வியாழன், 19 ஆகஸ்ட், 2021

(சுவாதி ) ராம்குமார் கொலை வழக்கு கிளறப்படுகிறது ...மனித உரிமைகள் ஆணையம் முன் சிறைஅதிகாரிகள், மாஜிஸ்ட்ரேட் ஆஜர்

சுவாதி கொலை வழக்கில் மர்மம் விலகியது: கொலையாளி ராம்குமார் பிடிபட்டது  எப்படி? | சுவாதி கொலை வழக்கில் மர்மம் விலகியது: கொலையாளி ...

Jeyalakshmi C  -   Oneindia Tamil News  :  சென்னை: இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட வழக்கில் மாநில மனித உரிமை ஆணையத்தில் சிறைத்துறை அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்
கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அலுவலகம் செல்வதற்காக காத்திருந்த மென்பொறியாளர் சுவாதி காலை 6.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த படுகொலை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சுவாதி படுகொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அடுத்த சில நாட்களில் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம்குமார் (வயது 22) என்ற இளைஞரைக் கைது செய்தனர்.

காவல்துறையினர் கைது செய்ய வருவது தெரிந்து உடன் ராம்குமார் தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துக்கொள்ள முயன்றதாக தெரிவித்தனர்.
கழுத்தில் காயங்களுடன் ராம்குமாரை போலீசார் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின், பலத்த பாதுகாப்புடன் ராம்குமார் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு எழும்பூர் பெருநகர மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர் படுத்தப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் ராயப்பேட்டை மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார் அடுத்த சில வாரங்களில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ராம்குமார் மரணத்தில் உள்ள மர்மம் வெளிவர நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

ராம்குமார் மரணம் குறித்து அப்போது அறிக்கை வெளியிட்ட எதிர்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின்,
இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்டபோதே போலீஸ் அலட்சியம் காட்டியது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே ராம்குமாரை போலீஸ் கைது செய்தது. கைது செய்தபோதே கழுத்தை அறுத்து ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் கூறியது. தொடக்கத்தில் இருந்தே சுவாதி கொலை வழக்கின் உண்மைநிலை குறித்து சந்தேகங்கள் எழுந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். ராம்குமார் மரணம் பற்றி சந்தேகம் எழுந்து இருப்பதால், இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

ராம்குமார் மரணம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. நான்காண்டு காலமாக அமைதியாக ஆறப்போடப்பட்டிருந்த ராம்குமார் மரண வழக்கு கடந்த ஆண்டு மீண்டும் உயிர்பெற்றது.

மனித உரிமைகள் ஆணையத்தின் முன் ஆஜராக வேண்டும் என்று சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன், துணை ஜெயிலர் உதயகுமார், உதவி ஜெயிலர் பிச்சாண்டி, தலைமை வார்டன் சங்கர்ராஜ், முதல் நிலை வார்டன்கள் ராம்ராஜ், பேச்சிமுத்து ஆகியோர் மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் துரை.ஜெயச்சந்திரன் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

6 மாதங்களுக்கு பிறகு.. ஒற்றை நபருக்கு கொரோனா.. ஒட்டுமொத்தமாக லாக்டவுன் போட்ட ஜெசிந்தா ஆர்டெர்ன்6 மாதங்களுக்கு பிறகு.. ஒற்றை நபருக்கு கொரோனா.. ஒட்டுமொத்தமாக லாக்டவுன் போட்ட ஜெசிந்தா ஆர்டெர்ன்

ராம்குமார் மரண வழக்கு குறித்து புழல் சிறைத்துறை அதிகாரிகளிடம் 2வது முறையாக விசாரணை நடைபெறுகிறது. மாநில மனித உரிமை ஆணையத்தில் இன்று புழல் சிறை கண்காணிப்பாளர் அன்பழகன், ஜெயிலர் ஜெயராமன், சிறைக்காவலர் பேச்சிமுத்து ஆகியோர் இன்று மனித உரிமைகள் அணையம் முன்பு ஆஜராகியுள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த சுவாதி படுகொலையும், புழல் சிறையில் ராம்குமார் மரணமும் தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகாலமாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்த ராம்குமார் மரண வழக்கு மீண்டும் உயிர்பெறத் தொடங்கியுள்ளது. அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக இப்போது ஆளுங்கட்சியாக ஆட்சியில் அமர்ந்துள்ளது. இனியாவது ராம்குமார் மரணத்தில் உள்ள மர்மம் விலகுமா? என்று பெற்றோர்களும் உறவினர்களும் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: