செவ்வாய், 11 செப்டம்பர், 2012

கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதரவு: ஷிண்டே

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்திற்கு, வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் ஆதரவு அளித்து வருகின்றன; அவற்றின் பெயர்களை, இப்போதைக்கு வெளியிட இயலாது. இன்னும் நிறைய அணு மின் நிலையங்கள், அமைக்க வேண்டும் என்பதே, அரசின் கொள்கை,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்ற பின், முதன் முறையாக, டில்லியில் நேற்று நிருபர்களை சந்தித்த, சுஷில்குமார் ஷிண்டே கூறியதாவது:உள்துறை அமைச்சராக, சிதம்பரம் இருந்தபோது, மாதாந்திர அறிக்கை சமர்ப்பித்துப் பேசுவார். அந்த நடைமுறையை, நானும் தொடர முடிவு செய்துள்ளேன். "தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்' அமைப்பது, நல்ல யோசனை. ஆனால், அது அனைத்து மாநில முதல்வர்களின், சம்மதத்துடன் இருக்க வேண்டும்.
சில மாநிலங்களுக்கு, இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்துவதில், பிரச்னைகள் இருப்பதாக தெரிகிறது; இவை களையப்பட வேண்டும். எனவே, அனைத்து மாநில, முதல்வர்களின் கூட்டத்தை, மீண்டும் ஒரு முறை கூட்டி, இந்த விவகாரம் குறித்து, ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் அச்சங்களை போக்கி, அதன்பின், இந்த அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தும்.

பீகார் மக்களுக்கு எதிராக, ராஜ் தாக்கரே பேசி வருவது தவறானது. எந்த மாநிலத்திற்கும் சென்று, மக்கள் வசிக்கலாம். இதைத் தடுக்கவோ, எதிர்க்கவோ, எந்த தாக்கரேக்களுக்கும் உரிமையில்லை. அசாமில், படிப்படியாக வன்முறை குறைகிறது. அங்கு கலவரத்தால், இடம் பெயர்ந்த மக்கள், மீண்டும் தங்களது பகுதிகளுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முகாம்களில் இருந்து சொந்த வீடுகளுக்கு மக்கள் திரும்ப, எல்லா வித உதவிகளும் செய்யப்படுகின்றன.கூடங்குளத்தைப் பொறுத்தவரை, அங்கு பிரச்னையை அதிகரிப்பதும், வன்முறையை தூண்டி விடுவதும் நடக்கிறது. போராட்டக்காரர்களின் பின்னணியில், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவை தான், பிரச்னையை தூண்டி விடுகின்றன. தொண்டு நிறுவனங்கள், எவை எவை என்பது பற்றிய, பெயர் விவரங்களை இப்போது வெளியிட இயலாது.

பிரதமரைப் பொறுத்தவரை, மிகவும் தெளிவாக உள்ளார். அணு மின்சாரமே விலை குறைவானது; அதனால், சுற்றுச்சூழல் மாசுபடாது. இதைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பல பகுதிகளில், இன்னும் பல, அணு மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவே, மத்திய அரசின் உறுதியான கொள்கை,நாட்டின் எல்லைப் புறங்களில், ஊடுருவல்கள் அதிகரிப்பதை தடுக்க, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இவ்வாறு சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை: