வெள்ளி, 27 ஜூலை, 2012

மோடி தன் மீது F.I.R பதிவு செய்ய அனுமதிப்பாரா?- காங்கிரஸ் கேள்வி

 கோத்ரா சம்பவத்தில் புலன் விசாரணையை உண்மையிலேயே நரேந்திர மோடி விரும்புவதாக இருந்தால், அவர் தன் மீது எப். அய்.ஆர். பதிவு செய்ய அனுமதி அளிக்கவேண்டும்
குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002 ஆம்  ஆண்டு கலவரம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்னை தூக்கில் போடலாம் என்றும் நரேந்திர மோடி  கூறியுள்ளார்.
அவரது பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோத்ரா சம்பவத்தில் புலன் விசாரணையை உண்மையிலேயே நரேந்திர மோடி விரும்புவதாக இருந்தால், அவர் தன் மீது எப். அய்.ஆர். பதிவு செய்ய அனுமதி அளிக்கவேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கூறினார்.
இது குறித்து  அவர் மேலும் கூறுகையில், ‘கடந்த 12 ஆண்டுகளாக இவ்வழக்கு தொடர்பாக முதல்வர் மீது எப்.அய்.ஆர் பதிவு செய்யப்படவில்லை. அப்படியிருந்தால் அவர் மீதான குற்றத்தை எப்படி நிரூபிக்க முடியும்? யார் அவரை தூக்கில் போட முடியும்? வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே மோடி இவ்வாறு பேட்டி அளித்திருக்கிறார்.
தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறும் அவர், தன் மீதோ மற்ற அமைப்புகள் மீதோ குஜராத்தின் எந்த காவல் நிலையத்தில் எப்.அய்.ஆர் பதிவு செய்தாலும் ஆட்சேபிக்க மாட்டேன் என்று அறிக்கை விடவேண்டும்’ என்றார்

கருத்துகள் இல்லை: