வியாழன், 13 செப்டம்பர், 2012

தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும்.. இலங்கை பயணிகள் தாக்குதலுக்கு

சென்னை: தமிழகம் வந்த இலங்கை பயணிகள் மீது, நடந்த தாக்குதலுக்கு, ஜெயலலிதாவின்  வாக்குவேட்டை நோக்கம் மற்றும் அலட்சியம் தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கத் தவறி விட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது, வழக்கு கூட பதிவு செய்யவில்லை
 இலங்கை, புத்தளம் மாவட்டம், சிலாவம் பகுதியைச் சேர்ந்த, 65 ஆண்கள், 83 பெண்கள், 36 குழந்தைகள் என, 184 பேர், வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவுக்காக, நான்கு குழுக்களாக, செப்., 2ம் தேதி, விமானம் மூலம் தமிழகம் வந்தனர். தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா கோவில், வேளாங்கண்ணி மாதா கோவில், சென்னை சாந்தோம் சர்ச் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இவர்கள் பயணத் திட்டப்படி, வேளாங்கண்ணியில், 8ம் தேதி வரை தங்கி, பின், 15ம் தேதி வரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புனித யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால், தமிழகத்தில் வந்து இறங்கிய அவர்களுக்கு, அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் அரங்கேறின.
அடக்கவில்லை:
இவர்கள் வருகை குறித்து தகவலறிந்த, ம.தி.மு.க., - வி.சி., உள்ளிட்ட புலிகள் ஆதரவு அமைப்பைச் சேர்ந்தவர்கள், பூண்டி மாதா கோவிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்களை, முதல் கட்டத்திலேயே கட்டுப்படுத்த தவறியது தஞ்சை மாவட்ட போலீசார்; அவர்கள், இலங்கை பயணிகளை அங்கிருந்து அகற்றி, ஏழு வேன்கள் மூலம் வேளாங்கண்ணிக்கு அனுப்பி விட்டனர்; ஆனால், இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கத் தவறி விட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது, வழக்கு கூட பதிவு செய்யவில்லை என்பது இதற்கு அடையாளம். இலங்கை பயணிகள், கடந்த, 3ம் தேதி காலையில், வேளாங்கண்ணி கோவிலுக்கு பிரார்த்தனைக்குச் சென்றனர். புலிகள் ஆதரவு அமைப்பினர், ஒன்று திரண்டு, அவர்களை தடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்த போலீசார், இலங்கையைச் சேர்ந்தவர்களை நாடு திரும்ப வலியுறுத்தினர். அவசர கதியில், அங்கிருந்து வேன்களில் கிளம்பிய அவர்களுக்கு பாதுகாப்புக்காக, நாகை டவுன் டி.எஸ்.பி., நீதிமோகன் தலைமையில் 20 போலீசார், மூன்று வாகனங்களில், முன்னும், பின்னும் தொடர்ந்தனர். அதேசமயம், வேன்களின் பின்னால், கார் ஒன்றில் பின்தொடர்ந்த சிலர், தங்களது மொபைல் போன் மூலம், ஆங்காங்கே உள்ள புலிகள் ஆதரவாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் விளைவாக, திருவாரூர் பை-பாஸ் சாலை அருகே, பயணிகள் சென்ற வேன் ஒன்றின் மீது செருப்பு வீசப்பட்டது. செருப்பு வீசிய நபர் மீது கூட, திருவாரூர் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு
செய்யவில்லை. உச்சக்கட்டமாக, திருச்சி, திருவெறும்பூர் அருகே காட்டூர் மஞ்சள் திடல் பாலம் அருகே, வேன் மீது, ஒரு கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. தாக்குதலில், நான்கு வேன்களின் கண்ணாடி உடைந்தன. வேனில் இருந்த பெண்களும், குழந்தைகளும் சிறிய அளவில் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, ம.தி.மு.க.,வைச் சேர்ந்த, ஒன்பது பேர் மீது, திருவெறும்பூர் போலீசார், சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிந்து, எட்டு பேரை கைது செய்தனர். அதன் பின், பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளித்து, அவசர கதியில் தனி விமானத்தில், இலங்கைக்கு அனுப்பி வைத்தனர். லட்சக்கணக்கில் செலவழித்து புண்ணிய யாத்திரை வந்தவர்கள், கண்ணீருடன் புலம்பியபடி கிளம்பிச் சென்றனர். < தூங்கி வழிந்த துறைகள்:
இலங்கையில் இருந்து உரிய அங்கீகாரத்துடன் வருபவர்களை அணுகும் முறையில், அ.தி.மு.க., அரசு எதிர்விளைவு தரும் போக்கை கடைபிடிக்கிறது. இதற்கு அடையாளமாக சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. தற்போது நடந்த தாக்குதலுக்கு முன், "திருச்சி, கலைக்காவேரி நுண்கலைக் கல்லூரிக்கு கலாசாரப் பயணமாக வந்திருந்த, இலங்கை மாணவர்களை வெளியேற்ற வேண்டும்' என, தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின; உடனடியாக இலங்கை மாணவர்கள்
திருப்பி அனுப்பப்பட்டனர். அதற்கடுத்து, தமிழகம் வந்த இலங்கை கால்பந்து அணியை, தமிழக அரசே இலங்கைக்கு, "வழியனுப்பி' வைத்தது. மத்திய வெளியுறவுத் துறை, இலங்கையைச் சேர்ந்த, 184 பேருக்கு, ஒட்டு மொத்தமாக, 15 நாள் தமிழகத்தில் தங்க, "விசா' அளித்துள்ளனர். அவர்கள் வருகை குறித்த தகவல்களை, மத்திய உள்துறை அதிகாரிகள், உளவுத் துறையினருக்கு தெரிவித்து உரிய பாதுகாப்புகள் அளிக்க, தமிழக போலீஸ் துறையை அறிவுறுத்தவில்லை.
ஜனநாயகத்திற்கு எதிரானது:
தமிழக உளவுத் துறை வேண்டுமென்றே  அசட்டையாக இருந்ததால், பயணிகள் தொடர்ந்து துரத்தலுக்கு உள்ளாகி, மனம் நொந்து இலங்கை திரும்பியுள்ளனர். இது, தமிழகத்திற்கு காலம் காலமாக வரும் இலங்கை பயணிகள், இனி இங்கு வருவதைத் தடுக்கும்; சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் குறையும்.
புலிகள் ஆதரவாளர்கள் எண்ணிக்கை, தமிழகத்தில் மிக சொற்பம். ஆனால், இச்செயல் நடந்ததால், தமிழகம் அமைதிப் பூங்கா என்ற நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டது. வெளிநாட்டுப் பயணிகள் வருகையை கவனித்து, செயல்பட வேண்டிய போலீஸ் துறை, அவர்களை இயல்பாக இயங்க விடாமல் செய்து விட்டது. மாறாக, அவர்களை துரத்திச் சென்ற சிறிய கும்பல் செயலை அங்கீகரித்தது போல நடந்து கொண்டது, ஜனநாயக சுதந்திர நடைமுறைகளுக்கு எதிரானது என்ற கருத்து எழுந்திருக்கிறது. வெளிநாட்டு பயணிகளை தாக்குமாறு மறைமுகமாக தூண்டியது மற்றும் இன்னும் கூட உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமல் கலவரக்காரர்களுக்கு சரியான பாடம் புகட்டாமல் மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற வேணுத் என்ற வாகு வேட்டை மனோபாவம் போன்ற வலுவான காரணங்கள்  தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய போதுமானவையாகும் .

கருத்துகள் இல்லை: