புதன், 16 ஜூன், 2021

சிவசங்கர் பாபா டேராடூன மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்

 தினத்தந்தி : டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா தப்பியோடியுள்ளார்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர்.  
இதனை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



இதற்கிடையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிக்கியுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை போலீசார் நேற்று டேராடூன் விரைந்தனர். சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான தனிப்படையினர் டேராடூன் விரைந்தனர்.

ஆனால், இன்று காலை சிபிசிஐடி போலீசார் டேராடூனில் உள்ள அந்த குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்றபோது சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

நேபாள நாட்டில் சிவசங்கர் பாபாவுக்கு நீண்ட தொடர்புகள் இருப்பதாகவும் கூறப்படுவதால் அவர் நேபாள நாட்டிற்கு தப்பிச்சென்றிருக்கலாமா? என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, இந்த வழக்கில் சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரிந்த பாரதி, தீபா என்ற 2 பெண் ஆசிரியர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் தற்போது சிபிசிஐடி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

தற்போது சிவசங்கர் பாபா எங்கு உள்ளார் என்பது குறித்து அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஆசிரியர்களிடம் மற்றொரு தனிப்படை சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு எங்கும் தப்பிச்செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் நேற்று லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதனால், சிவசங்கர் பாபா இந்தியாவில் உள்ள எந்த விமான நிலையத்தில் இருந்தும் வெளிநாடுகள் செல்ல முடியாது. ஆனால், சிவசங்கர் பாபாவின் பக்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நேபாளத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், அவர் தரை மார்க்கமாக நேபாளத்திற்கு சென்றிருக்கலாமா? என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

tamil.news18.com : உத்ராகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள சிபிசிஐடி தனிப்படை போலீசார் பாபா தலைமறைவாக உள்ள இடம்  குறித்து  தீவிர விசாரணை.
வட மாநில சாமியர்களின் மடத்தில் சிவசங்கர் பாபா பதுங்கியுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் சாத்தங்குப்பம் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளாக சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகின்றது.
இந்தப் பள்ளியின் நிறுவனர் தான் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா.  கூளிங்கிளாஸ், பேன்ட், சர்ட் , உயரக சொகுசு கார்கள் ,கண்ணாடி மாளிகை வீடு என்று மற்ற சாமியார்களை விட ஹய்கிளாஸ் மனிதனாக காட்டி கொள்பவர் சிவசங்கர் பாபா.
தன்னை கடவுளாக அறிவித்துக்கொண்டவர். இவரது பள்ளியில் படித்த மாணவிகளில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தற்போது முன்னாள் மாணவிகள் ஏராளமானோர் புகார் தெரிவித்துவருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்புக் குழு விசாரணை நடத்திவருகிறது. இதுதொடர்பாக, சிவசங்கர் பாபா மீது காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: