செவ்வாய், 16 மார்ச், 2021

கடுமையான பக்க விளைவு எதிரொலி; ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசிக்கு 9 நாடுகள் தற்காலிக தடை

dailythanthi.com : லண்டன், இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டின் மிக பெரிய மருந்து விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஆஸ்டிரா ஜெனிகா கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது. 

இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து நாடுகளில் அந்நிறுவனம் 1.7 கோடி பேரிடம் பரிசோதனை மேற்கொண்டு பாதுகாப்பு தரவுகளை சேகரித்து வைத்துள்ளது. இந்த நிலையில், ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியை போட்டு கொண்ட பின்னர் ஆஸ்திரியா நாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் அந்நாட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.                        அதுபற்றி அந்நாட்டு அரசு ஆய்வில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அந்நாடு தடை விதித்தது.                            இதனையடுத்து, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் நார்வே உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் இந்த தடுப்பூசியை தடை செய்தன.  ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி போட்டு கொண்ட முதியவர்கள் பலருக்கு ரத்த கட்டு ஏற்பட கூடிய பல சம்பவங்கள் தெரிய வந்துள்ளன என அந்நாடுகள் கவலை தெரிவித்து உள்ளன.


இதனால், நார்வே அரசு கடந்த சனிக்கிழமை இந்த தடுப்பூசிக்கு தடை விதித்தது.  இதனை தொடர்ந்து அயர்லாந்து அரசும் கடந்த ஞாயிற்று கிழமை இதற்கு தற்காலிக தடை விதித்தது.  இந்நிலையில், ரத்த கட்டு சம்பவங்களை தொடர்ந்து ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டை நெதர்லாந்து அரசும் நேற்று நிறுத்தி வைத்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிறைவடையாத விசாரணை ஆகியவற்றை முன்னிட்டு ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தி வைக்கும்படி டச்சு மருத்துவ வாரியம் அறிவுறுத்தி உள்ளது.  இதன்படி, மார்ச் 28ந்தேதி வரை அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்த தடுப்பூசி பயன்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி உற்பத்தி நிறுவனம், சேகரித்து வைத்துள்ள பரிசோதனை தரவுகளின் அடிப்படையில், ரத்து கட்டு ஏற்படுவதற்கான ஆபத்து பற்றிய எந்த சான்றுகளும் இல்லை என தெரிவித்து உள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியால் இன்றுவரை ரத்த கட்டு ஏற்பட்டதற்கான சான்றுகள் இல்லை.  தடுப்பூசி போடுவது தொடர வேண்டும் என்பது முக்கியது.  அதனாலேயே நாம் உயிர்களை காக்க முடியும்.  அந்த வைரசால் ஏற்பட கூடிய கடுமையான வியாதியை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்து உள்ளது.

இதனை ஐரோப்பிய மருத்துவ கழகமும் கேட்டு கொண்டுள்ளது.  ஆனால், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் இந்த தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்து உள்ளன.  இதனால், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 9 நாடுகள் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு தடை விதித்து உள்ளன.

கருத்துகள் இல்லை: