செவ்வாய், 11 செப்டம்பர், 2012

காலை 6 முதல் மாலை 6 வரை நடந்தது என்ன? கூடங்குளம் கலவரம் TIMELINE

viruvirupu.com
கடந்த ஓராண்டுக்கும் மேலாக அமைதியாக நடைபெற்று வந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம், வன்முறையில் முடிந்தது. இடிந்தகரை, கூடங்குளம், வைராவிக்கிணறு ஆகிய இடங்களில் நேற்று தொற்றிக் கொண்ட பதட்டம், தடியடிப்பிரயோகம், கண்ணீர் புகை குண்டு வீச்சு, வீட்டுக்கு வீடு தேடுதல் என்று மாறிமாறி நடந்த காட்சிகள் இதோ:
காலை
0600: இடிந்தகரை உண்ணாவிரத பந்தலில் பெரியளவில் கூட்டமில்லை. காலை உணவு தயாரித்து வழங்கப்பட்டது.
0700: பந்தலில் இருந்த ஏற்பாட்டாளர்கள், ஊருக்குள் சென்று அறிவித்தல் செய்ய ஆளனுப்பினர். சுற்றுவட்டார கடற்கரை கிராம மக்கள் வரத்  தொடங்கினர்.
0800: போராட்ட நடவடிக்கைகளை விளக்கும் கூட்டம் நடைபெற்றது. போராட்டம் முடியும்வரை யாரும் ஊருக்குள் போகவேண்டாம் என்று சொல்லப்பட்டது.
0900: பக்கத்து கடலோர கிராமங்களுக்கும் தகவல் போய், மக்கள் படகுகள் மூலமாக இடிந்தகரை நோக்கி வந்தனர்.

0930: போராட்டம் நடைபெறும் இடத்துக்கு இப்போதுதான் மிக அதிகளவில் ஆண்கள், பெண்கள் சாரை சாரையாக வந்தனர். குறுகிய நேரத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து சேர்ந்தனர்.
1000: போலீஸ் பார்த்துக் கொண்டிருக்க, மக்கள் அணுமின் நிலையத்தை நோக்கி நடக்க தொடங்கினர். 500 மீட்டர் தூரம் முன்னேறினர். 10 படகுகளிலும் கடல் வழியாக அணுமின் நிலையத்தை நெருங்கினர்.
1030: போலீஸ் முதல் தடவையாக மக்களை தடுத்தது. போராட்ட குழுவை சேர்ந்த டென்சிங் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
1100: கலெக்டர், எஸ்.பி. மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது என ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1115: கைதான இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது, போலீசாருக்கும், போராட்ட குழுவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
1130: நிலைமை மோசமடைய தொடங்கியது. தென்மண்டல ஐஜி ராஜேஷ்தாஸ் பேச்சுவார்த்தை நடத்த மக்கள் முன் வந்தார். அவர் 2 நிமிடங்கள் பேசுவதற்குள், அவர் மீது தாக்குதல் நடத்தினர். அவரைக் காப்பாற்றச் சென்ற இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கல்லெறியால் ரத்தம் வழிந்தது.
1135: வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு கொடுக்கப்பட்டது. ஒரு பகுதி மக்கள் சிதறி ஓடினர்.
1145: மற்றொரு பகுதி மக்கள், போலீஸை தாக்கத் தொடங்கினர். போலீசார் மீது மண், கற்கள் வீசப்பட்டன.
மதியம்
1200: போராட்டம் கலவரமாக மாறியது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீச உத்தரவு கொடுக்கப்பட்டது.
1230: கூடங்குளம் கிராமத்தில் இருந்து மேலும் மக்கள் ஓடிவர தொடங்கினர்.
1245: கிராமத்துக்குள் நடமாட்டம் குறைந்ததை தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு பிறகு எஸ்பி விஜயேந்திர பிதாரி தலைமையில் போலீசார் கூடம்குளம் கிராமத்துக்குள் புகுந்தனர்.
1300: போராட்டத்தில் ஈடுட்ட நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் கைது செய்யப்பட்டனர். கடற்கரையில் கூட்டம் குறைந்தது.
1330: கூடங்குளம் கிராமத்துக்குள் வன்முறைச் சம்பவங்கள் தொடங்கின. சிறு எண்ணிக்கையிலான ஒரு குழு, பெற்றோல் கேன்களுடன் களத்தில் குதித்தது. பஞ்சாயத்து, வி.ஏ.ஓ. அலுவலகங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.
1345: இரு டாஸ்மாக் கடைகள், பார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அவற்றுக்கும் தீ வைக்கப்பட்டது.
1400: கூடங்குளம் பள்ளி மாணவர்களும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
1430: வைராவிகிணறு ஏரியாவுக்கு போலீஸ் சென்றனர். ஐஜி ராஜேஷ்தாஸ், டிஐஜி வரதராஜூ ஆகியோர் தலைமையில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியபடி முன்னேறினர்.
மாலை
1500: பள்ளி மாணவர்களை முன்னிறுத்தி, போலீசார் மீது பாட்டில், கற்களை வீச வைத்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸ் திகைத்தது.
1500: கலவரத்தை அடக்க கூடங்குளம் மெயின் ரோடு, பைபாஸ் பகுதி ஆகியவற்றில் இரு குழுக்களாக பிரிந்து போலீசார் வந்தனர்.
1545: போராட்டக்காரர்களை கைது செய்ய வீடு வீடாக சோதனை தொடங்கியது.
1600: வீடுகளுக்குள் புகுந்து போலீஸ் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் திரண்டனர். திரண்ட கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீச உத்தரவு கொடுக்கப்பட்டது.
1630: ரஷ்யா பத்திரிக்கையாளர் குழுவினர் 9 பேர் தமது வாகனத்தில் கலவரப் பகுதிகளுக்கு செல்ல முயன்றனர். அவர்களது வாகனம் செல்ல எஸ்பி அனுமதி மறுத்ததால், வாக்குவாதம் நடந்தது. இறுதிவரை வாகனம் செல்ல போலீஸ் அனுமதிக்காத காரணத்தால், அவர்கள் நடந்தே இடிந்தகரை சென்றனர்.
1645: போலீஸாரை திருப்பி அழைக்குமாறு உத்தரவு வந்தது. கலவரப் பகுதிகளில் இருந்த போலீசார் அனைவரும் வைராவிகிணறு, தாமஸ் மண்டப பகுதிகளுக்கு திருப்பி அழைக்கப்பட்டனர்.
1700: போலீசார் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, இடிந்தகரை லூர்து மாதா ஆலயம் முன் போராட்டக் குழுவினர் திரண்டு ஆலோசனை நடத்தினர்.
1800: உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. கிராம மக்கள் குடும்பத்தினரோடு உண்ணாவிரதம் இருக்க தொடங்கினர். உண்ணாவிரதம் தற்போதும் தொடர்கிறது.

கருத்துகள் இல்லை: