திங்கள், 13 ஜூலை, 2020

திமுக-பாஜக: மோடியிடம் தமிழிசை சொன்ன உண்மை!

டிஜிட்டல் திண்ணை:  திமுக-பாஜக:  மோடியிடம் தமிழிசை சொன்ன உண்மை!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான டி.ஆர்.பாலு ஜூலை 10 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். திமுக தலைவர் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் கடிதத்தை எழுதுவதாக தெரிவித்துள்ள டி.ஆர்.பாலு, சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை தேசப் பாதுகாப்பு ரீதியாக வலியுறுத்தியுள்ளார். அந்தக் கடிதத்தை, ’தமிழர்களின் 150 ஆண்டு கால சேது சமுத்திரத் திட்டத்தை 2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளுக்கு முன்னதாக நிறைவேற்றி தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை இந்திய பிரதமர் மோடி அவர்கள் பிடிக்க வேண்டுமென திமுக சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்’ என்று முடித்திருந்தார் டி.ஆர்.பாலு. இந்தக் கடிதத்தில் பாஜக மீதான திமுகவின் அணுகுமுறையிலும் பார்வையிலும் ஏதோ ஒரு புதிய மாற்றம் இருப்பதை பலரும் உணர்ந்து பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

சேது சமுத்திரத் திட்டத்தை பாஜக நிறைவேற்றாது என்றே வைத்துக் கொண்டாலும் திமுக- பாஜக இடையிலான அரசியல் ரீதியான அணுகுமுறையில் பரஸ்பர மாற்றம் ஏதும் ஏற்பட்டிருக்கிறதா என்ற விவாதமும் டெல்லி வரை நடந்து வருகிறது.
இதற்கிடையே தமிழக அரசியல் நிலவரம் பற்றி பிரதமர் மோடியும் அமித் ஷாவும் சில முக்கிய நபர்களிடம் தொடர்ந்து பேசி அவர்களின் கருத்துகளைப் பெற்று வருகிறார்கள். மோடியும், அமித் ஷாவும் தமிழகம் தொடர்பாக பேசும் முக்கிய நபர்களில் முதன்மையானவராக முன்னாள் தமிழக பாஜக தலைவரும், தற்போதைய தெலங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் இடம்பெற்றிருப்பதாகச் சொல்லுகிறார்கள். தமிழக நிலவரம் பற்றி உள்ளது உள்ளபடி உண்மையைச் சொல்லுபவர் தமிழிசை என்ற நம்பகம் மோடியிடம் இருக்கிறது. ஏனென்றால் தமிழகத்தில் இது நடக்கும், இது நடக்காது என்று ஏற்கனவே மோடியிடம் பல விஷயங்களைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் தமிழிசை. இதனால்தான் தமிழக நிலைமை பற்றி தொடர்ந்து தமிழிசையிடம் கேட்டு வருகிறார் மோடி.
ஆளுநர் என்றாலே மாநிலங்கள் பற்றிய உண்மையான அரசியல் நிலைமையை மத்திய அரசுக்கு சொல்வது அவர்களுக்கான கடமையாக இருக்கிறதே. அந்த வகையில் தெலங்கானா பற்றி மட்டுமல்ல தமிழகம் பற்றி பரிச்சயமானவர் என்பதால் தமிழகம் பற்றியும் மோடியும், அமித் ஷாவும் தமிழிசையிடம் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் தமிழிசை தமிழகத்தைப் பற்றி மோடி அமித் ஷாவுக்கு தெரிவித்துள்ள ரிப்போர்ட் படி, ‘திமுக காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஐந்து முறை கூட்டணி வைத்திருக்கிறார்கள். ஐந்து முறையும் அவர்கள் ஜெயித்திருக்கிறார்கள். 1971ல் கருணாநிதி-இந்திரா காந்தி கூட்டணி தொடங்கி 1980, 2004, 2009, 2019ல் ஸ்டாலின் -ராகுல் காந்தி வரை திமுகவும் காங்கிரசும் ஐந்து முறை கூட்டணி அமைத்து ஜெயித்திருக்கிறார்கள். 1996லும் பெரிய அளவில் வெற்றிபெற்றது இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது பிடிக்காமல் தமாகா என்ற பெயரில் மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் பெரிய அளவில் பிரிந்து திமுகவோடு கூட்டணி வைத்து சட்டமன்றம், நாடாளுமன்றம் இரண்டிலும் பெரு வெற்றி பெற்றது. திமுக காங்கிரஸின் இந்த ஐந்து தேர்தல்களில் நான்குமுறை 50% ஓட்டைத் தாண்டியிருக்கிறார்கள்.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஒவ்வொரு முறையும் திமுகவால் காங்கிரசுக்கு மிகப்பெரிய லாபம் தமிழகத்தில் கிடைத்து வருகிறது. ஆனால், அதிமுக கூட்டணியால் தமிழகத்தில் பாஜகவுக்கு எந்த லாபமும் இல்லை. ஆட்சியிலேயே இல்லாத காங்கிரசுக்கு திமுக தலைவர்கள் ஜனநாயக ரீதியில் அளித்து வரும் மதிப்பு மரியாதையைக் கூட ஆட்சியில் இருக்கும் பாஜக தலைவர்களுக்கு அதிமுகவில் யாரும் அளிப்பதில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு நாம் இருந்தால் மிஞ்சிப் போனால் 20 முதல் 30 சட்டமன்றத் தொகுதிகள் பாஜகவுக்கு தரலாம். ஆனாலும் அந்தத் தொகுதிகளில் அதிமுகவினர் பாஜகவுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டார்கள். தங்களை கரை சேர்க்கவே அவர்கள் போராடிக் கொண்டிருப்பார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் ஒத்துழைப்பு பாஜகவுக்கு துளியும் இல்லை. எனவே மீண்டும் பாஜக அதிமுக கூட்டணி அமைவது என்பது இயற்கைக்கு எதிரானதாகவே இருக்கும்.
ஸ்டாலினை தமிழகத்தில் மிகக் கடுமையாக எதிர்ப்பதால் இப்போதைக்கு பாஜகவுக்கு எந்தப் பலனும் இல்லை. மாறாக காங்கிரஸை திமுக கூட்டணியில் இருந்து கழற்றிவிடுகிற அரசியல் நோக்கத்தில் பாஜக வெற்றிபெற்றால்தான் அதன் பலனை பாஜக அடுத்து வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அனுபவிக்க முடியும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனி அணியாக நின்று, திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றும் அரசியலை செய்ய வேண்டும். இதுதான் தமிழகத்தில் பாஜகவுக்கான அடுத்த ஆண்டுகளுக்கான அரசியல் பாதையாக இருக்க வேண்டும்’ என்பதுதான் தமிழிசை கொடுத்த ரிப்போர்ட்டின் முக்கிய அம்சங்கள் என்று சொல்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.
இதன் விளைவாகவே கடந்த ஜூன் மாதம் எமர்ஜென்சி நினைவு தினத்தில், ‘திமுகவை எமர்ஜென்சியில் பழிவாங்கியது காங்கிரஸ்’ என்ற நிர்மலா சீதாராமனின் பேச்சு அமைந்தது. திமுகவினர் தங்களைச் சந்திக்கும்போதெல்லாம், ‘உங்களுக்கு நாங்கள் வேண்டாம்... காங்கிரசும் வேண்டாம்தானே...?’ என்று மோடி, அமித் ஷா ஆகியோர் சிரித்தபடியே கேட்டு வைக்கிறார்கள். இந்த ரீதியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றுவதே பாஜகவின் முக்கிய அஜெண்டாவாக இருக்கும் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்

கருத்துகள் இல்லை: