திங்கள், 28 மே, 2012

உங்கள் ஓராண்டு ஆட்சியின் சாதனை?’ – நிருபர்கள்; ‘அப்புறம் அப்புறம்…’ – ஜெயலலிதா!

சென்னை: முதல்வராகப் பதவி ஏற்ற கையோடு ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி, ‘என்னை கண்ட இடத்தில் நிறுத்தி பேட்டி கேட்டு நச்சரிக்கக் கூடாது. நானே வாரம் ஒரு முறை உங்களைச் சந்திப்பேன்,” என்றார்.
அதன்படி ஒரே ஒரு வாரம் மட்டும் சந்தித்தார் ஜெயலலிதா. அப்புறம்… வழக்கம் போல, அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டார்.
இந்த ஒரு வருடத்தில் இப்போதுதான் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதுகூட அவராக வரவழைத்து சந்திக்கவில்லை. வீட்டு வாசலில் நிருபர்கள் காத்திருந்து சந்தித்தனர்.
நான்கே கேள்விகள்தான். அதில் ராசா ஜாமீன், ப சிதம்பரம் விவகாரங்களுக்கு ஆர்வத்துடன் பதிலளித்தவர், ஆட்சி பற்றிய கேள்விகளுக்கு சுரத்தின்றி பதிலளித்துவிட்டு, காரில் ஏறுவதிலேயே குறியாக இருந்தார்.

அந்தப் பேட்டி:
கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆ.ராசா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளாரே?
பதில்: நீங்கள் சொல்லித்தான் இதை நான் கேள்விப்படுகிறேன். ஆனால், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ஒன்றும் இல்லாமல் வலுவிழந்து போய்க் கொண்டிருப்பது போல தெரிகிறது.
கேள்வி: ஏர்செல்- மேக்ஸிஸ் நிறுவன விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
பதில்: இந்த விவகாரத்தில் தான் எழுப்பிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டியது சுப்பிரமணிய சாமிதான். அதற்கு தக்க பதில் சொல்ல வேண்டியது ப.சிதம்பரத்தின் பொறுப்பு. இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்திடம்தான் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
கேள்வி: தமிழ்நாட்டில் மணல் கொள்ளை பற்றி செய்திகள் வருகிறதே?
பதில்: அதுபற்றி நான் கேள்விபடவே இல்லை. இதுபற்றி பிறகு பதில் சொல்கிறேன்
கேள்வி: உங்களது ஓராண்டு ஆட்சியின் சாதனை குறித்து..?
பதில்: அப்புறம் கூறுகிறேன் என்றார்.
-என்வவி செய்திகள்

கருத்துகள் இல்லை: