புதன், 18 ஆகஸ்ட், 2010

மாவோயிஸ்டுகள் மம்தா தலையிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார்

சந்தேகமும் தீர்ந்துவிட்டதல்லவா? மாவோயிஸ்டுக்களைப் பாதுக்காத்து, வளர்த்து தூண்டிவிடுவது யாரென்று?
கோல்கட்டா : மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி மத்தியஸ்தராக செயல்பட்டால் சண்டையை நிறுத்தி விட்டு மத்திய அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாக மாவோயிஸ்டு தலைவர் அறிவித்துள்ளார். கடந்த 9ம் தேதி மேற்குவங்க மாநிலம் லால்கரில் மம்தா பானர்ஜி நடத்திய பேரணியில் அவர் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக பேசிய விவகாரம் பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் புயலை கிளப்பியது. மத்திய அமைச்சர் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக பேசியதற்கு பிரதமர் விளக்கம் கேட்டு எதிர்கட்சிகள் பெரும் அமளியை ஏற்படுத்தினர். தற்போது மீண்டும் மாவோயிஸ்டுகள் மம்தா தலையிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்தா தவிர சமூகநல ஆர்வலர்களான கபிர் சுமன், அருந்ததி ராய், மேதா பட்கர், பி.டி.சர்மா ஆகியோரும் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தர்களால் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும் என மாவோயிஸ்டு தரப்பு தெரிவித்துள்ளது.

3 மாதங்களுக்கு சண்டை நிறுத்தம் :‌ தொலைபேசி மூலம் பேசிய மாவோயிஸ்டு தலைவர் கிஷன்ஜி : 3 மாதங்களுக்கு சண்டையை நிறுத்த தயாராக இருப்பதாகவும் அந்த கால கட்டத்தில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் மாவோயிஸ்டுகள் எப்போதும் தாங்களாகவே வன்முறையை கையில் எடுத்ததில்லை என்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் தான் வன்முறையில் இறங்க தூண்டியதாகவும் பரபரப்பு புகார் கூறினார். சமீபத்தில் தங்களது இயக்த்தின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான ஆசாத் ‌அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தும் கூட அதை பொருட்படுத்தாமல் சுட்டுக் கொல்லப்பட்டதை மேற்கோள் காட்டியுள்ளார். மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்த பட்சத்திலும் அரசு தான் வன்முறையை தூண்டி விடுகிறது என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

நலத்திட்டங்களுக்கு நிதியுதவி? மத்திய அரசு மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக போலீஸ் படையை நவீனப் படுத்த ரூ. 800 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அந்த நிதியை ஏன் மேற்குவங்கம் , சட்டீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகளுக்கும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் அரசு பயன்படுத்தக் கூடாது என கிஷன்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் 64வது சுதந்திர தின உரையின் போது பிரதமர் மன்மோகன்சிங் ஆற்றிய உரையில் மாவோயிஸ்டுகள் வன்முறையை விட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் மாவோயிஸ்டு தலைவரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மம்தா விளக்கம் : மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது குறித்து தனது கருத்தை நிருபர்களுக்கு தெரிவித்த மம்தா : மாவோயிஸ்டுகள் அமைதியை நாடி வருவது வரவேற்கத்தக்க விஷயம். இது மாதிரியான சிக்கலான விஷயங்களுக்கு பேச்சுவார்த்தை ஒன்றே நல்ல தீர்வாக அமையும். ஆனால் மாவோயிஸ்டுகள் கூறியிருப்பது போல் மத்தியஸ்தராக செயல்படுவது குறித்து இன்னும் எந்த முடிவம் எடுக்கவில்லை. அது குறித்து தீவிரமாக பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

யெச்சூரி எதிர்ப்பு : மாவோயிஸ்டுகள், மம்தா தலையிட்டால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறியிருப்பது மம்தாவுக்கு மாவோயிஸ்டுகளுடனான தொடர்பை தெளிவு படுத்துகிறது என மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.


நவநீத கிருஷ்ணன் - திண்டுக்கல்,இந்தியா
2010-08-18 16:30:17 IST
மம்தா மற்ற அரசியல்வாதி போல இல்லை, அவர் எளிமையானவர், கொஞ்சம் நேர்மையானவரும் கூட, மத்திய அரசு கெளரவம் பார்க்காமல் மாவோவிஸ்ட் இடம் பேச்சு வார்த்தை நடத்தி ஆரம்பத்திலேய பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்....
மணி.வி - Chennai,இந்தியா
2010-08-18 16:24:21 IST
கத்திரிக்காய் காய்த்தால் கடைக்கு வந்துதானே ஆகவேண்டும். இப்போது எல்லார் சந்தேகமும் தீர்ந்துவிட்டதல்லவா? மாவோயிஸ்டுக்களைப் பாதுக்காத்து, வளர்த்து தூண்டிவிடுவது யாரென்று? எப்படியாவது மாநில ஆட்சியைப் பிடிக்கவேண்டுமென்ற ஆசையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயலில் ஒரு ஒட்டு காங்கிரஸ்காரர் மம்தா ஈடுபடுகிறார்,அவரையும் மன்மோகன் விட்டு வைத்திருக்கிறார். ஆண்டவன்தான் பாரதத்தைக் காக்கவேண்டும்!இவங்களுக்கு ஓட்டுப்போட்டவர்களை.......
சுறா - nellai,இந்தியா
2010-08-18 16:03:28 IST
இந்த பேச்சு வார்த்தை மூலம் தங்களுக்கு சிறது காலம் அவகாசம் கிடைக்கும். இந்த காலத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள திட்டம் போடுகின்றனர். மம்தா போன்ற 5ஆம் படை அரசியல் வாதிகள் பதவியில் இருக்கும் வரை இந்த மாவோயிஸ்ட்களை முற்றிலும் அழிப்பது கடினம்....
ராம் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-08-18 15:36:10 IST
குவைத் இருப்பதால் இந்திய அரசியல் வியாதிகளைபற்றி தெரியவில்லை. மம்தா வை குறைசொல்லும் அரசியல் பற்றி தெரியாதவர்களே மாவோயிஸ்டுகள் உருவானதற்கு காங்கரஸின் அந்நியகொள்கை காரணம். இந்தியாவை வெளிநாட்டிருக்கு சில இடங்களை விற்பதை எதிர்த்து உருவானதே மாவோயிஸ்ட்கள். சிதம்பரம் போல் மக்களால் தேர்ந்தெடுக்காமல் வரும் இந்த அரசியல் வியாதிகள் தான் பிரட்ச்சனைகளுக்கு மூல காரணம்....
selvam - kanniakumari,இந்தியா
2010-08-18 14:54:55 IST
தீவிரவாததிற்கு எதிராக மண்டியிடாமல் இலங்கயைப்போல் உள்நாட்டிலேயே நாட்டின் பாதுகாப்பை நிருபிக்க வேண்டும். அப்போதுதான் பக்கத்துக்கு நாட்டினர் பயப்படுவார்கள். வளரும் நாம் நமது பலத்தை நிருபிக்க வேண்டும். பிஜேபி ஆட்சியாக இருந்தால் இந்த நேரம் பேச்சு வார்த்தைக்கு வராமல் தீவிரவாதிகளை அழித்திருப்பார்கள். என்னமோ பிஜேபி தீவிரவாதத்தை மாவோயிஸ்டுகள் செய்தால் விட்டுவிடுகிறார்கள்...
Uday - Penang,மலேஷியா
2010-08-18 14:32:47 IST
மம்தா வெற்றிக்கு மாவோயிஸ்ட்கள் உதவுகின்றனர் ! மாவோயிஸ்ட்களை மம்தா காப்பாற்றுகிறார் ! இருவரும் தேச துரோகிகள் !...
விஜய் - சென்னை,இந்தியா
2010-08-18 14:29:07 IST
மத்திய அரசின் செயல்பாடுகள் தான் நாட்டில் வன்முறையை தூண்டுகிறது என்பது அசைக்க முடியாத உண்மை.இந்த பேச்சுவார்த்தை மட்டும் நடந்தால் காங்கிரஸ் கட்சியின் வேஷம் கலைந்துவிடும்.இதனால் இந்த காங்கிரஸ் பேய்கள் இந்த பேச்சுவார்த்தையை நிச்சயம் நடத்தவிடமாட்டர்கள்.காங்கிரஸ் கட்சியினர் நிஜமாகவே நாட்டில் அமைதியை விரும்புபவர்களாக இருந்தால் இந்த பேச்சுவார்த்தையை உடனே நடத்தவேண்டும்.பொறுத்து இருந்து பார்த்தால் மக்களுக்கு உண்மை புரியும்....
கோவிந்தராஜ் - coimbatore,இந்தியா
2010-08-18 14:27:10 IST
மாநில வளர்ச்சியை மத்திய மாநில அரசுகள் செய்ய துவங்கினாலே மாவோயிஸ்டுகள் ஜனநாயக பாதைக்கு திரும்புவார்கள். மாவோயிஸ்டுகள் மீது குற்றம் சுமத்தும் அரசுகள் தங்களது பணியினை சரியாக செய்கிறோமா என்ற சுய பரிசோதனைக்கு உட்படுத்தினால் என்ன நிலைமை என்னவென்று அவர்களுக்கே புரியும். இதுவரை மாவோயிஸ்டுகள் எந்த ஒரு நியாய விலை கடையையும் சூறையாடியதாக நாம் கேள்விபட்டது இல்லை. இருப்பினும் அரசியல்வாதியை அவர்கள் மத்தியஸ்தராக கேட்பது அவர்களுக்கு எப்போதாவது தவறாக படலாம். இதில் அரசுகள் சரியான கவனம் செலுத்தினால் நல்ல பயன் கிட்டும் என்பதில் ஐயமில்லை. போலீசாருக்கு இவ்வளவு செலவு அனாவசியமானது....
2010-08-18 13:11:35 IST
மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக போலீஸ் படையை நவீனப் படுத்த ரூ. 800 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அந்த நிதியை ஏன் மேற்குவங்கம் , சட்டீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகளுக்கும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் அரசு ஏன் பயன்படுத்தக் கூடாது ....
hariharan - Malaysia,இந்தியா
2010-08-18 13:01:20 IST
இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. நம்ம உள்துறை மந்திரியால செய்ய முடியாததை மம்தா உதவியுடன் சாதிக்க முடியும் என்றால் பாராட்ட வேண்டும். அன்று விடுதலை புலிகள் விஷயத்தில் ராஜீவ் காந்தி அவர்கள் ஸ்ரீலங்கா சென்று வரவில்லையா?...
venki - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-18 12:10:21 IST
மம்தாவை தேசிய தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யவேண்டும் மேலும் மாவோயிஸ்ட்களை ராணுவம் கொண்டு அடக்க வேண்டும். No comporamise in terrorism, regardless in which way it comes it has to be considered as Anti National Act, so, ultimately Military Action otherwise no one protect India...
ரவி - குவைத்,குவைத்
2010-08-18 11:24:46 IST
இதன் மூலம் மம்தா மாவோயிஸ்ட் சார்பானவர் என உறுதியாகிறது. கட்டுக்குள் இருந்த மாவோயிஸ்டுகளின் அட்டகாசம், மம்தா மத்தியில் பொறுப்புக்கு வந்தவுடன் தீவிரமடைதுள்ளது என்றால் அதற்கு மம்தாவின் ஆதரவு போக்கே காரணம். இவையெல்லாம் மம்தா மேற்கு வங்க முதல்வராகும் வரை நீடிக்கும். அதன்பின் தெரியும் மம்தாவிற்கு மாவோயிஸ்ட் பிரச்சினை "நாயர் புலி வால் பிடித்த கதை என்று."...
அஜய் நிர்மல் சிங் - அஜ்மன்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-18 11:18:19 IST
வரவேற்கத்தக்க செயல் இதில் அரசியல் செய்யாமல் அனைத்து கட்சிகளும் அரசும் இணைந்து நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு போராடும் மக்களை அழைத்து அவர்களின் மனப்பான்மையை அறிந்து அவர்களின் கோட்பாடுகளை உணர்ந்து புரட்சியை உங்கள் நல் திட்டங்களால் தடுத்து நிறுத்துங்கள். இந்திய அமைதியாக மற்றும் முன்னேற உங்கள் பேச்சு வார்த்தை திறந்த மனதோடு அமைய அனைவரும் விரும்புகிறோம், ப்ளீஸ் இதில் அரசியல் வேண்டாம்...

கருத்துகள் இல்லை: