத்தில் மர்மம்: சிபிஐ விசாரணை கோரி ஆந்திர வியாபாரி வழக்கு

ஹைதராபாத்: சத்ய சாய்பாபா மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகவும், அதனால் அது குறித்து சிபிஐ விசாரணைக்கு  உத்தரவிட வேண்டும் என்றும் கூறி ஆந்திராவைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் ஹைதராபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
புட்டபர்த்தி சத்ய சாய்பாபா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது சொத்துக்கள் சாய் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் சாய்பாபாவின் சீடரான சத்யஜித் அண்மையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் சாய்பாபாவின் உயில் விவரங்களை தெரிவித்தார்.

தனது சொத்துக்கள் அனைத்தும் பக்தர்களின் நன்கொடையால் வந்தவை என்பதால் தனது மறைவுக்குப் பிறகு அவை அனைத்தும் ஏழைகளுக்கே செல்ல வேண்டும் என்று அவர் தனது உயிலில் குறிப்பிட்டுள்ளதாக சத்யஜித் தெரிவித்தார். இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சாய்பாபாவின் மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகவும், அதனால் அது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் ஹைதராபாத்தைச் சேர்ந்த வியாபாரி கே. ரமேஷ் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து அவர் ஹைதராபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
சாய்பாபா மரணத்தின்போது அவர் தங்கியிருந்த அறையில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள தங்கம், மற்றும் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் பரவியது. சாய்பாபாவுக்கு சிசிக்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல் அனைத்துமே உறுதி செய்யப்படவில்லை.
மேலும் சாய்பாபா தனது சொத்து பற்றி உயில் எழுதவில்லை என கூறப்பட்டது. இப்போது உயில் எழுதி இருப்பததாக அவரது சீடர் சத்யஜித் கூறுகிறார். அவர் ஏன் இதனை இவ்வளவு தாமதமாக சொன்னார் என்பதும் புரியவில்லை.
தற்போதைய அறக்கட்டளை குழுவினர் ஆசிரம சொத்துக்களை தங்கள் சொத்துபோல பாவிக்கிறார்கள். எனவே சாய்பாபா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி எல்லா உண்மைகளையும் வெளிக் கொண்டுவர வேண்டும். மேலும் திருப்பதி கோவில்போல் ஆசிரமத்துக்கு அறங்காவலர் குழு நியமிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: