சனி, 21 ஆகஸ்ட், 2010

இந்திய குடியுரிமை பெற இலங்கை அகதிகள் விருப்பம்

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்டாலும், கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் தங்கியுள்ள சுமார் 90,000 இலங்கை தமிழ் அகதிகள் தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கியிருக்க விரும்புவதாக தமிழக அரசின் மறுவாழ்வுத்துறையின் இயக்குநர் எம் கலைவாணன்  தெரிவித்தார்.
இவர்களில் பலர் இந்தியர்களை திருமணம் செய்து கொண்டிருப்பதும், படிப்பைத் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருப்பதும் இதற்கு முக்கிய காரணங்கள் எனவும் அவர் கூறினார்.   இதற்கு அப்பாற்பட்டு இலங்கையில் இன்னும் முழுமையான இயல்பு நிலை திரும்பவில்லை என்கிற கருத்தும் அவர்களிடையே நிலவுகின்றது எனவும் கலைவாணன் கூறுகிறார்.
தமிழகத்தில் தங்கியுள்ள சுமார் ஒரு லட்சம் இலங்கை தமிழ் அகதிகளில் பத்து சதவீதமானவர்கள் மீண்டும் தமது நாட்டுக்கு திரும்புவதற்கு விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
அதற்கான முன்னெடுப்புகளை இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்புடன் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் தமிழக அரசின் மறுவாழ்வுத்துறை இயக்குநர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.
‘இலங்கையிலேயே இன்னமும் பலர் தங்களது சொந்தப் பகுதிக்கு செல்ல முடியாத நிலை இருக்கும் போது, எம்மால் எப்படி அச்சமில்லாமல் திரும்பிச் செல்ல முடியும்” என சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம்,   தாரமங்கலம் பகுதியில் இருக்கும் அகதிகளில் முகாம்களில் உள்ள பலர் கேள்வி எழுப்பினர்.
எனினும் இலங்கையில் இயல்பு நிலை முற்றாக திரும்புமாயின் தாங்கள் திரும்பிச் செல்லத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
தமிழகத்திலேயே பல ஆண்டுகளாக தங்கிவிட்ட இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்

கருத்துகள் இல்லை: