வெள்ளி, 27 நவம்பர், 2020

மத்திய, மாநில அரசுக்கு எதிராக திமுக வழக்கு!.. “ஓபிசிக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு ...

minnambalam :மத்திய, மாநில சுகாதாரத் துறைச் செயலாளர்களுக்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழகத்தில் வழங்கப்பட வேண்டிய 50 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைத்து 3 மாதங்களுக்குள் இதுதொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதனிடையே இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டுமென தமிழக அரசு, அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் வாதத்தை ஏற்று, இந்த ஆண்டு ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு இல்லை என உத்தரவிட்டது. தமிழக அரசு, அரசியல் கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது.  தமிழக அரசு மெத்தனப்போக்குடன் நடந்ததும், மத்திய அரசுக்கு முறையான அழுத்தம் அளிக்காததும்தான் இந்த தீர்ப்புக்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று (நவம்பர் 27) தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழக சுகாதாரத்துறை செயலர், மருத்துவச் சேவைகள் இயக்குநரை சேர்க்காமல் குழு அமைத்துள்ளார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய, மாநில அரசுகள் வேண்டுமென்றே மீறியுள்ளன என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “ஓபிசிக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் செயல்பட்ட மத்திய சுகாதாரத்துறை செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

எழில்

கருத்துகள் இல்லை: