செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

ஆப்கானில் தலிபான்களுக்கு எதிராக அகமது ஷா மசூதி குரல் - தாலிபான்களுக்குக் அடிபணிய மாட்டோம்!

amrulla-panjshir

நக்கீரன்   :    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலும் தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்ததையடுத்து, அந்தநாடு முழுவதும் தலிபான் வசமாகியுள்ளது.
இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், அந்நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியிலும் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவரான முல்லா அப்துல் கனி பரதர், ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அறிவிக்கப்படவுள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே தலிபான்களுக்கு எதிரான அமைப்பு ஒன்று அந்நாட்டில் உருவாகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காபூலுக்குள் தலிபான்கள் மீண்டும் நுழையத் தொடங்கியதுமே ஆப்கானிஸ்தான் துணை அதிபராக இருந்த அம்ருல்லா சாலே, "நான் என்றும் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் தலிபான் தீவிரவாதிகளுக்கு தலைவணங்க மாட்டேன். எனது தலைவர் அகமது ஷா மசூதின் மாண்புக்கும் எப்போதும் நான் துரோகம் இழைக்க மாட்டேன்.
என் வார்த்தைகளை நம்பிய லட்சக்கணக்கான மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்க மாட்டேன். தலிபான்களுடன் ஒரே கூரையின் கீழ் ஒருமித்து வேலை செய்ய மாட்டேன்" எனத் தெரிவித்திருந்தார்.

அகமது ஷா மசூத், தலிபான்களை எதிர்க்கும் போராளிக்குழு ஒன்றின் தலைவராவார். தலிபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் இன்று கைப்பற்றிருந்தாலும் பாஞ்ஷிர் பகுதி அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அப்பகுதி தலிபான்களுக்கு எதிரான போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 90களில் தலிபான் மிகுந்த பலம் பெற்றிருந்த போதும் பாஞ்ஷிர் பகுதியை அவர்களால் கைப்பற்றமுடியவில்லை. அந்தளவிற்கு பாஞ்ஷிர் பகுதியைப் போராளி குழுக்கள் பாதுகாத்து வந்தனர். அதன் தலைவராக அகமது ஷா மசூத் இருந்தார். துணை அதிபராக இருந்த அம்ருல்லா சாலே, அகமது ஷா மசூத்துடன் இணைந்து தலிபான்களுக்கு எதிராகப் போராடியவர் ஆவார்.

 இதனால் அம்ருல்லா சாலேவின் அந்த ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்தொடர்ச்சியாக அகமது ஷா மசூத்தின் மகனான அஹ்மத் மசூத், மேலும் சிலருடனும் அம்ருல்லா சாலே ஆலோசனையில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகிப் பரபரப்பை அதிகப்படுத்தின. இந்நிலையில் தலிபான்களுக்கு எதிராகப் போராளி அமைப்பு ஆப்கானில் உருவாகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: