புதன், 25 ஜூலை, 2012

இங்கிலாந்து, இந்தி, இந்திரா! தமிழகத்தின் 3 முக்கிய போராட்டங்கள்


இந்திய அரசியல் களத்தை — தேசிய அளவிலும் தமிழக அளவிலும் — தொடர்ந்து ஆய்வு செய்துவரும் ஆர். முத்துக்குமாரின் சமீபத்திய புத்தகம், திராவிட இயக்க வரலாறு. பெரியார், அம்பேத்கர், எம்ஜிஆர் தொடங்கி பல வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார்.  தமிழக அரசியல் இதழில் இவர் எழுதி வரும் ஆடு புலி அரசியல் தொடர் 100 அத்தியாயங்களைக் கடந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது.
  மொழிப்போர் / அத்தியாயம் 1
தமிழக மக்கள் மூன்று முக்கியப் போராட்டங்களைச் சந்தித்துள்ளனர். மூன்றுமே ஆதிக்கத்துக்கு எதிராக நடந்தவை. இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று மக்கள் சக்தி பொங்கி எழுந்ததன் விளைவாக நடந்தவை.  இங்கிலாந்திடம் இருந்து விடுதலை வேண்டி நடந்தது சுதந்தரப் போராட்டம். இந்தியிடம் இருந்து விடுதலை வேண்டி நடந்தது மொழிப் போராட்டம். இந்திராவிடம் இருந்து விடுதலை வேண்டி நடந்தது நெருக்கடி நிலைப் போராட்டம்.

மூன்று போராட்டங்களின்போதும் மக்கள் அடக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறார்கள். பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். படுகொலைக்கு இலக்காகியிருக்கிறார்கள். மூன்றுமே தியாகங்களால் நிரம்பிய போராட்டங்கள் என்றபோதும் மற்ற இரண்டு போராட்டங்களில் இருந்து மொழிப்போராட்டம் ஒரு முக்கிய விஷயத்தில் வேறுபட்டு நிற்கிறது. சுதந்தரப் போராட்டம் 1947 ஆம் ஆண்டோடு முடிந்துவிட்டது. நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்துக்கு 1977ல் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. ஆனால், மொழிப்போராட்டம் மட்டும் இன்னமும் முற்றுப்பெறவில்லை.
1938 ஆம் ஆண்டு தொடங்கிய மொழிப்போராட்டம் ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகாலமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. சீரான கால இடைவெளிகளில்! அவ்வப்போது மூச்சுவிட்டுக் கொள்வதற்குக் கால அவகாசம் கிடைக்கும். பிறகு மீண்டும் தொடங்கிவிடும். முதலாம் கட்ட மொழிப்போர், இரண்டாம் கட்ட மொழிப்போர் என்று இதுவரை பல கட்டங்களாக மொழிப்போர் நடந்துள்ளது. நடந்துவருகிறது.
மொழிப்போர் என்பது இந்தி மொழியைப் பேசுகின்ற வட இந்தியர்களுக்கு எதிராகத் தமிழர்கள் தொடுத்த ஆயுதப்போர் அல்ல; இந்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு தொடுத்த யுத்தம் அல்ல. தமிழர்கள் மீது இந்தி மொழியைத் திணிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய, மாநில அரசுகள் வெவ்வேறு காலகட்டங்களில் எடுத்த கடுமையான நடவடிக்கைகளுக்கான எதிர்வினைகளின் தொகுப்பே மொழிப்போர்!
இந்தித் திணிப்பு என்பது இந்தியா சுதந்தரம் அடைவதற்கு முன்பே தொடங்கிவிட்டது. பிரிட்டிஷ் இந்தியா என்பது ஒருமொழி பேசும் தேசம் அல்ல. இந்தி, தமிழ் உள்ளிட்ட ஏராளமான மொழிகள் பேசப்படும் தேசம். அந்தத் தேசத்தை பிரிட்டிஷாரிடம் இருந்து பிரித்தெடுக்கவேண்டும் என்றால் போராட்டத்தில் ஈடுபடவேண்டும். அதற்கு மக்களை ஒன்றிணைக்கவேண்டும். அந்த ஒருங்கிணைப்புப் பணிக்காக காந்தியும் காங்கிரஸும் பயன்படுத்திய கருவியே இந்தி.
இந்தியை இந்தியர்கள் அனைவரும் படிக்கவேண்டும் என்று பேசினார் காந்தி. அதே நோக்கத்துடன் இந்தி பிரசார சபாக்கள் உருவாகின. இந்தியைப் பரப்பும் நோக்கத்துடன் தீவிர பிரசாரம் செய்தார். ஒருகட்டத்தில் இந்தி பேசாத மக்கள் அனைவரும் இந்தியைக் கற்று தேசிய நீரோட்டத்தில் இணையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அப்போதெல்லாம் எதிர்ப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. பெரிய அளவில் எழவில்லை.
பிரசாரம் என்பது எந்த நொடியில் திணிப்பாக மாறியதோ அப்போதே எதிர்ப்புகள் தொடங்கிவிட்டன. இந்தியைப் படித்தே தீரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டபோது போராட்டங்கள் வலுக்கத் தொடங்கின. குறிப்பாக, ராஜாஜி இந்தித் திணிக்க எத்தனித்தபோது. அந்த நொடியில் தொடங்கியதுதான் முதலாம் மொழிப்போராட்டம்.
கருத்து ரீதியாக, கொள்கை ரீதியாக, செயல்பாடு ரீதியாக என்று பல முனைகளில் வேறுபட்டு நின்ற தலைவர்கள் பலரை ஒரணியில் திரட்டியது மொழிப் போராட்டம். சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள், பெரியா ஈ.வெ.ரா, தா.வே. உமாமகேசுவரன், டபிள்யூ.பி.ஏ. சௌந்தர பாண்டியன், சி.என். அண்ணாதுரை, கி.ஆ.பெ. விசுவநாதம் என்று பல தலைவர்கள் இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், மலர்முகத்தம்மையார், மீனாம்பாள் சிவராஜ் உள்ளிட்ட பல பெண்களும் மொழிப்போரில் கலந்துகொண்டனர்.
இந்தித் திணிப்பால் ஏற்படப்போகும் இழப்புகள், தமிழுக்கு நேரவிருக்கும் ஆபத்துகள், தமிழர்கள் சந்திக்க இருக்கும் பிரச்னைகள் குறித்துப் பேசினர். நடைபயணம் சென்றனர். சாலையில் இறங்கிப் போராடினர். அவர்களைக் கையாள ராஜாஜி அரசாங்கம் அடக்குமுறையை ஏவியபோது போராட்டம் அடுத்தக் கட்டத்தை அடைந்தது. களப்போராளிகள் கைது செய்யப்பட்டனர். சிறைக்குள் தாக்கப்பட்டனர். உயிர்ப்பலியும் நடந்தேறியது.
மொழிப்போரில் முதலில் தனது உயிரைப் பலி கொடுத்தவர் நடராஜன். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். சிறைக்கொடுமை தாங்காமல் மரணம் அடைந்தார். அவரைத் தொடர்ந்து தாலமுத்து என்பவர் மரணம் அடைந்தார். போராட்டம் வலுத்ததைத் தொடர்ந்து இந்தித்திணிப்பு கைவிடப்பட்டது. முதல் மொழிப்போர் முடிவுக்கு வந்தது.
பிரச்னை என்னவென்றால், இந்தித் திணிப்பு என்பது அத்தோடு நின்றுவிடவில்லை. வெவ்வேறு காலகட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் வெவ்வேறு விதங்களில் இந்தித் திணிப்பை அமல்படுத்திக்கொண்டே இருந்தன. அது நேரு, சாஸ்திரி காலம் தொடங்கி மொரார்ஜி, இந்திரா, ராஜீவ் காலத்திலும் தொடர்ந்தது. தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எப்போதெல்லாம் திணிப்பு நடவடிக்கைகள் தொடங்குகின்றனவோ அப்போதெல்லாம் தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கத் தவறியதில்லை. அடக்குமுறைகளுக்கு அடங்கியதில்லை.
முக்கியமாக, அறுபதுகளின் மத்தியில் நடந்த நான்காவது கட்ட மொழிப்போரைச் சொல்லவேண்டும். ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்திய போராட்டம் அது. எத்தனைத் தீக்குளிப்புகள்! எத்தனைத் தற்கொலைகள்! எத்தனை உயிர்ப்பலிகள்! சின்னச்சாமி தொடங்கி ஏராளமான இளைஞர்கள் தீக்குளித்தும் விஷம் சாப்பிட்டும் மரணம் அடைந்தனர். காவல்துறையின் தாக்குதல் காரணமாக மரணம் அடைந்தவர்கள் அநேகம். போராட்டத்தை முன்னெடுத்து, வழிநடத்திய பல தலைவர்களும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
விநோதம் என்னவென்றால் முதல் மொழிப்போருக்குக் காரணகர்த்தாவாக இருந்த ராஜாஜிதான் நான்காவது மொழிப்போரின்போது போராட்டக்காரர்களுக்கு உறுதுணையாக இருந்தவர். அதைப்போலவே, முதல் போராட்டத்தை வழிநடத்தியவர்களுள் ஒருவரான பெரியார் ஈ.வெ.ரா நான்காவது போராட்டத்தை ஆதரிக்கவில்லை. எல். கணேசன், வை. கோபால்சாமி, எஸ்.டி. சோமசுந்தரம், கா. காளிமுத்து, எம். நடராஜன், சேடப்பட்டி முத்தையா, நா. காமராசன், ஆலடி அருணா என்று பின்னாளில் அரசியலில் மின்னிய பலரும் மாணவர்களாகவும் இளைஞர்களாகவும் இருந்த காலத்தில் நான்காம் மொழிப்போரில் ஈடுபட்டவர்கள்தாம்.
மாணவர்களின் ஏகோபித்த எதிர்ப்புகளைச் சம்பாதித்த காங்கிரஸ் அரசு அதன்பிறகு நடந்த தேர்தலில் ஆட்சியை இழந்தது. அன்று தொடங்கி இன்றுவரை காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அதிகாரத்தின் நிழலைக்கூடத் தொடமுடியவில்லை.
எண்பதுகளில் மத்திய அரசு இந்தித் திணிப்பைக் கொண்டுவர முயற்சித்தபோது திமுக நடத்திய போராட்டங்கள் அநேகம். அதைக்காட்டிலும் அதற்குக் கொடுத்தவிலை அதிகம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பதினேழாவது பிரிவின் நகலைக் கொளுத்தியதற்காக க. அன்பழகன் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பத்து பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது ஆளுங்கட்சியாக இருந்தது அதிமுக. இதுவும் ஒரு விநோதம்தான். எந்தத் திராவிட இயக்கத்தால் மொழிப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோ அதே திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அதிமுக அரசு, இன்னொரு திராவிட இயக்கக் கட்சியான திமுகவைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது.
இன்னமும்கூட இந்தித் திணிப்புப் போராட்டம் தொடர்கிறது. போராட்ட நெருப்பை அணையவிடாமல் பார்த்துக்கொள்ளும் காரியத்தைக் கவனமாகச் செய்துவருகிறது மத்திய அரசு.
கடந்த சில ஆண்டுகளாக இந்தித் திணிப்புப் பணியில் மௌனம் காட்டிவந்த மத்திய அரசு திடீரென சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் இந்தியில் கையெழுத்திட வேண்டும் என்பதுதான் அதன் சாரம். இந்தி பேசாத மாநிலங்களைக் குறிவைத்து அனுப்பப்பட்ட இந்தச் சுற்றறிக்கை தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. கண்டனக்கணைகள் பறந்ததைத் தொடர்ந்து அந்தச் சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தித் திணிப்பில் மத்திய அரசு மௌனமாக இருந்தது என்று சொல்வதைக் காட்டிலும் மௌனமாகக் காய் நகர்த்தி வருகிறது என்பதுதான் சரியானதாக இருக்கும். அதற்குப் பொருத்தமான உதாரணம், அண்மையில் வெளியான கேலிப்பட சர்ச்சை! என்.சி.இ.ஆர்.டி என்கிற மத்திய அரசின் புத்தக நிறுவனம் வெளியிட்ட பன்னிரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் தமிழகத்தில் நடந்த இந்தித்திணிப்புக்கு எதிரான போராட்டம் பற்றிய பாடம் இடம்பெற்றிருந்தது.
தமிழ் மாணவர்களை வன்முறையாளர்களாகவும் ஆங்கில மொழியை அறியாதவர்களாகவும் சித்திரித்த அந்தக் கேலிச்சித்திரத்தை பல ஆண்டுகள் கழித்து பாடப் புத்தகங்களில் இடம்பெறச்செய்தது ஏன்? வரலாறு குறித்து வருங்காலத் தலைமுறையினருக்குத் தவறான புரிதலை ஏற்படுத்த முயல்வது ஏன்? என்ற கேள்விகளை தமிழ் ஆர்வலர்கள் எழுப்பினர். தமிழ்நாட்டு மக்கள் நடத்திய உணர்வுரீதியான போராட்டத்தைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம் என்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
ஆக, இந்தித் திணிப்பு குறித்தும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. இந்தப் போக்கு இன்று உருவானது அல்ல.
திராவிட இயக்க நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வரும் இன்றைய சூழலில், மொழிப்போராட்டக் களங்களைத் திரும்பி பார்ப்பதும் வரலாற்றை மறுவாசிப்பு செய்வதும் அவசியமாகிறது

கருத்துகள் இல்லை: