திங்கள், 23 நவம்பர், 2020

நிவார் புயல்: கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து ரத்து!

ns7.tv  : தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவாகவுள்ள நிவர் புயல், நவ.25ம் தேதி அதிதீவிர புயலாக மாறி மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  தமிழகத்தில் வரும் 24, 25 தேதிகளில் சென்னை - திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களுக்கான ரயில் சேவை, தஞ்சை - சென்னை, சென்னை - தஞ்சை, திருச்சி - சென்னை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இந்நிலையில் வரும் 24ம் தேதி முதல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 24ம் தேதி மதியம் 1 மணி முதல்  பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொரும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் பழனிசாமி, நிவர் புயல் காரணமாக பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாதவீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனக்கூறியுள்ள முதல்வர் பழனிசாமி, அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும் எனவும் எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

மேலும், மழை நேரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளுக்கு கூடுதலாக 1,000 பணியாளர்களையும், கூடுதல் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின் கடத்திகளை பிற மாவட்டங்களிலிருந்து பெற்று தயார் நிலையில் வைக்க வேண்டும் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.  
 

maalaimalar :சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது நாளை புயலாக மாறி நாளை மறுநாள் காரைக்கால்-மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கக் கூடும். தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்  மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும்.  
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

சூறாவளிக் காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் 25ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: