சனி, 18 ஜூலை, 2020

மருத்துவ மேற்படிப்புகளில் ஒபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை - மத்திய அரசு வாதம்

tamil.news18.com :மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திராவிடர் கழகம், திமுக, அதிமுக, பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும் என்றும், மத்திய அரசு கவுன்சிலிங் நடத்தும் அமைப்பு மட்டுமே என்றும், இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது

கடந்த 4 வருடங்களில் 3580 மருத்துவ இடங்கள் மத்திய அரசுக்கு
வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு வழங்காததால் 2700 க்கும் மேற்பட்ட ஓபிசி தமிழக மாணவர்கள் இடம் பறிபோனதாக திமுக தரப்பில் வில்சன் வாதிட்டார். இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு திருடி கொண்டிருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், மாணவர்களின் நலன் கருதி வரலாற்றிலேயே முதல் முறையாக இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளும் கட்சி, எதிர் கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக உள்ளதை சுட்டிக்காட்டினார்
தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு முறை இருக்கும் போது மத்திய அரசு 27% இடஒதுக்கீடு வழங்குவது தவறானது என்றும், தமிழகத்தில் தான் அதிகளவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிறபடுத்தப்பட்ட மக்கள் உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் சாதி வாரியான மக்கள் தொகையின் அடிப்படையில் 50 % என்ற இடஒதுக்கீடை அதிகரிக்கலாம் என உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பட்டியலின பழங்குடியின பிரிவினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுப்பது சட்ட விரோதமானது என்றும் வாதிட்டார்.

மத்திய அரசு தனது வாதத்தில், மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு முறை பின்பற்ற கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் விதி உள்ளதாகவும், மெரிட் எனப்படும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது.

அதே நேரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவு படியே எஸ் சி/எஸ்.டி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும், மருத்துவ மேற்படிப்புகளில் ஒபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்பதற்கான பல உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளதாகவும் மேற்கோள் காட்டப்பட்டது.

அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் நிரம்பாமல் இருந்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக தரப்பில், மத்திய அரசு தற்போது 27% இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் ஒட்டு மொத்த இட ஒதுக்கீடு 50 % மிகாமல் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளதை ஏற்று கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 69 % இட ஒதுக்கீடு என்பது முறையான சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது என்பதால் அதை தர முடியாது என மத்திய அரசு கூறுவது சட்ட விரோதம் என்றும் வாதிடப்பட்டது.  மத்திய அரசு கொடுக்கும் 27% இட ஒதுக்கீட்டை மனதார ஏற்று கொள்வதாக பாமக தரப்பில் தெரிவிக்கபட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், மாநில அரசுகளின் ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என்ற முந்தைய உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏன் மத்திய அரசு கட்டுப்படவில்லை என கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கின் மீதான தீர்ப்பு ஜூலை 27 அறிவிக்கப்படும் என தெரிவித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர்

கருத்துகள் இல்லை: