வியாழன், 19 ஆகஸ்ட், 2021

தாலிபான்களின் பொய் பிரசாரம் முன்னாள் அதிபர் கர்ஸாய் மீது போலி குற்றச்சாட்டு

எல்லாம் அந்த 9.5 பில்லியன் டாலரை விடுவிக்க தாலிபான்கள் போடும் நாடகம்தான்

 மின்னம்பலம் : ஆப்கானிஸ்தான் முழுமையும் தலிபான்களின் கைக்குள் வந்த நிலையில் அவர்கள் காபூலில் உள்ள அதிபர் மாளிகைக்குள்ளும் நுழைந்துவிட்ட நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி அமெரிக்க ஆதரவு ஆப்கன் அரசின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அதிபர் மாளிகையில் இருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்தும் வெளியேறி விட்டார்.
அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனது குடும்பத்தினருக்கும், தனக்கும் அடைக்கலத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்
அதேநேரம் அவர் ஆப்கானிஸ்தானின் கருவூலத்தை சூறையாடி சென்றுவிட்டதாக தாலிபான்கள் ஆப்கன்  கூறத் தொடங்கிவிட்டார்கள்.
அதிபர் கனி ஆப்கனை விட்டு பறக்கும்போது நான்கு கார்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் முழுக்க அமெரிக்க டாலர் கரன்சிகளை அடைத்து எடுத்துச் சென்றதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.


இதற்கிடையே தஜிஸ்கிஸ்தான் நாட்டிலுள்ள ஆப்கன் நாட்டின் தூதர் முகமது ஜாஹிர் அக்பர் இன்டர்போல் போலீஸுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
“ஆப்கனின் அதிபர் அஷ்ரப் கனி, அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப், முன்னாள் தலைமை ஆலோசகர் ஃபசில் முகமது ஆகியோர் ஆப்கானிஸ்தானின் கருவூலத்தைக் கொள்ளையடித்து விட்டனர். எனவே அவர்களை கைது செய்ய வேண்டும்” என்று கோரியிருக்கிறார் அவர்.

ஆப்கானிஸ்தான் செய்தி ஊடகங்கள் முன்னாள் அதிபர் கனி 169 பில்லியன் டாலர்களை தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டதாகச் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. பணத்தோடு முன்னாள் அதிபர் கனி ஆப்கனை விட்டு ஓடிவிட்டதாக அவரது முன்னாள் அமைச்சர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தியின்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ஃபேஸ்புக்கில் ஒரு லைவ் வீடியோவை ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியிட்டிருக்கிறார் முன்னாள் அதிபரான அஷ்ரப் கனி. அதில் அவர் தன்னைப் பற்றிய செய்திகளை மறுத்துள்ளார்.

"நான் தங்கியிருந்தால், காபூல் இரத்தம் சிந்துவதை நான் பார்த்திருப்பேன். அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனையின் பேரிலேயே நான் காபூலை விட்டு வெளியேறினேன். காபூல் மற்றொரு ஏமன் அல்லது சிரியாவாக அதிகாரப் போட்டிகளால் மாற்றப்படக் கூடாது என்பதால்தான் நான் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மேலும் நான் மில்லியன் கணக்கான டாலர்களுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக சிலர் வதந்திகளை கிளப்பி வருகிறார்கள். நான் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறும்போது அணிந்திருந்த ஆடை மற்றும் சில ஆடைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். ஆனால் எனது நடத்தையைப் படுகொலை செய்யும் வகையில் (பர்சனாலிடி அசாசினேஷன்) நான் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டேன் என்று சிலர் பொய்களைப் பரப்புகிறார்கள். நீங்கள் சுங்க அதிகாரிகளிடம் விசாரித்தாலே இதெல்லாம் பொய் என்று தெரியும்” என்று கூறியிருக்கும் அஷ்ரப் கனி தான் விரைவில் நாடு திரும்ப இருப்பதாகவும் கூறியுள்ளார்.

“தலிபான்களுக்கும் முன்னாள் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைந்த நான் விரைவில் ஆப்கானிஸ்தான் திரும்புவது பற்றி ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறேன். இதனால் நீதி, உண்மையான இஸ்லாமிய மற்றும் தேசிய விழுமியங்களுக்கான முயற்சிகளைத் தொடர முடியும்" என்று கூறியிருக்கிறார் தப்பியோடிய ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: