திங்கள், 23 ஜூலை, 2012

BJP யின் வாக்குகளை அள்ளிய பிரணாப் Mukherji

பாஜகவினர் 'குறுக்கு சால்' ஓட்டியதால் அதிக வாக்குகளை அள்ளிய பிரணாப்!

டெல்லி: பிரணாப் முகர்ஜியே பெரும் வெற்றி பெறுவார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கவில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக அவருக்கு பாஜக தரப்பிலிருந்து பல வாக்குகள் கூடுதலாக கிடைத்ததால் சங்மாவுக்கு கிடைத்திருக்க வேண்டிய இன்னும் கொஞ்சம் வாக்குகள் பறி போய் விட்டன. இது சங்மாவை விட பாஜகவுக்குத்தான் பெரும் சங்கடம் தரும் விஷயமாகும்.
கர்நாடகத்தில்தான் பாஜகவுக்கு பெரும் அடி கிடைத்துள்ளது. அங்குதான் பாஜகவினர் பெரிய அளவில் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். அதேபோல ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கட்சி மாறி வாக்களித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில், பாஜகதான் பெரும்பான்மை பலத்துடன் உள்ள கட்சியாகும். இங்கு சங்மாவுக்கே கூடுதலாக வாக்குகள் கிடைத்திருக்க

வேண்டும். ஆனால் இங்கு பிரணாப் முகர்ஜி 53 சதவீத வாக்குகளைப் பெற்று விட்டார். அதாவது அவருக்கு மொத்தம் 117 வாக்குகள் கிடைத்தன. சங்மாவுக்கு வெறும் 103 வாக்குகளே கிடைத்தன. உண்மையில் சங்மாவுக்கு 116 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை.
பாஜக தரப்பிலிருந்து 13 பேர் கட்சி மாறி ஓட்டுப் போட்டு விட்டனர். இவர்கள் எதியூரப்பா ஆதரவாளர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதேசமயம், ரெட்டி சகோதரர்களின் ஆதரவாளர்களாக இருக்கலாம் என்ற இன்னொரு சந்தேகமும் வலுத்துள்ளது. கர்நாடகத்தில் நிலவும் பாஜக கோஷ்டிப் பூசல் உலக அளவில் பிரசித்தமானது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக பிரணாப் முகர்ஜி பெயர் அறிவிக்கப்பட்டபோதே எதியூரப்பா, தான் பிரணாப்புக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
அவரைச் சமாதானப்படுத்துவதற்காக ஒக்கலிகா பிரிவைச் சேர்ந்தவரான முதல்வர் சதானந்தா கெளடாவை தூக்கி விட்டு எதியூரப்பா சார்ந்த லிங்காயத் பிரிவைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்கியது பாஜக. இதனால் எதியூரப்பா தரப்பு சாந்தமடைந்திருக்கலாம் என்று நம்பப்பட்டது.
ஆனால் ஷெட்டரை முதல்வராக்கியதால் அதிருப்தி அடைந்த சதானந்தா கெளடா தரப்பு மாற்றி ஓட்டுப் போட்டு வி்ட்டதா என்ற சந்தேகமும் நிலவுகிறது.
அதேசமயம் பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் கோஷ்டியையும் புறக்கணித்து விட முடியாது. இவர்கள் தேர்தலுக்கு முன்பாக திடீர் போர்க்கொடி உயர்த்தியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம். எனவே இவர்களது கைவரிசையையும் மறுக்க முடியாது.
மொத்தத்தில் பாஜக முகாம் பெரியஅளவில் கலகலத்துப் போய் உள்ளது என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. விரைவில் கர்நாடகத்தில் மீண்டும் கோஷ்டிப் பூசல் பெரிய அளவில் வெடிக்கும் என்றும் கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: