வியாழன், 17 ஜூன், 2021

நள்ளிரவில் சென்னை அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபா

நக்கீரன் -பி.அசோக்குமார் - ஸ்டாலின் :   பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா, டெல்லியில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நள்ளிரவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர். ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
 இதுதொடர்பான வழக்கில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ உட்பட 8 பிரிவுகளின்கீழ் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவுசெய்தனர்.  இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் சான்றுகளையும் புகைப்படங்களையும் அவரது தரப்பினர் சமர்ப்பித்திருந்தனர். இதையடுத்து, டேராடூனில் உள்ள சிவசங்கரை நேரடியாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி குழு விரைந்தது. மேலும், சிவசங்கர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே டேராடூனில் இருந்து சிவசங்கர் தப்பித்துச் சென்றார்.
ஆனால், நேற்று காலை டெல்லியில் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீஸார் வளைத்துப் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து டெல்லி நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து நள்ளிரவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அவரை சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை, செங்கல்பட்டில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்த போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: