வியாழன், 26 நவம்பர், 2020

சட்டத்தைக் கொளுத்துங்கள்! - ‘விடுதலை’ – அறிக்கை 21.11.1957

Image may contain: text that says 'நவம்பர் 26 1957 ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைக் கொளுத்திய ஜாதிஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்கம் திராவிடர் விடுதலைக் கழகம்'
Add caption
Gomathy Bsr : · அரசியல் சட்ட எரிப்பு ஏன்? ‘பிராமணன் என்று ஒரு சாதி சட்டத்தில் இருக்க அனுமதிக்க மாட்டோம். அப்படி இருந்தாலும், அவன் பிராமணனாக வாழ அனுமதிக்க மாட்டோம் என்று அரசாங்கம் சொல்லட்டும்’. - தோழர் பெரியார் தோழர்களே! இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள், பிராமணன் என்ற ஒரு சாதி கிடையாது.சட்டத்தில் அந்த மாதிரிக் கருதமாட்டோம்’ என்று அறிக்கை வராவிட்டால் அரசாங்கச் சட்டப்புத்தகத்தை நாங்கள் கொளுத்தப் போகிறோம். இதை நாங்கள் வருத்தத்துடனேயே சொல்கிறோம், வெறும் குறும்புக்காகவோ, விளம்பரத்திற்காகவோ, ஜெயிலுக்குப் போய் வந்ததைக் காட்டி ஓட்டு வேட்டையாடவோ நாங்கள் அந்தக் காரியம் செய்யவில்லை.
எனக்கு 79 வயதாகிவிட்டது. நம் மக்களுக்கு ஏதாவது காரியம் செய்துவிட்டு நான் சாக வேண்டும்.இல்லையென்றால், நம் மக்களுக்கு உணர்ச்சியுட்டுவிட்டுச் சாகவேண்டும். இன்றைய தினம் எல்லாப் பார்ப்பனப் பத்திரிக்கைகளும் கட்டுப்பாடாக, நான் பார்ப்பனரை வெட்டச் சொன்னேன், குத்தச் சொன்னேன் என்று கூப்பாடு போடுகின்றன! எந்தப் பார்ப்பானிடம் எனக்கு விரோதம்? யார்மீது துவேஷம்?நேற்று எனக்கு நடைபெற்ற விழாவுக்குப் பார்ப்பனர் பணம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த ‘செக்’ என்னிடம் இருக்கிறது. ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், எனக்குத் தனிப்பட்ட முறையில்யார்மீதும் துவேஷம் இல்லை என்பதைக் காட்டவே!
நான் ஏன் ஒரு கூட்டமே ஒழிய வேண்டுமென்று சொல்லுகிறேன்? நம் சமுதாயத்திற்கே களை மாதிரி இருந்துகொண்டு வளரவொட்டாமல் செய்கிறது – அந்தக்கூட்டம். வெட்டுகிறேன் என்று சொன்னேன். குத்துகிறேன் என்று சொன்னேன் என்று புச்சாண்டி காட்டுகின்றனர். அப்படிச் சொல்லுவதன்மூலம் அந்த நாளையே அவர்கள் விரிவுபடுத்துகின்றனர்.
‘காந்தியார் படத்தை எரித்தால் தலைகள் உருளும். இரத்த ஆறு ஓடும், அதற்கு 20,000 பேர் தயார்’ என்று சொன்னார்களே, அவர்களை நீ என்ன செய்தாய்? நான் சொல்லுகிறேன் – ‘சாதி ஒழியாவிட்டால் இரத்த ஆறு ஓடும்’ என்று . ‘சாதி இருக்கத்தான் வேண்டும்’ என்று நீ சொல்லேன்!
இந்த மாதிரிக் கூப்பாடு போட்டால் அரசாங்கம் பிடித்து எங்களை ஜெயிலில் போடும், நாங்கள் பயந்துகொள்வோம் என்பது பார்ப்பனர்கள் நினைப்பு.இது யாரிடம் பலிக்கும்? நான்தான் உயிரைவிடத் தயாராயிருக்கிறேனே! என்னுடைய தொண்டர்களும் தயாராயிருக்கிறார்களே!
வேண்டுமானால், இந்தப் பார்ப்பன சமுதாயத்திற்கு நான் வாய்தா கொடுக்கிறேன், தன்னை அது மாற்றிக் கொள்ளட்டும்!
இன்றைய தினம் அரசாங்கத்திற்கு வாய்தா கொடுத்திருக்கிறேனே! சாதி ஒழிப்புக்குப் பரிகாரம் கிடைக்காவிட்டால் அரசியல் சட்டத்தைக் கொளுத்தப் போகிறோம். அதிலும் முடியாவிட்டால் காந்தியார் சிலையை உடைக்கப் போகிறோம். வேண்டுமானால் என்னை ஜெயிலில் போடட்டும், வெளியே இருந்துகொண்டு கொடுமைச் சகித்துக்கொண்டிருக்க எங்களால் முடியாது.
இதற்கு முன்பே 1950இலேயே நான் சொன்னேன், ‘இது மநுதர்ம சாத்திரத்தின் மறுபதிப்பு. ஆகவே, இதைக் கொளுத்தவேண்டும்’ என்று!
இந்தச் சட்டம் எழுதியவர்கள் ஆறு பேர்கள், அதில் நூறு பேர் பார்ப்பனர்கள். அல்லாடி கிருஷ்ணசாமிஅய்யர், முன்ஷி, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, கோபால்சாமி அய்யங்கார் ஆகிய பார்ப்பனர்கள் எழுதினார்கள்.மற்றவர்கள் இரண்டு பேரில் ஒருவர் அம்பேத்கர், மற்றவர் ஒரு சாயபு.
அம்பேத்கர் கொஞ்சம் நம் உணர்ச்சியுள்ளவர். அவர் என்னைக் கேட்டார், ‘உன்னுடைய மக்களுக்கு என்ன செய்யவேண்டும்? என்று. நிறைய விவரங்கனையெல்லாம் அவரிடம் கொடுத்தேன். அதையெல்லாம் அவர் பேச ஆரம்பித்தார். உடனே பார்ப்பனர்கள் அவருக்கு விலை கொடுத்து விட்டார்கள்.
அது என்ன விலையென்றால், அவர் தன்னுடைய மக்களுக்கு 100க்கு 10 இடம் கல்வி வசதியில், கேட்டார். அவன், ‘15 –ஆகவே எடுத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டார்! அவனுக்குத் தெரியும், 25 இடம் கொடுத்தால்கூட அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர்கூட வரமாட்டார்கள் என்பது. பார்ப்பான் எழுதிக்கொடுத்த சட்டத்தில் அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டார். மற்றவர்களுடைய சங்கதியைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை. ஒரு சட்டம் எல்லோருக்கும் சமம், சமவாய்ப்பு என்று சொல்லிக் கொண்டு – பார்ப்பனருடைய உயர்வைக் காப்பாற்றி அவர்களுடைய ஏகபோக அனுபவத்திற்குக் கல்வியையும், உத்தியோகத்தையும் தருகிற தென்றால், அது எந்த வகையில் நீதியான, நேர்மையான சட்டம்?
இத்தகைய மோசடிச் சட்டம் ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும். அந்த முயற்சியாக, 26ஆம் தேதியன்று இந்தச் சட்டத்தைத் தீயிலிட்டுபொசுக்கப் போகிறோம்.
- தோழர் பெரியார், ‘விடுதலை’ அறிக்கை - 16.11.1957
ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகள்
1. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் (பார்ப்பனர்)
2. டி.டி கிருஷ்ணமாச்சாரி (பார்ப்பான்)
3. என்.கோபால்சாமி அய்யங்கார் (பார்ப்பான்)
4. கே.எம். முன்ஷி (வடநாட்டுப் பார்ப்பான்)
5. டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் (ஆதி திராவிடர்)
6. முகமுது சாதுல்லர் (முஸ்லீம்)
1. 1077 நாள் செலவுசெய்து உருவாக்கிய இந்தச் சட்டத்தில் வெகு ஜாக்கிரதையாகப் பார்ப்பனர் (ஆகிய பிராமணர்) உயர்வும், பார்ப்பனரல்லாத மக்கள் (திராவிடர் – ‘சூத்திரர்’) இழிவும் சாத்திரப் படிக்குக் கொண்ட இந்து மதத்தைக் காப்பது, மத உரிமை அளிப்பது என்கிற தன்மையில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் தகுந்தபடி பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.
2. மேலும், ‘சூத்திர’ என்ற கூறப்படுகின்ற மக்களின் பிரதிநிகள் அறவே இல்லாமல், 6 பேர்களின் 4 பேர் பார்ப்பனர்களாகவே கொண்டு மற்றும் இரு இனத்தின் பிரதிநிகளுக்கும்கூட விலை கொடுத்துவிட்டுச் செய்து கொண்டதுதான் இந்திய அரசியல் சட்டம் என்ற இந்த அரசியலமைப்பாகும்.
3. இந்த நாட்டு வாக்காளர்களின் உண்மையான பிரதிநிகளைக் கொண்டல்ல, இந்தச் சட்டம் செய்யப்பட்டது எவ்வாறெனில், 1946 ல் நடைபெற்ற தேர்தலின்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சட்டசபை அங்கத்தினர்களால் ஓட்செய்யப்பெற்று, அரசியல் நிர்ணயசபை அங்கத்தினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பிரிடிஷார் அளித்த இந்திய சுதந்திரச் சட்டமே (ஐனேயைே ஐனேநயீநனேநஉேந ஹஉவ) 1947 இல்தான் நமக்குக் கிடைத்தது! நாடு இரண்டாகப் பிரிந்து பிற்பாடு எஞ்சியிருந்த உறுப்பினர்களால், மாகாணங்களிலிருந்து 235 பேர்களும், சமஸ்தானங்களிலிருந்து 72 பேர்களுமாக – மொத்தம் 307 பேர்கள்தான் அப்போது இருந்தார்கள்.
அப்போது ஓட்டு உரிமை பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை இன்றைய வாக்காளர்களின் எண்ணிக்கையில் பண்ணிரண்டு சதவிதத்தினரேயாவார். எனவே, இது எப்படி மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்டதாகும்? நாடு ‘சுதந்திர’ மடையாத காலத்தில் நடந்த எலக்ஷன் பிரதிநிதிகளால் காங்கிரசுப் பார்ப்பனப் பிரதிநிகளால் ஏற்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் நம்மை – அதாவது பார்ப்பன ஆதிக்கத்தினின்று விடுதலை பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிற நம்மை எப்படிக் கட்டுப்படுத்தமுடியும்?
4. மற்றும், மொழி சம்பந்தமாகவும், வரி சம்பந்தமாகவும் பொருளாதார உரிமை சம்பந்தமாகவும், வெளி நாட்டார் சுரண்டுதல் சம்பந்தமாகவும் அதிகாரங்களைத் தங்களுக்கே வைத்துக்கொண்டு – எந்த வகையிலும் மாற்ற முடியாத அளவுக்கு இரும்புக்கூட்டுப் பாதுகாப்பை இந்தச் சட்டத்தில் மூலம் பார்ப்பனர்களும் வடநாட்டார்களும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். அதிலிருந்து விடுபட ஆசைப்படுகிறோம் என்பதைக் காட்டுவதற்காகத்தான் ‘ அரசியல் சட்ட எரிப்பு’ என்பதாகும்.
இந்திய அரசியலமைப்புப் பீடிகை
இந்தியாவின் மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு சம்புரண அதிகார ஜனநாயகக் குடிமகள் அனைவருக்கும் – சமூகம், பொருளாதாரம், ராஜீயம் – இவற்றில் நீதியும் எண்ணம், வெளியீடு கோட்பாடு, மதம், வழிபாடு – இவற்றில் சுதந்திரமும், அந்தஸ்து, வாய்ப்பு – இவற்றில் சமத்துவமும் கிடைக்குமாறு செய்யவும் தனியொருவரின் கண்ணியமும், தேசமுதாயத்தின் ஒருமைப்பாடும் நிலைபெறும் வண்ணம் அவர்கள் அனைவரிடமும் சகோதரத்துவம் ஓங்குமாறு செய்யவும் மனப்பூர்வமாகச் சங்கற்பம் செய்துகொண்டமையால், நமது அரசியல் நிர்ணயசபையிலே 1949ஆம் வருடம் நவம்பர் மாதம் இருபத்தாறாம் தேதியாகிய இன்று, இதனால் இந்த அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு, சட்டம் இயற்றி நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.
அடிப்படை உரிமைகள்
13, (2) இப் பாகத்தால் அளிக்கப்படுட உரிமைகளைப் பறிகும் அல்லது சுருக்கும் எதையும் ஒரு இராஜ்யம் இயற்றாலாகது. இப் பகுதியை மீறி இயற்றப்படும் சட்டம் எதுவும் அப்படி மீறிய அறிவிற்குப் பயனற்றதாகும்.
மத சுதந்திர உரிமை
25 ,(1) அமைதி, நல்லொழுக்கம், ஆரோக்கியம், இவற்றிக்கும் இந்தப் பாகத்திலுள்ள மற்றைய ஷரத்துக்களுக்கும் உட்பட்டு, மக்கள் அனைவரும், மனசாட்சி சுதந்திரத்திற்கும் தடையின்றி எம் மதத்தையும் தழுவுதல், அனுஷ்டித்தல், பரவச் செய்தல் இவை பற்றிய உரிமைக்கும் சமமான பாத்தியதை உடையவராவார்.
பண்பாடு, கல்வி இவை பற்றிய உரிமைகள்
29, (1) தனிப்பட்ட மொழி, லிபி, அல்லது பண்பாடு இவற்றை ஏற்கெனவே உடையவராய், இந்தியாவின் ஆட்சிப் பரப்பின் அல்லது அதன் ஒரு பாகத்தில் வசிக்கும் குடிகளின் எப் பிரிவினரும் அவற்றைச் சிதையாமல் காக்க உரிமை உள்ளவர் ஆவார்.
(2) மதம், இனம், சாதி, மொழி இவை காரணமாக அல்லது இவற்றுள் எவையேனும் காரணமாக இராஜ்யத்தினால் பராமரிக்கப்பட்ட அல்லது இராஜ்ய நிதிகளிலிருந்து உதவி பெறுகின்ற எந்தக் கல்வி ஸ்தாபனங்களிலும் சேருவதற்கு எக் குடியும் மறுக்கப்படலாகாது.
அரசியலமைப்பின் திருத்தம்
368. இந்த அரசியலமைப்பின் திருத்தம் அதற்கெனப் பார்லிமெண்ட் சபை ஒன்றில் ஒரு மசோதாவைக் கொண்டுவருவதால் மட்டுமே ஆரம்பிக்கப்படலாம். அச்சபை ஒவ்வொன்றிலும் அம்மசோதா அச்சபையின் மொத்த அங்கத்தினர்களில் பெரும்பான்மையோராலும், வந்திருந்து ஓட்டுச் செய்யும் அச்சபை அங்கத்தினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத பெரும்பான்மை யோராலும், நிறைவேற்றப்பட்டால், அது இராஷ்டிரபதியிடம் அவர் அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப் படவேண்டும், அம் மசோதாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டது இந்த அரசியலமைப்பு அம்மசோதாவின் ஷரத்துக்களின்படி திருத்தம் பெற்றதாகும். இவைபோன்ற இன்னும் பல அனுமதிகள் உள்ளன.
குறிப்பு: இந்த அரசியல் சட்டத்தை உருவாக்கின ஆறுபேர்களில் நான்கு பேர் பார்ப்பனர், இதை நிறைவேற்றிய அரசியல் நிர்ணயசபை என்பது வயது வந்தோரின் வாக்குரிமை பெறாதவர்களை பெரும்பாலும் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களே கொண்டதாகும்.
இந்தச் சட்டத்தில் இந்தமதத்துக்குப் பாதுகாப்பு அளிக்கப் பட்டிருக்கிறது.இந்து மதத்தில் சாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது. சாதியைக் காப்பாற்றத்தான் இடமிருக்கிறது. இதை எளிதில் திருத்தியமைப்பதற்கும் சாதி ஒழிப்புக்காரருக்கு வசதியில்லை, வாய்ப்பு இல்லை (368 – ஆவது பிரிவைப் படியுங்கள்)
ஆதலால், சாதியை ஒழிக்க விரும்புகிறவர்கள், தனித் திராவிட நாடு பெற விரும்புகிறவர்கள், தமிழ்நாடு சுரண்டப்படுவதைத் தடுக்க விரும்புபவர்கள் – என்ன செய்வது? இதை எரிப்பதன்மூலம் நம் எதிர்ப்பதைக் காட்டிக்கொள்வதைத் தவிர வேறு வழி என்ன?
- தோழர் பெரியார், ‘விடுதலை’ 17.11.1957
26 ஆம் தேதி கிளர்ச்சயில் நீதிமன்றத்தில் கூறவேண்டியவை
நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசியல் சட்டத்தில் சாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை, அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கும் இல்லை.
ஆதலால், என் எதிர்ப்பைக் காட்டிக்கொள்ளும் அறிகுறியாக இச் சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமை உண்டு.இதனால் எந்த உயிருக்கும், எந்தப் பொருளுக்கும் சேதமில்லை.ஆதலால், நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்துகொள்ள விரும்பவில்லை.நான் எதிர் வழக்காட விரும்பவில்லை.நான் குற்றவாளி என்று கருதப்பட்டால், அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
- ‘விடுதலை’ – அறிக்கை 21.11.1957
சட்டத்தைக் கொளுத்துங்கள்

கருத்துகள் இல்லை: