திங்கள், 14 ஜூன், 2021

சாட்டை துரைமுருகன்.. கிஷோர்.. "கேமர்" மதன்.. 3 நாளில் அடுத்தடுத்து தட்டி தூக்கிய போலீஸ்.. பின்னணி!

  Shyamsundar - /tamil.oneindia.com :  சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து 2 யூ டியூபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னொரு யூ டியூபர் மீது போலீஸ் விரைவில் ஆக்சன் எடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன
தமிழ்நாட்டில் சமூக ஊடக தளங்கள் மக்களின் அரசியல் கொள்கையையும், அன்றாட வாழ்க்கையையும் மாற்ற கூடிய சக்தி கொண்ட ஊடகமாக மாறிவிட்டது.
கிளப் ஹவுசில் நடக்கும் ஒரு சின்ன விவாதம் உங்கள் வாழ்க்கையையே புரட்டி போடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது
யூ டியூபில் போடும் சின்ன வீடியோ உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லலாம், ஜெயில் கம்பிகளுக்கு பின்னிலும் கொண்டு தள்ளலாம்.
அப்படித்தான் தமிழ்நாட்டில் யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடந்த சில வருடங்களாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள், வீடியோக்களை பகிர்ந்து வந்த மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது சாட்டை துரைமுருகன் மீதுதான். யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். திருச்சியில் வினோத் என்ற கார் நிறுவன ஊழியரை மிரட்டியதாக சாட்டை துரைமுருகன் உட்பட சிலர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சாட்டை துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் சாட்டை துரைமுருகன் மீது மிரட்டல் புகார் தவிர மேலும் சில வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.


முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த தவறாக பேசும் வகையில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ திமுகவினர் மட்டுமின்றி மற்ற சில கட்சியினர் இடையிலும் கடும் எதிர்ப்பை சந்தித்து இருந்தது. அதோடு தொடர்ந்து திமுகவினரை கொஞ்சம் தரைகுறைவாகவும், பொய்யான செய்திகளை அவதூறாகவும் இவர் பரப்பி வந்தார். இவருக்கு எதிராக பல முறை போலீசில் பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
புகார்

இந்த தொடர் புகார்களை சேர்த்து, நேரடியாக கட்டப்பஞ்சாயத்து செய்யும் அளவிற்கு சாட்டை துரைமுருகன் களமிறங்கியதால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அடுத்து கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டுள்ளார். இவரும் தொடர்ந்து திமுக தலைவர்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள், சில சினிமா துறையினர், பெண் பத்திரிகையாளர்கள் என்று பலரை தவறாக பேசி வந்தார்
பெண் பத்திரிக்கையாளர்கள்

இவருக்கு எதிராக பெண் பத்திரிகையாளர்கள் பலர், பல முறை புகார் அளித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து இவர் நடவடிக்கைக்கு அஞ்சாமல் யூ டியூபில் வீடியோ போட்டு வந்தார். அவதூறுகளையும், அரசியல் தலைவர்களுக்கு எதிராக பாலியல் ரீதியான கருத்துகளையும் தொடர்ந்து இவர் வெளியிட்டு வந்ததாக புகார்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது கிஷோர் கே சாமி மொத்தமாக கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இது போக சமூக வலைத்தளங்களில் கடந்த ஒரு வாரமாக சர்ச்சையாக்குள்ளாகி வரும் கேமர் மதன் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்க உள்ளது.பள்ளி சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக பேசியதாகவும், யூ டியூப் கேமில் பெண்களிடம் மோசமாக பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட யூடியூப் கேமர் மதனுக்கு போலீஸ் வலை விரித்துள்ளது. புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீஸ் முன் மதன் ஆஜராக வேண்டும் என்று போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

யூ டியூப் சேனலில் பிரபலம் ஆன நிலையில், சேனலில் இவர் மோசமாக பேசுவது, பெண்களை கெட்ட வார்த்தையில் திட்டுவது என்று கேமர் மதன் மிக மோசமாக நடந்து இருக்கிறார். சிறுமிகளிடமும் இன்ஸ்ட்டா பக்கத்தில் பாலியல் ரீதியாக தவறாக பேசி இருக்கிறார். சில பள்ளி சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் புகார்கள் வைக்கப்பட்டுள்ளன
வீடியோ

சிறுமிகளின் பாலியல் ரீதியான புகைப்படங்கள், வீடியோக்களையும் இவர் டெலிகிராமில் விற்றதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. மதன் மீது புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் மாநில குழந்தைகள் நல ஆணையத்திடமும் புகார் தரப்பட்டது. இதையடுத்து இன்று அவர் போலீசார் முன் ஆஜராக உள்ளார். இன்று மாலையே இவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து மூன்று யூ டியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை: