வெள்ளி, 27 ஜூலை, 2012

மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்

சென்னை, ஜூலை 26-  உதட்டில் இருந்த பருவை அகற்றுவதற்காக மருத்துவரிடம் போன பெண், மருத்துவர் இரண்டு ஊசி போட்டவுடன் மரணமடைந்தார். இதனால் மருத்துவரைக் கைது செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அன்னை கிளினிக் என்ற பெயரில் மருத்துவர் பாலாஜி என்பவர் கிளினிக் வைத்துள்ளார். அங்கு நேற்று இரவு ஒரு பெண் சிகிச்சைக்காக வந்துள்ளார்.
அவரது உதட்டில் பரு இருந்துள்ளது. இதை சரி செய்வதற்காக அவர் கிளினிக்குக்கு வந்ததாக தெரிகிறது. அங்கு மருத்துவர் பாலாஜி, அப்பெண்ணுக்கு இரண்டு ஊசி போட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது உடல் நிலை மோசமாகியுள்ளது.
இதையடுத்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு மருத்துவர் கூறியுள்ளார். பதறிப் போன உறவினர்கள் அருகில் இருந்த இன்னொரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அப்பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். மருத்துவர் பாலாஜி போட்ட ஊசியாலதான் தங்களது உறவுப் பெண் இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டி கிளினிக் முன்பு போராட்டத்தில் குதித்தனர். இறந்த பெண்ணுக்கு 3 மாதங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: