செவ்வாய், 24 ஜூலை, 2012

China சென்னையில் அலுவலகம் திறக்க ஆர்வம்

புதுடில்லி:சென்னையில் தூதரக அலுவலகம் திறக்க ஆர்வம் காட்டி வரும் சீனாவிடம், இந்திய அரசு பேரம் பேசி வருகிறது. சென்னையில் சீன அரசு தூதரக அலுவலகம் திறக்க அனுமதித்தால், அதற்குப் பதிலாக, திபெத் தலைநகர் லாசாவில், தங்கள் தூதரக அலுவலகத்தை திறக்க அனுமதிக்க வேண்டும் என, சீன அரசை வலியுறுத்தி வருகிறது.
இதுதொடர்பாக, தூதரக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:தைவான் தனி குடியரசு நாடாக கருதப்பட்டாலும், சீனா, அதை தங்கள் நாட்டின் ஒரு அங்கமாகவே கருதுகிறது. இந்நிலையில், தைவான் அரசு, சென்னையில் துணை தூதரகம் ஒன்றை துவக்க, இந்திய அரசு அனுமதி அளித்தது. அதே போல், தென் கொரிய அரசுக்கும், சென்னையில் துணை தூதரகத்தை துவக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதையெல்லாம் சீனா விரும்பவில்லை

அனுமதி மறுப்பு:அதேநேரத்தில், தங்கள் தூதரக அலுவலகத்தை சென்னையில் திறக்க இந்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. அப்படி அனுமதி கேட்ட சீனாவிடம், திபெத் தலைநகரான லாசாவில், தாங்கள் தூதரகத்தை துவக்க அனுமதிக்க வேண்டும் என, இந்திய அரசு கேட்டு வருகிறது. ஆனால், இதற்கு சீனா அனுமதி மறுக்கிறது. லாசாவில், இந்திய அரசு தூதரக அலுவலகம் துவக்க சீனா அனுமதித்தால், அது, இந்தியாவுக்கு பெரிய வெற்றியாக இருக்கும். திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா, லாசாவில் இருந்து, 1959ம் ஆண்டில், இந்தியாவுக்கு வந்து தஞ்சம் புகுந்தார். அவருக்கு, இந்திய அரசு அடைக்கலம் கொடுத்தது. இதனால், சீன அரசு கடும் கோபம் அடைந்தது. சீன அரசு கொடுத்த நெருக்கடி காரணமாகவே, லாசாவில் செயல்பட்டு வந்த தூதரக அலுவலகத்தை, அந்த ஆண்டில் மூட வேண்டிய கட்டாயம், இந்திய அரசுக்கு ஏற்பட்டது.லாசாவில், இந்திய தூரதக அலுவலகம் செயல்பட்ட போது, அங்கு கடைசி துணை தூதராக பணியாற்றியவர் பி.என்.மேனன். இவர், தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனின் தந்தை. தலாய்லாமாவை நன்கு அறிந்தவர்.

பின்னடைவு:தலாய்லாமா இந்தியாவுக்கு தப்பி வந்த பின், இந்திய - சீன உறவில், பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 1962ல், எல்லைப் பிரச்னையும் உருவானது. இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளும் பாதிக்கப்பட்டு, 1970ம் ஆண்டுகளின் மத்தியில் தான், மீண்டும் தூதரக உறவுகள் துவங்கின.தற்போது, லாசாவில், தூதரக அலுவலகத்தை துவக்க வேண்டும் என, இந்திய அரசு கோரி வந்தாலும், அதுபற்றி பேச, சீன நிர்வாகத்தினர் மறுக்கின்றனர் .

இப்போது உருவானதல்ல:லாசாவில், தூதரக அலுவலகத் திறப்பு பிரச்னை, இப்போது, திடீரென உருவானதல்ல. ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே, இந்தப் பிரச்னை துவங்கி விட்டது. அப்போது, இந்திய - சீன அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இரு நாடுகளும், அந்தந்த நாட்டின் தலைநகர் தவிர, மற்றொரு இடத்திலும், தூதரக அலுவலகத்தை திறப்பது என, முடிவு செய்யப்பட்டது.சீன அரசு, இந்தியாவில் தலைநகர் டில்லிக்கு அடுத்ததாக, கோல்கட்டாவில் தூதரக அலுவலகத்தை திறக்க, விருப்பம் தெரிவித்தது. இதற்குப் பதிலடியாக, இந்திய அரசு, திபெத் தலைநகர் லாசாவில், தூதரக அலுவலகம் திறக்க ஆசைப்பட்டது. 2005-06ல், இதுபற்றி பேசிய போது, லாசாவில் இந்திய அரசு தூதரக அலுவலகத்தை திறக்க, சீன நிர்வாகத்தினர் அனுமதிக்கவில்லை.அதற்குப் பதிலாக, சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வர்த்தக நகரமான குவாங்ஜூவில் திறக்கும்படி கேட்டுக் கொண்டது. ஆனால், இந்திய அரசு மட்டும், வேறு வழியில்லாமல், கோல்கட்டாவில் தூதரக அலுவலம் திறக்க, சீனாவிற்கு அனுமதி கொடுத்தது.இவ்வாறு, தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

நடக்காத ஒன்று:லாசாவில், தூதரக அலுவலகம் திறக்க வேண்டும் என்பதில், இந்திய அரசு அதிக தீவிரம் காட்டினாலும், அது, இன்று வரை நடைபெறாத ஒன்றாகவே உள்ளது. சில வாரங்களுக்கு முன் கூட, லாசாவில் தூதரக அலுவலகம் திறக்கும் தன் விருப்பத்தை, சீனாவிடம் இந்திய அரசு தெரிவித்தது. சீன அரசின் அழைப்பை ஏற்று, திபெத் தன்னாட்சிப் பகுதியில், பெரிய அளவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட, சீனாவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர், இதுதொடர்பாக, சீன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.ஆனால், இதற்கு, சீன அதிகாரிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை. கைலாச யாத்திரை மேற்கொள்வோர் பயணிக்கும் பாதை கூட, இப்பகுதியில் உள்ளது. தவிரவும், முன்னர், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது , லாசாவில் தூதரகம் அமைப்பதில், அதிக முக்கியத்துவம் காட்டி, சீனாவுடன் பேசியதும் உண்டு.

தொடரும் கதை: இதனால், சென்னை மற்றும் லாசாவில் தூதரக அலுவலகங்கள் திறப்பு தொடர்பாக, இந்திய - சீன வெளியுறவு அமைச்சகங்கள் இடையே, பூசல்கள் உருவாகியுள்ளன. அதே நேரத்தில், வெளிநாட்டு விவகாரங்களைக் கவனிக்கும், சீன கம்யூ., தலைவர் டாய் பிங்குவோ, லாசாவில் இந்திய அரசு தூதரகம் திறக்க ஆதரவு காட்டாதவர். அவரும், அடுத்த ஆண்டு பதவி விலகுகிறார். அந்தப் பதவிக்கு வாங்க் இ என்ற தலைவர் வரவுள்ளார். ஆங்கிலம் நன்கறிந்த அவரின் வருகை, லாசாவில் தூதரகம் திறக்க உதவும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது

கருத்துகள் இல்லை: