வியாழன், 31 மே, 2012

புதுக்கோட்டை: பளபள அமைச்சர்கள் பவ்வியம் காட்ட, எதிராளி மிஸ்ஸிங்!!

புதுக்கோட்டை இடைத்தேர்தல் பிரச்சாரம் தமாஷாகவே நடக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டமான் முழுமூச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தொகுதி முழுவதும் சுற்றிவர, தே.மு.தி.க. வேட்பாளரின் பிரச்சாரம் டில்லடித்து காணப்படுகிறது.
அ.தி.மு.க. வேட்பாளருக்காக 32 அமைச்சர்கள் பளபளவென வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து ஓட்டுக் கேட்டு வருகின்றனர். தே.மு.தி.க. வேட்பாளரோ தன்னந்தனியே சுற்ற வேண்டியதாக உள்ளது. அவருடன் துணைக்குச் செல்வதற்குகூட, கட்சி நிர்வாகிகள் யாரும் இல்லை. மற்றைய மாவட்டங்களில் இருந்து தே.மு.தி.க.-வினர் யாரும் பிரச்சாரத்துக்கு இதுவரை வரவில்லை.

தே.மு.தி.க. கொடி போட்ட வாகனங்களில் வரும் எம்.எல்.ஏ.-க்கள் சிலரை தொகுதிக்குள் பார்க்க முடிகிறது. ஆனால், அவர்கள் இன்னமும் ‘ஆலோசனை’ நடத்தவே வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். பிரச்சாரம் செய்ய செல்வதில்லை. விஜயகாந்த் தொகுதிக்குள் வரும்போதுதான், அக்கட்சி எம்.எல்.ஏ.-க்கள் பிரச்சாரம் செய்வார்கள் போலிருக்கிறது.
தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட பறக்கும் படையினர் அமைச்சர்களை பின்தொடர்கிறார்கள். இதனால், அமைச்சர்கள் மிக ஜாக்கிரதையாகவே தொகுதிக்குள் வலம் வருகிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், தே.மு.தி.க. வேண்டாளர் ஜாகீர் உசேனை கண்காணிக்கவும் ஒரு டீமை நியமித்துள்ளது தேர்தல் கமிஷன். ஆனால், அந்த டீம்,  ஜாகீர் உசேனை பின்தொடந்து என்ன செய்வது? கட்சிக்காரர்களே அவருடன் செல்லாத நிலையில், கண்காணிப்பு டீம் பின்தொடர்ந்தால் தமாஷாக இருக்காதா? இதனால், தேர்தல் கமிஷன்கூட தே.மு.தி.க. வேட்பாளரைக் கண்டு கொள்வதில்லை.
சூழ்நிலை இப்படி இருக்கையில், அ.தி.மு.க. எதற்காக 32 அமைச்சர்களை தொகுதிக்குள் இறக்கி விட்டுள்ளது என்று யாருக்கும் புரியவில்லை. 20 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், வெளிப் பார்வைக்கு அ.தி.மு.க. வேட்பாளர் மட்டும் போட்டியிடுவது போலவே உள்ளது நிலைமை!

கருத்துகள் இல்லை: