வியாழன், 17 ஜூன், 2021

நீட் தேர்வால் பாதிப்பு... பொதுமக்கள் கருத்து கூறலாம் - ஏ.கே. ராஜன் குழு அறிவிப்பு!

nakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு :
Impact of NEET exam; Public can comment - AK Rajan Committee announcement!

  நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து, கடந்த 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர், ''சமூகநீதியை நிலைநாட்டும் கடமை தமிழக அரசுக்கு எப்போதும் உண்டு. எனவே நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பின்தங்கிய மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதனை சரி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும் இந்தக் குழு ஆய்வு செய்யும். இதன் மூலம் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பை அகற்ற தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்'' என தெரிவித்திருந்தார்.

 அதனையடுத்து நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவில் 8 உறுப்பினர்கள் கடந்த 10 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டனர். உறுப்பினர்களாக மருத்துவத்துறைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர்,  டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் உள்ளிட 8 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.

 நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம்  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் 14ஆம் தேதி கூடியது. இந்நிலையில், நீட் தேர்வில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் மக்களின் கருத்தையும் இக்குழு கேட்க இருக்கிறது.  தமிழ்நாட்டு மக்கள் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து neetimpact2021@gmail.com என்ற இணைய முகவரியில் கருத்து கூறலாம். வரும் 23ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அனுப்பிவைக்கலாம் என ஏ.கே. ராஜன் குழு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: