புதன், 18 ஆகஸ்ட், 2010

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான சண்டைகளில் மக்கள் 50 பேரும் 228 யானைகளும்

இலங்கையில் காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் மோசமான பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் போதாது என்று கூறி வனவிலங்கு வைத்தியர்கள் சங்கத்தினர் ஐந்து நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துகின்றனர். இலங்கையில் கடந்த ஓராண்டில் மட்டும் மனிதர்களுக்கும் காட்டு யானைகளுக்கும் இடையிலான சண்டைகளில் மக்கள் 50 பேரும் 228 யானைகளும் பலியாக நேர்ந்தது. கடந்த சனிக்கிழமைகூட இரண்டு முதியவர்கள் காட்டு யானைகள் தாக்கி கொல்லப்பட்டிருந்தனர்.
காரணங்கள்
பல காலமாக யானைகள் தமது பாதையாகப் பயன்படுத்துகின்ற இடங்களில் மக்கள் குடியேறுவதே இப்படியான பிரச்சினைகள் ஏற்படக் காரணம். மக்கள் ஆங்காங்கே தங்கள் இஷ்டத்துக்கு மின்சார வேலிகளை அமைக்கும்போது, யானைகளுக்கு மதம் பிடித்துவிடுவதாகச் சொல்லப்படுகிறது.
இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது; தற்போது அங்கே மொத்தமாகவே நான்காயிரம் காட்டு யானைகள்தான் இருப்பதாகவும் அதிலே மூன்றில் இரண்டு பகுதி பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளுக்கு வெளியே வாழ்வதாகவும் தெரிகிறது. வன விலங்குகளுக்கான வைத்தியர்கள் என்று பார்க்கையில் இலங்கையில் மொத்தமாகவே 11 பேர் தான் இருக்கின்றனர். அவர்களுடைய சங்கம் நேற்று திங்கட்கிழமையிலிருந்து வரும் வெள்ளிக்கிழமை வரை வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசு எடுக்கும் முயற்சிகள் திருப்தியளிப்பதாய் இல்லை என இந்த சங்கத்தின் தலைவர் விஜித பெரேரா தெரிவித்தார். யானைகள் நடமாடும் பிரதேசங்களுக்குள் கால்நடைகள் நுழைந்து யானைகளின் உணவு ஆதாரங்களை சாப்பிட்டு, அவற்றின் நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
யானைகளுக்கு உணவாகப் பயன்படாத மரங்களை வெளியிடங்களில் இருந்து கொண்டுவந்து இந்தக் காடுகளில் சிலர் அறிமுகப்படுத்துகின்றனர்; யானைகளை விரட்டுவதற்காக சிலர் பட்டாசுக்களை வெடிப்பதால், யானைகள் கேட்கும் திறனை இழக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வாக ஒரு சில நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருக்கத்தான் செய்கிறது. உதாரணத்துக்கு, நிராதரவான யானைக் குட்டிகளை சிறிய சரணாலயங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட பெரிய வனப்பபகுதிகளுக்கு கொண்டு சென்று, அவை அங்கிருக்கின்ற மற்ற யானைகளுடன் பழகுகின்றனவா என்பதை வனத்துறையினர் கண்காணிகின்றனர்

கருத்துகள் இல்லை: