வெள்ளி, 27 நவம்பர், 2020

இரு நாட்கள் வெளிவராத முரசொலி

minnampalam : திமுகவினருக்கு மட்டுமல்ல கலைஞர் ரசிகர்களுக்கும் கலைஞரின் அபிமானிகளுக்கும் கலைஞரின் அதிதீவிர நேசர்களுக்கும் ஒவ்வொரு நாள் காலையிலும் அவரது மூத்த குழந்தையான முரசொலியை படிக்காவிட்டால் அந்த நாள் நன்நாளாகவே இருக்காது.

இரு நாட்கள் வெளிவராத முரசொலி
Add caption
தன்னுடைய அரசியல் வாழ்வில் ஒரு நாள் கூட முரசொலியை இடைவிடாமல் வெளியிட்ட பெருமை கலைஞருக்கு உண்டு. 1991 மே 21ஆம் தேதி இரவு ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டபோது தமிழ்நாடு முழுவதும் வன்முறை வெடித்ததில் சென்னையில் இருந்த முரசொலி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு கடும் சேதமாக்கப்பட்டது. ஆனால் விடிந்த நாள் மே 22ஆம் தேதி கூட முரசொலி வெளிவந்தது என்பது தான் கலைஞரின் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்குமான சாட்சி.

அப்படி கலைஞர் நேசித்து சுவாசித்து வந்த முரசொலி இதழ் நவம்பர் 26,27 ஆகிய இரண்டு தேதிகளிலும் வெளிவரவில்லை. அச்சு பதிப்பாக வெளிவர முடியவில்லை என்றாலும் மின்பதிப்பு கூட இந்த இரு நாள்களிலும் வெளிவரவில்லை. தொடர்ந்து இரு நாட்களாக முரசொலி வராததால் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் திமுகவினருக்கும் முரசொலி பிரியர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இதை சிலர் நம்மிடம் பகிர்ந்து கொள்ள இதுகுறித்து முரசொலியின் மேலாளர் ராஜேந்திரனிடம் அலைபேசியில் விசாரித்தோம்.

“ஆமாம். முரசொலி இரு நாட்களாக வெளிவரவில்லை. சென்னையில் மழை வெள்ளம் காரணமாக அரசாங்கம் இரு நாட்கள் விடுமுறை அறிவித்ததால் ஆட்கள் வரவில்லை. அதனால் முரசொலி கம்போசிங் நடைபெறவில்லை. முரசொலி இருநாட்கள் வெளிவராது என்று கலைஞர் டிவியில் விளம்பரம் கொடுத்திருக்கிறோமே?"என்றார் பொறுமையாக.

முரசொலி முகவர் ஒருவரிடம் பேசியபோது,"ஆமாம் முரசொலி இரு நாட்களாக வெளிவரவில்லை. நாங்கள் முரசொலி நிர்வாக இயக்குனர் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மும்முரமாக இருந்ததால் இதை கவனிக்கவில்லை சார்"என்றார் நேர்மையாக.

நெருப்பாற்றில் நீந்திய கலைஞரின் மூத்த குழந்தை எமர்ஜென்சியை எதிர்த்து நின்ற கலைஞரின் போர்க்குழந்தை ஒரு புயலுக்காக இருநாட்கள் வெளி வரவில்லை என்பதை முரசொலி வாசகர்களின் தீர்ப்புக்கே விட்டுவிடலாம்.

ஆரா

கருத்துகள் இல்லை: