வெள்ளி, 19 மார்ச், 2021

படிச்ச திமிருலதானே பேசுற! இருடா . இரு, NEC (தேசிய கல்விக் கொள்கை) வருது! அப்புறம் நீயும் உன் ஜாதியும் பள்ளிக்கூட்டத்திற்கு வெளியிலதான் நிப்பீங்க. “

No photo description available.
Annamalai Arulmozhi : திருச்சி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இருந்து ME படித்து நல்ல வேலையில் இருக்கும் ஒரு நண்பர் நேற்று என்னை சந்தித்தார்.
அவரது பிரச்சினையைக் கூறினார்.
அவர் தனக்குப் பிடித்த ஒருவருடைய பேச்சினை தனது முகநூலில் பகிர்ந்ததற்காக, பல ஆண்டுகளாக தொடர்பில் இல்லாத அவரது கல்லூரிக்கால நண்பர் ஒருவர் (தற்போது முக்கியமான இடத்தில்
பணியாற்றுகிறார்)
திடீரென்று அவரது முகநூல் பக்கத்தில் வந்து அவரது சாதியை குறித்து இழிவுபடுத்தி கடுமையான வசைமொழிகளை பதிவிட்டுள்ளர்.
மேலும் அந்த நண்பர் தனது முகநூல் பக்கத்திலும் இந்த ME படித்த நண்பரைப் பற்றி மிக இழிவாகக் குறிப்பிட்டு அவரையும் Tag செய்துள்ளார்.
அந்த பதிவில் இந்த நண்பரை
“ மதம் மாறியவர் “ என்று பொய்யும் சொல்லியிருக்கிறார்.
அந்த நபரின் பதிவின் நோக்கம் இந்த நண்பரை வன்முறையாளர்களுக்கு காட்டிக்கொடுப்பதுபோல அமைந்துள்ளது.
மூன்றாவதாக அவர்களது தனிப்பட்ட நட்புக் குழுவில் (வாட்சாப்) இந்த நண்பர் முறையிட அங்கும் அந்த நபர் இவரை இழிவாகப் பேசியுள்ளார் .
அதன் உச்ச கட்டமாக அந்த நபர் பயன்படுத்திய மிரட்டல் என்ன தெரியுமா ?
“ படிச்ச திமிருலதானே பேசுற! இருடா . இரு, NEC (தேசிய கல்விக் கொள்கை) வருது. அப்புறம் நீயும் உன் ஜாதியும் பள்ளிக் கூடத்துக்கு வெளியிலதான் நிப்பீங்க. “
இத்தகைய ஒரு கேவலமான உளவியல் தாக்குதலை தன் நண்பன் மீது ஒருவனால் நடத்தமுடியுமா ? என்று நினைக்கிறீர்களா ?  முடியும்.
 அதை செய்ய வைப்பதுதான் அடிப்படை வாதம்,
பாசிசம். தான் நம்புவதற்கு எதிரான கருத்து கொண்ட ஒருவரை கொல்லவும் தனக்கு உரிமை உண்டு , அது தனது நம்பிக்கைக்காக தான் செய்ய வேண்டிய கடமை என்று ஒருவரை நம்ப வைப்பதுதான் தீவிரவாதம்.
அதை நாட்டின் பேரால் தேசபக்தியின் பேரால் நடைமுறைப்படுத்துவதுதான் பாசிசம்.
அந்த நபருக்கு, தான் வரிசையாக செய்யும் தவறுகள் என்ன என்பதும் அதன் விளைவுகள் என்ன என்பதும்தெரியுமா என்று கூட புரியவில்லை.
1. ஒருவருடைய முகநூலில் வந்து சாதியைப் பற்றிப் பேசி இழிவுபடுத்துவது
2. மதம் மாறாத ஒருவரை நீ மதம் மாறியவன் என்று பழிசுமத்துவது
3. நீயும் உன் சாதியும் கல்விக்கூடத்துக்கு வெளியே நிறுத்தப்படுவீர்கள் என்று மிரட்டி பெருமைப்படுவது. இதில் முக்கியமானது என்னவென்றால் ஒரு கிராமத்தில் , ஓடுக்கப்பட்ட சாதியில் பிறந்து பெற்றோரை இழந்து மற்றவர்கள் உதவியால் படித்தவர்தான் இந்த பாதிக்கப்பட்ட நண்பர். அவரது கல்விக்குப் பணம் கட்ட அனைத்து சாதிகளையும் சேர்ந்த நண்பர்களும் உதவி செய்தார்கள் என்பதையும் அழுத்தமாகக் கூறினார். அதற்கும் மேல் அவர் கூறிய ஒரு செய்தி இது .
“ +2 மேல்நிலைப்படிக்க இப்படிப்பட்ட உதவிகளால் பணம் கட்டி விட்டேன். விறகு வெட்டி இருவேளை சாப்பாட்டு செலவை சமாளித்தேன். ஆனால் பஸ் டிக்கெட்டுக்கும் பிறரிடம் பணம் கேட்பதற்கு அவமானமாக இருந்தது. படிப்பை நிறுத்தி விடலாமா என்று யோசிக்கத் தொடங்கிவிட்டேன். அந்த நேரத்தில்தான் முதல்வராக இருந்த கலைஞர் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் திட்டத்தை அறிவித்தார். எனக்கு நம்பிக்கை வந்தது.. படித்தேன் . பின்வாங்கக்கூடாது என்று முயற்சி செய்து படித்தேன் . என் பெயருக்குப் பின்னால் இன்று M E என்று போடுகிறேன் ...”
இதை சொல்லும்போது அவரும்
கேட்டுக் கொண்டிருந்த நானும் எத்தகைய மனநிலையில் இருந்திருப்போம் என்பது உங்களுக்குப் புரியும்.
அவர்சென்ற பிறகு
எப்பொழுதும் என்னுடன் அரசியல் விவாதம் செய்யும் ஒரு நண்பரோடு பேசினேன். நேற்றும் எங்களுக்குள்ஒரு விவாதம் நடந்தது. கலைஞரின் குடும்ப வாழ்க்கை பற்றியும் அரசியல் தலைவர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டியது பற்றியும் பேச்சு வந்தது. அப்போது இந்த ME படித்த நண்பரின் கதையைக்கூறி நான் கேட்ட கேள்வி இது .
இந்த இளைஞருடைய வாழ்க்கையில் இரண்டு கொள்கைகள் வருகின்றன. ஒரு கொள்கை சார்ந்த தலைவர் இவரையும் இவரது சமூகத்தையும் படிக்க வைக்க பஸ்பாஸ் கொடுத்து இட ஒதுக்கீடும் அதிலும் உள் ஒதுக்கீடும் கொடுத்து ME படிக்க வைத்தார். அவரது இயக்கம் இன்றும் பல உதவித் திட்டங்களை அறிவிக்கிறது.
மற்றொரு கொள்கை சார்ந்த தலைவரோ, இருக்கும் இட ஒதுக்கீட்டை பறிக்கறார. கல்வி உதவித்தொகையை மறுக்கிறார். 5 ஆம வகுப்பில் பெயிலான குழந்தை திரும்ப பள்ளிக் கூடத்தில் படிக்க முடியாது என்கிறார். அவரது கொள்கையை நம்புகிற ஒருவர்
“ வாடா உன்னையும் உன் சாதியையும் பள்ளிக்கு வெளியே நிறுத்துகிறோம்” என்று கொக்கரிக்கிறார்.
இந்த இரண்டாவது கொள்கையைச் சொல்லும் இயக்கத்தின் தலைவர்கள் பிரம்மச்சாரியாகவோ, கட்டிய ஒரே மனைவியைக் கூட கைவிட்டு வாழும் உத்தமர்களாகவோ வாழ்வதால் இந்த பெரும் சமூகம் அடையும் நன்மை என்ன ?
இந்த நண்பரையும் அவரைப்போல லட்சக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் படிக்க வைத்த ஒரு தலைவர் அப்படி வாழாததால் இந்த இளைஞருக்கும் இப் பெரும் சமூகத்திற்கும் ஏற்பட்ட நட்டம் என்ன ?
அவர் யாருக்கு ஓட்டு போடுவார்??
“நீயும் இந்து நானும் இந்து ஆனால் நீ படித்தால் நாட்டில் தகுதி திறமை போய்விடும் “என்பவருக்கா ?
“நாம் சமமான மனிதர்களாவோம். வா .. படி . தகுதியும் திறமையும் தானே வரும் .! “என்பவருக்கா ??
இதைப் புரிந்து கொள்வதற்கு இதை விட வேறு வாய்ப்பு ஏது??
பின்குறிப்பு
அந்த நபர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அது பற்றி ஆலோசனைகளை வழங்காதீர்கள் தோழர்களே.

கருத்துகள் இல்லை: