புதன், 15 ஜூலை, 2020

பெரியாரின் குடி அரசு இதழுக்கு விளம்பர முகவராக இருந்த எஸ் எஸ் வாசன் ..

பாண்டியன் சுந்தரம் : ஆனந்த விகடன் எஸ்.எஸ். வாசனிடம் 'உங்களிடமிருந்து நான், மாதந்தோறும் ஒரு பச்சைத் தாளை
எதிர்பார்க்கிறேன்...' என்று கடிதம் எழுதினார், பெரியார்!
அந்தக் காலத்தில் விளம்பரங்களில் கோலோச்சி வந்தவை பத்திரிக்கைகள் தான். அவை பற்றிய ஒரு சுவையான தொகுப்பு இது...
1930 காலகட்டங்களில் சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளில் வெளியாயின தாது புஷ்டி லேகிய விளம்பரங்கள். ஒரு நடுத்தர வயது ஆண் சோர்ந்து போய் மேசை மீது கைவைத்துத் தலை சாய்ந்து இருக்கிறான். அவன் அருகில் சில பாட்டில்கள் இருக்கின்றன. ‘இனி உங்களுக்குக் கவலை வேண்டாம், இதோ’ என்று கூறி அந்த ஆணிடம் ஒரு மருந்துப் புட்டியைக் காண்பிக்கிறாள் அவன் மனைவி.
அந்த மருந்து ‘மன்மதக் குளிகை.’ ‘இது தாது புஷ்டியைக் கொடுப்பதில் சிறந்தது’ என்கிறது இந்த விளம்பரம். இந்த மருந்தை அந்த ஆணுக்குப் பரிந்துரை செய்வது சக நண்பனோ அல்லது மருத்துவரோ இல்லை. அவன் மனைவி. பெண் சுதந்திரம் உச்சத்தில் இருப்பதாக நம்பப்படும் இன்றைக்குக் கூட இம்மாதிரி ‘தைரியமான’ விளம்பரங்கள் பத்திரிகைகளில் வருவதாகத் தெரியவில்லை. சரி, இதன் விலை? அதிகமில்லை, 20 குளிகை ரூபாய் இரண்டுதான். அணுக வேண்டிய முகவரி : மலையப்பசாமி வைத்தியசாலை, பழனி!

இது மட்டும்தானா? நிரந்தர தாதுபுஷ்டி டானிக் மருந்து, நரசிங்க லேகிய தங்க பஸ்பம், ஒரிஜினல் தங்கம் சேர்த்த நர்வினஸ் டானிக் மருந்து, ஜீவாம்ருதம், ஸண்டோஜன் (இது உறுப்புகளுக்கு வலிமை தரும் உலோக ஆகாரம் என்கிறது விளம்பர வாசகம்) வெளிப்புறத்தில் உபயோகிக்க கஸ்தூரி லினமெண்டேன், ஒருமுறை பரீட்சித்துப் பார்த்துவிட்டுப் பலன் இல்லை என்றால் ரூ. 10,000 இனாம் தரத் தயார் என்று சொல்லும் தாது புஷ்டிக்கான ‘பீம - வீர்’ விளம்பரம், நடுத்திர வயதினர் ‘வாலிப வலுவு’ கொள்ளவும், மனைவி, ‘மீண்டும் 20 வயது இளைஞர் போலிருக்கிறீர்களே’ என்று ஆச்சரியப்படவும் கல்ஸானா மாத்திரைகள் (இதனைப் பெண்களும் சாப்பிடலாமாம். சூதகக் கோளாறுகள் உள்ளிட்ட அனைத்தும் நீங்கி பெண் வலிவும், பொலிவும் பெறுவாளாம்) என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதெல்லாம் படிக்கப் படிக்க ஆண்களுக்கு ‘இது’ அந்தக் காலத்தில் இருந்தே பிரச்சனையாக இருந்து வந்திருக்கிறது என்று தோன்றுகிறது.
ஆனால், மிகப் பெரிய அதிர்ச்சியைத் தருகிறது ‘கருங்குரங்கு ரஸாயன’ விளம்பரம்.கருங்குரங்கின் கழுத்தில் உள்ள ஒரு நரம்பை வயதாகித் தளர்ந்த ஒரு மனிதனின் கழுத்து நரம்புடன் சேர்த்தால் அவனுக்கு வாலிப உணர்ச்சியும், உடல் பலமும் உண்டாகுமாம். இது இந்தூர் மஹாராஜா அவர்களுக்குச் செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டுமிருக்கிறதாம். கருங்குரங்கின் ஜீவ உறுப்புக்களை மனிதனுடைய உறுப்புகளில் சேர்ப்பது டாக்டரின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது என்கிறது விளம்பரம். சகல வியாதிகளுக்கும் ஓர் கைகண்ட ஔஷதமாம் இது. அக்காலத்தில் ஜீவ காருண்ய சங்கத்தார் எப்படி இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்பது தெரியவில்லை.
இப்படி சிருங்கார ரசம் பெருக்கும் விளம்பரங்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம் கொசுவலை விளம்பரம், பட்டுப் புடைவை விளம்பரம், பற்பொடி விளம்பரம், இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி விளம்பரம், பிராவிடண்ட் ஃபண்ட் ஃபைனான்ஸ் விளம்பரம், கூந்தல் ஆகார விளம்பரம், நரை மயிர் நீக்கும் விளம்பரம், பெண்களின் சூதகப் பிரச்சினைகளை நீக்கும் கெற்ப சஞ்சீவி எண்ணெய் விளம்பரம், நீலகிரி காபிக் கொட்டை, சகல வியாதிக்கும் மருந்தாகும் ‘மின்சார ரசம்’ (அப்படின்னா என்னவாக இருக்கும்?), கேள்விகளுக்கு பதில் எழுதி அனுப்பச் சொல்லும் ஜோதிட விளம்பரம், நினைத்ததை நிறைவேற்றித் தரும் ‘மாந்த்ரீக மோதிரம்’ .இதன் மூலம் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என எல்லாம் தெரிந்து கொண்டு விடலாமாம். ஆவிகளுடனும் பேச முடியுமாம்; ஏன் புதையல் எங்கே இருக்கிறது என்பதைக் கூட இதன் மூலம் கண்டறிந்து விட முடியுமாம்...(அப்பவே நம்ம டுபாக்கூர் ஆசாமிகள் ஏமாற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்) என்று பல விளம்பரங்கள் அக்காலச் சமூக நிலையைக் காட்டுகின்றன.
இவ்வகை விளம்பர வாசகங்களில் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமேயில்லை. ரோமங்களை நீக்கும் ஜனானா கிரீம், வேண்டா ரோமத்தை உடனே நீக்கி சருமத்தை மிருதுவாக்கிப் பாதுகாக்கின்றதாம். பெரிய குடும்பங்களால் உபயோகிக்கப்படும் அதன் பெரிய ட்யூப் விலை 12 அணா. பாட்டிலிலும் கிடைத்திருக்கிறது, விலை 14 அணாதான். சிடுசிடுவென்றிருக்கும் மனைவியை ‘குளு’ ‘குளு’ என்று மாற்ற தினமும் அவளுக்கு ‘குவேக்கர் ஓட்ஸ்’ கொடுக்குமாறு பரிந்துரைக்கிறது ஒரு விளம்பரம். ‘கோடைக் காலத்தில் மனைவி அடுப்படியில் கஷ்டப்பட வேண்டாம். அவளுக்கு ருக்மணி குக்கர் வாங்கிக் கொடுங்கள். ஒரு மணி நேரத்தில் சாதமும் ஐந்துவித பதார்த்தங்களும் செய்யலாம்’ என்கிறது இன்னொரு விளம்பரம்.
ரிப்பனுக்கு ஒரு விளம்பரம் வந்துள்ளது. 'கோடை ரிப்பன்' என்ற பெயரில் பெண்களின் ஜடையில் ஆரம்பித்து டைப்ரைட்டர் மிஷின் வரை எல்லாவற்றுக்கும் ரிப்பன் வினியோகம் செய்வோம் என்று சொல்கிறது இந்த விளம்பரம்!
மேனகா, (1935இல் வெளிவந்த இப்படம்தான் தமிழில் வெளியான முதல் சமூகப் படம்; வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில்தான் என்.எஸ்.கிருஷ்ணன் அறிமுகமாகி இருக்கிறார்) ஆயிரம் தலைவாங்கி அபூர்வசிந்தாமணி, சந்திரலேகா, கண்ணகி, பாலாமணி (இதுவும் வடுவூராரின் பிரபல நாவல்தான்; பாரதிதாசன் முதன்முதலில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி வெளியான படம். இதன் மூலமே திராவிட இயக்கத்தாரின் திரையுலகப் பிரவேசம் ஆரம்பமாகியிருக்கிறது) என்று பெண்களை மையப்படுத்தி வெளியான திரைப்படங்களுக்குக் குறைவே இல்லை.
இப்படங்களில் குறிப்பிடத்தகுந்த ஒரு படம் ‘சிந்தாமணி.’ எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் இது. 1937இல் வெளியாகி 52 வாரங்கள் தொடர்ந்து ஓடி, தமிழில் அதுவரை வெளியான படங்களிலேயே அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெயரைப் பெற்றது இப்படம். (மூன்று தீபாவளிகள் கண்ட ‘ஹரிதாஸ்’ பின்னர் 1944இல்தான் வெளியானது.) சிந்தாமணி படத்தின் மூலம் கிடைத்த லாபத்தைக் கொண்டு மதுரையில் ராயல் டாக்கீசார் கட்டிய திரையரங்கம் தான் ‘சிந்தாமணி’.
இந்தப் படத்தின் பாடல்களை கிராமபோன் ரெக்கார்டாக (இசைத் தட்டாக) வெளியிடத் தயாரிப்பாளர்கள் கருதினார்கள். பாகவதரை அணுகினார்கள். ஆனால், பாகவதருக்குத் தயக்கம். காரணம், அதற்கு முன்னால் படங்கள் வெளியான பின்னர்தான் பாடல்கள் கிராமபோன் ரெகார்டாக வெளிவந்தன. ஆனால், இப்போது படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும்போதே ரெகார்ட் வந்தால், பலரும் அதை மட்டும் வாங்கிக் கேட்டுவிட்டு, படத்தைப் பார்க்காமல் இருந்துவிடுவார்களோ என்று அவர் நினைத்தார். மேலும் அதற்கு முன்னால் அவரது பாடல்கள் தொகுப்பை வேறு ஒரு நிறுவனம்தான் வெளியிட்டிருந்தது. இது புதிய நிறுவனம். அதனால் கிராமபோன் ரெகார்ட் வெளிவர அவர் ஒத்துழைக்கவில்லை.
இதனால் தயாரிப்பாளர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். படத்தில் நாயகி அஸ்வத்தம்மா, பாகவதருடன் பாடிய டூயட் பாட்டான ‘மாயப்பிரபஞ்சத்தில் ஆனந்தம்’ என்ற பாடலை கர்நாடக இசை வல்லுநரும், இசையமைப்பாளரும், பாடகருமான துறையூர் ராஜகோபால் சர்மாவை வைத்துப் பதிவு செய்து வெளியிட்டு விட்டனர். இதற்கு அவர் குரல் பாகவதரின் குரலை ஒத்திருந்ததாக அவர்கள் கருதியதே காரணம். (ராஜகோபால் சர்மா தான் எம்.எஸ்.சுப்புலட்சுமி - ஜி.என்.பி. நடித்த ‘சகுந்தலை’ படத்தின் இசையமைப்பாளர்.)
கூடவே பாடியது யார் என்று விளம்பரம் செய்யாமல் ‘சிந்தாமணி படப்பாடல்’ என்று மட்டுமே தயாரிப்பாளர்கள் இசைத்தட்டில் குறிப்பிட்டிருந்தார்கள்.
இசைத்தட்டும் நிறையவிற்பனையானது.
ஆனால் மக்களுக்கு உண்மை சீக்கிரமே தெரிந்துவிட்டது. கண்டனம் எழுந்தது. அதனால் வேறு வழியில்லாமல் அவர்கள் மீண்டும் பாகவதரை அணுகி, சமாதானம் செய்து, அவர் கேட்ட தொகைக்கு ஒப்புக்கொண்டு மீண்டும் படத்தின் பாடல்களை ஒலிப்பதிவு செய்து வெளியிட்டனர். ஆனால், ‘மாயப்பிரபஞ்சத்தில்..’ பாடலை மட்டும் மீண்டும் பாட பாகவதர் உடன்படவில்லை. ‘ஏற்கெனவே அந்த இசைத்தட்டுதான் வெளிவந்து விட்டதே!. மீண்டும் எதற்காகப் புதிதாகப் பாட வேண்டும்?’ என்று கூறி, அந்தப் பாடலை மட்டும் பாட மறுத்து விட்டார். ஆக, படத்தில் தியாகராஜ பாகவதர் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல், இசைத்தட்டில் ராஜகோபால் சர்மாவின் குரலில் ஒலித்தது. அந்த வகையில் தமிழின் முதல் பின்னணிப் பாடகர் என்று துறையூர் ராஜகோபால் சர்மாவைச் சொல்லலாம். இந்த விளம்பரமும் அன்றைய பத்திரிகையில் வெளி வந்திருக்கிறது!
அந்தக் கால நகைச்சுவை நடிகை டி.ஏ.மதுரம் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார் என்பது ‘பாண்டுரங்கன் அல்லது ஜே ஜே விட்டல்’ என்ற பட விளம்பரத்தின் மூலம் தெரிய வருகிறது. நாயகனாக நடித்திருப்பவர் மஹாராஜபுரம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. அக்காலத்தின் பிரபல இசையறிஞர் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் சகோதரர் இவர். உடன் ‘காளி’என்.ரத்னம், பி.எஸ்.சிவபாக்கியம், எம்.எஸ்.சரோஜா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதே கிருஷ்ணமூர்த்தி நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படம் ரத்னாவளி. இதில்தான் டி.ஏ.மதுரம் அறிமுகமானார்.
மஹாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தியும் கர்நாடக இசை வித்வான் ஜி.என்.பாலசுப்ரமணியமும் இணைந்து நடித்த படம் பாமா விஜயம். இந்தப் படத்தில் கிருஷ்ணமூர்த்திக்குக் கிருஷ்ணன் வேடம். ஜி.என்.பி. நாரதர். படத்தின் இறுதிக் காட்சியில் கிருஷ்ணன், பாமா, ருக்மணி, நாரதர் எல்லாரும் ‘ஜன கண மன’ பாடலைப் பாடுகிறார்கள்.
முதன்முதலில் ஒரு தமிழ்ப் படத்தில் தேசியகீதம் ஒலித்தது என்றால் அது இந்தப் படத்தில்தான். இந்தக் காட்சிக்கு அந்தக் காலத்தில் அவ்வளவு வரவேற்பு. காரணம், சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த 1934இல் இப்படம் வெளியானதுதான்!1911-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரசு மாநாடு நடக்கும்போது ஜன கண மன பாடல் பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்!
அந்தக் காலத் திரை விளம்பரங்களில் இருந்தும் சுவையான பல செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது. ‘பாலநாகம்மா’ என்ற படம் 25 வாரங்களுக்கும் மேல் ஓடியிருக்கிறது. தலைப்பு தமிழில் இருந்தாலும் உண்மையில் இது தமிழ்ப்படமல்ல; தெலுங்குப்படம். இது ஜெமினியின் இரண்டாவது தயாரிப்பும் கூட. (முதல் தயாரிப்பு: மதனகாமராஜன்) ஒரு தெலுங்குப்படம், தமிழ்நாட்டில் 25 வாரம் ஓடியிருக்கிறது என்பது அன்றைக்கு உண்மையிலேயே சாதனைதான். (நீண்ட வருடங்களுக்குப் பிறகு 1978-இல் வெளிவந்த கமல் நடித்த ‘மரோசரித்ரா’ அந்தச் சாதனையை முறியடித்தது.)
தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது தற்போதைய வழக்கம். ஆனால், அக்காலத்தில் சில தமிழ்ப் படங்களுக்குப் பிற மொழிகளில் தலைப்பு வைத்திருக்கின்றனர். அதற்கு நல்ல வரவேற்பும் இருந்திருக்கிறது. சான்று ‘சம்சார நௌகா’ என்று பெயரிடப்பட்டிருக்கும் ஒரு படம். நடித்திருப்பவர்கள்: டி.ஆர்.ராமச்சந்திரன், பி.ஆர்.பந்துலு, பிரேமாவதி, சூர்ய குமாரி. இயக்கம்: ஹெ.எல்.என்.சிம்ஹா. இவர் கன்னடத் திரைப்பட உலகின் புகழ்பெற்ற இயக்குநர். முதலில் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்று பின்னர் தமிழுக்கு 1948-இல் வெளிவந்தது இப்படம். கன்னடத்தில் வெளியான முதல் சமூகப் படம் சம்சாரா நௌகா (கன்னடத்தில் நௌகே) தான்!
திரைப்படங்களை விளம்பரப்படுத்தும் வகையில் படம் பார்ப்பவர்களுக்குப் பரிசுகளை அறிவிக்கும் உத்திகளை அந்தக் காலத்திலும் பயன்படுத்தி உள்ளனர். படத்தின் சிறந்த பாடல்களை வரிசைப்படுத்தித் தந்து, பரிசுகளை வெல்லுங்கள் என்கிறது ’ஜெமினி’யின் ‘நந்தனார்’ பட விளம்பரம்.
இக்காலத்தில் பழைய படங்களின் தலைப்புகளில் புதிய படங்கள் வெளியாவது போல் அந்தக் காலத்திலும் ‘நந்தனார்’ என்னும் இதே பெயரில் 1933லும், 1935லும் படங்கள் வெளியாகியுள்ளன.
சினிமா விளம்பரங்கள்தான் என்றில்லை. கிராமபோன் இசைத் தட்டு விளம்பரங்களும்கூடப் பல சுவையான செய்திகளைச் சொல்கின்றன. வஸந்தகோகிலம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள் போன்ற இன்றைக்கும் புகழ்பெற்றவர்கள்தான் என்றில்லை; தர்மாம்பாள், கொச்சம்மாள் (ஹரிகதா), குமாரி மாசிலாமணி (பெண்தான்!), எம்.எஸ்.விஜயாள், சுந்தர காமக்ஷி, தாயம்மாள், நஞ்சன் கூடு நாகரத்னம்மாள், மிஸ். ரத்தினாம்பாள், மிஸ் மனோரஞ்சிதம், மிஸ்.கண்ணாமணி, மிஸ். தேவநாயகி, மிஸ். லோகநாயகி, மிஸ்.ஜயலஷ்மி போன்ற பல பெண் வித்வாம்சினிகளின் பாடல்களும் கிராமபோன் இசைத்தட்டுக்களாக வெளியாகியுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.
இக்காலத்தை விட அக்காலத்தில் பெண் பாடகிகள் அதிகமாக இருந்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதிலும் சுந்தர காமாக்ஷி எம்.எஸ்.சுப்புலட்சுமியை விடப் புகழ்பெற்றவராய் இருந்திருக்கிறார். ‘பிராட்காஸ்ட் ரத்தினம்’ என்று போற்றப்பட்டிருக்கிறார்.
இன்று நாம் அறியாத டி.ஏ.கே.ஸ்வாமி பாகவதர், சௌரிராஜ ஐயங்கார், இரத்தின பத்தர், எஸ்.எஸ்.ராஜப்பா, பபூன் ஷண்முகம், கே.சுப்ரமணியம், விளாத்திகுளம் சுவாமிகள்,மகம்மத் பீர், எஸ்.வி. சுப்பய்யா பாகவதர் எனப் பலரும் அக்காலத்தில் புகழ்பெற்றவர்களாய் இருந்திருக்கின்றனர். அவர்கள் பாடி கிராமபோன் இசைத்தட்டுக்களும் வெளியாகியிருக்கின்றன. கர்நாடக சங்கீதம், ஹரிகதை, நாதஸ்வரம், நாடகப் பாடல்கள் என்றில்லாமல் ‘பாண்டு வாத்தியம்’, ‘ஹார்மோனியம்’ போன்றவையும் தனித்தனி கிராமபோன் ரிகார்டாக வெளிவந்திருக்கும் செய்திகள் ஆச்சரியமூட்டுகின்றன.
நாடக விளம்பரங்களுக்கும் குறைவில்லை. பாய்ஸ் கம்பெனி, ஸ்ரீராம பாலகான வினோத சபா, மதுரை தேவி பாலவிநோத சங்கீத சபை (நவாப் டி.எஸ். ராஜமாணிக்கத்தின் நாடகக்குழு இது) என பல நாடகக்குழுக்களின் விளம்பரங்கள் மூலம் அக்காலத்தில் நாடகங்களுக்கு இருந்த வரவேற்பை அறிந்து கொள்ள முடிகிறது.
பாரதியாரின் நூல்கள் பற்றிய பாரதி பிரசுர விளம்பரம், ‘பெண்களுக்காகப் பெண்கள் பலர் எழுதிய, கதைகளும், கட்டுரைகளும், பாட்டுக்களும் நிறைந்து விளங்கும் ஸ்தீரிகள் சித்திர மாதப் பத்திரிகை. ஒவ்வொரு ஸ்திரீயும் வாசித்து இன்புற வேண்டியது - கிரஹலக்ஷ்மி’, என்னும் பெண்கள் இதழுக்கான விளம்பரம், பாரதி புதுச்சேரியில் இருந்தபோது எழுதிய, நீலகண்ட பிரம்மச்சாரி ஆசிரியராக இருந்த ‘சூரியோதயம்’ இதழ் விளம்பரம் போன்றவை ஆச்சரியப்படுத்துகின்றன.
இன்றைய பாக்கெட் நாவல், க்ரைம் நாவல் போல் அந்தக் காலத்தில் துப்பறியும் நாவல்களாக எழுதித் தள்ளியவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். நாவல் வெளியீட்டிற்காக அவர் ஆரம்பித்து நடத்திய இதழின் பெயர் ‘நவரசமாலிகா’ என்பதை ஒரு விளம்பரத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. ’மனோரஞ்சனி’ என்னும் மாத இதழ் மூலமும் வடுவூரார் துப்பறியும் நாவல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்ததை அறிந்து கொள்ள முடிகிறது.
ஒரே முகவரியில் இருந்து ஆனால், வெவ்வேறு நிறுவனப் பெயர்களில் அவர் செயல்பட்டு வந்ததையும் விளம்பரங்கள் காட்டுகின்றன. அந்தக் கால ‘நாவல் ராணி’யான வை.மு.கோதைநாயகியின் நாவல்கள் பட்டியல் வியப்பைத் தருகிறது. இசை வளர்ப்பதற்காக 1933 முதல் வெளிவந்த இதழ் ‘ஸங்கீத அபிமானி’ என்பது . கொக்-சாஸ்திரம் என்பது எதைப் பற்றிய விளம்பரம் என்று உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. ’படுக்கையறைப் படங்கள்’ (புத்தகம்தான்) விளம்பரங்களும்கூடச் சில இதழ்களில் இடம் பெற்றிருக்கின்றன.
1 + 0 = 2 என்கின்றன இன்றைய ஆடித்தள்ளுபடி விளம்பரங்கள். இலவசமாக ஒன்றைக் கூடுதலாகத் தருவதை இப்படிச் சொல்லாமல் சொல்கிறார்களாம். அன்றைக்கும் இப்படிச் சில பொருட்கள் ‘இனாம்’ ஆக அளிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் ஒன்று, ‘றாவ்ஸ் டெவலப்பர்’ என்னும் உயர்ந்த ரப்பரினால் ஆன தேகப்பயிற்சி உபகரணம். 12 வயதுமுதல் 70 வயதுவரை யாவரும் உபயோகிக்கலாம் என்கிறது இவ்விளம்பரம். கடிதம் எழுதிப் போட்டால் போதுமாம். வீடு தேடி வந்து விடுமாம். இரண்டாயிரம் ரூபாய்க்கு 20 பொருள்கள், ஆயிரம் ரூபாய்க்கு 10 பொருள்கள் என்று மிக்ஸி, ஃபேன், குக்கர், கேஸ் ஸ்டவ் எல்லாம் ஆங்காங்கே இக்காலத்தில் விற்கப்படுவது போல, அந்தக் காலத்திலும் சில பொருட்கள் விற்கப்பட்டிருக்கின்றன. ரூ. 6க்கு 15 நல்ல சாமான்கள் என்ற தலைப்பில், டார்ச் லைட், ஸேப்டி ரேஸர், ப்ளேட், ப்ரஷ், பொத்தான்கள், செண்ட்பாட்டில், ரோல்டு கோல்டு நிப் பேனா என்று அளிக்கப்படும் பொருட்களின் பட்டியல் நீளுகிறது.
1937களில் விலைவாசி எப்படி இருந்தது என்பதைக் காட்டுகிறது ஒரு விளம்பரம் (உப்பு ஒரு படி 1 அணா; துவரம் பருப்பு 15 அணா, உளுத்தம்பருப்பின் விலை: 1 ரூபாய் 2 அணா, களிப்பாக்கு ஒரு வீசை: 5 ரூபாய், 6 அணா..)
சர்க்கரை வியாதி அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதை ’ஏழே நாளில் குணமாகும்’ என்ற அறிவிப்புடன் வெளியாகி இருக்கும் விளம்பரம் காட்டுகிறது. தான் விலாசம் மாறியதை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் மிருதங்கம் கண்ணன் என்ற இசைக்கலைஞர் கொடுத்திருக்கும் விளம்பரம், தொழில் மீதான அவரது அக்கறையைக் காட்டுகிறது.
நெய் விளம்பரம் குறிப்பிடத்தக்க ஒன்று. தங்கள் நெய் சுத்தமானது; கலப்படம் இல்லாத அசல் நெய் என்பதற்காக பி.கே.வி. பிராண்ட் நெய் ஆதாரச் சான்றிதழ் ஒன்றை தன் விளம்பரத்தில் சேர்த்து வெளியிட்டு இருக்கிறது. காலிகட்டைச் சேர்ந்த ‘கேரளா சோப் இன்ஸ்டிட்யூட்’ பரிசோதனை செய்து சான்றளித்திருக்கிறது. சோப் இன்ஸ்டிட்யூட்டிற்கும் நெய்க்கும் என்ன சம்பந்தம் என்பது கண்களில் அசல் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு தேடியும் அகப்படவில்லை.
அதுபோல ஆனந்த விகடனுக்கும் பாக்குத்தூளுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை; விகடன் தாத்தாவின் படத்தோடு ‘விகடன் பரிமள பாக்குத்தூள்’ என்ற விளம்பரம் அன்று வெளியாகி இருக்கிறது.
ஸ்திரீகள் ஆரோக்கியமாக இருக்கச் சாப்பிட வேண்டியது லோத்ராவாம். ருசித்துச் சாப்பிட நீங்கள் வரவேண்டியது மவுண்ட்ரோடில் இருக்கும் ‘ஷாங்காய் பிறாமணாள் காபி ஹோட்டல்’ என்று வரவேற்கிறது ஒரு விளம்பரம். ‘ஷாங்காய்’க்கும் ‘பிறாமணாள்’க்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியவில்லை.
இன்றைக்கு ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட் கிடைப்பதே அரிதான விஷமாய் இருக்கையில் அந்தக் காலத்தில் ரயிலில் பயணம் செய்யச் சலுகைகளை அறிவித்திருக்கும் விளம்பரங்கள் ஆச்சரியத்தைத் தருகின்றன. தீபாவளிக்கான பயணத்தில் ‘100-மைல்களுக்கு மேற்பட்ட பிரயாணத்திற்கு எல்லா ஸ்டேஷன்களுக்குமிடையே எல்லா வகுப்புகளுக்கும் மலிவான ரிடர்ன் டிக்கட்டுகள் கொடுக்கப்படும்’ என்கிறது ஒரு விளம்பரம்.
மைசூர் மகாராஜா பிறந்த தினத்தை முன்னிட்டு நடக்கும் குதிரைப் பந்தயம் காண மலிவு விலையில் டிக்கெட்டுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ரிடர்ன் டிக்கெட்டுகளை கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குள் உபயோகப்படுத்திவிட வேண்டுமாம். 3 வயதிற்கு மேல் 12 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு அரைக் கட்டணமாம். இன்றைக்கும் குழந்தைகளுக்கு 5 முதல்12 வயது வரை அரைக் கட்டணம் என்பதை நினைத்து ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்!
‘லக்ஸ்’ சோப்பை மேனியின் அழகுக்கு அழகு சேர்க்கும் சோப்பாகத்தான் நாமறிந்திருக்கிறோம். ஆனால், அது ஆரம்ப காலத்தில் துணி துவைக்கும் சோப்பாகத்தான் இருந்திருக்கிறது என்பது ஓர் ஆச்சரியம். குழந்தையின் உத்தமமான துணைவன், மேனிக்கு அழகு தரும், தோல் வியாதியை நீக்கும் - இதெல்லாம் குட்டிக்கூராவின் பெருமைகள். இது ஆயிண்மெண்டாகவும் கிடைத்திருக்கிறது. மூன்று தலைமுறைகளாகத் தாய் மகளுக்குக் கொடுக்கச் சொல்லித் தரும் உட்வர்ட்ஸ் க்ரைப் வாட்டர் (1937 விளம்பரம் இது) என்று விதம் விதமான விளம்பரங்கள் அக்கால இதழ்களை அலங்கரிக்கின்றன.
‘குஜராத்தில் உங்கள் வியாபாரம் நன்கு நடக்க எங்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யுங்கள்’ என்கின்றன குஜராத் சமாச்சார் மற்றும் பிரஜாபந்து இதழ்கள். ஆங்கிலத்தில் கடிதம் எழுத வேண்டும் என்பதுதான் நிபந்தனை. ‘வியாபாரத்திற்கு அழகு விளம்பரம் செய்தல்’ என்று சொல்லியபடி விளம்பரத்திற்கே விளம்பரம் செய்கிறது எம்.சி.அப்பாசாமி செட்டி & கம்பனி
அந்தக் காலத்தில் ஆனந்தவிகடன் வார இதழை ஆரம்பிக்கும் முன்னர் எஸ். எஸ். வாசன் விளம்பர முகவராக செயல்பட்டுக் கொண்டிருந்தார். பெரியார் அப்போது நடத்தி வந்த, 'குடி அரசு' இதழுக்கு, ஏராளமான விளம்பரங்களை சேகரித்துக் கொடுத்து, அதற்கான பணத்தையும், காலம் தவறாமல் அனுப்பி வந்தார், வாசன்.அந்தக் காலத்து, 100 ரூபாய், அகலமாக பச்சை நிறத்தில் இருக்கும். பச்சை நோட்டு என்றால், 100 ரூபாய் என்று அர்த்தம்.
வாசன், பணத்தை ஒழுங்காக அனுப்புவதைப் பார்த்து, 'உங்களிடமிருந்து நான், மாதந்தோறும் ஒரு பச்சைத் தாளை எதிர்பார்க்கிறேன்...' என்று கடிதம் எழுதினார், பெரியார்.
'விடுதலை' நாளிதழுக்கு, குத்துாசி குருசாமி மற்றும் கி.வீரமணி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தபோது, சினிமா செய்திகளோ, விளம்பரங்களோ இடம்பெறாத நாளேடாகத் தான் வெளிவந்தது.ஆனால், 'ஜெமினி' படநிறுவனராக ஆன பிறகும் வாசன் மட்டும், நன்றி தவறாது, நட்பு மாறாது, தன் திரைப்படங்களின் விளம்பரங்களை, 'விடுதலை' இதழுக்கு அனுப்பி வந்தார். இப்படி ஒருமுறை, விளம்பரம் வந்ததும், 'சினிமாவை எதிர்த்து எழுதும், நம் பத்திரிகையில், இந்த விளம்பரம் வரலாமா... இந்த வருமானம் நமக்குத் தேவையா..?' என, பெரியாரிடம் கேட்டனர், தோழர்கள்.
அதற்கு, பெரியார், 'எந்த விதிக்கும், விலக்கு உண்டு; வருமானம் வருகிறது என்பதற்காக அல்ல; அதுவும் முக்கியமானது தான். குடி அரசு ஏட்டின் கருத்துகளைப் பற்றி கவலைப்படாமல், சென்னையிலிருந்து ஈரோடுக்கு, ஏராளமான விளம்பரங்களை வாங்கி அனுப்பியவர் வாசன். அதற்கு, நாம் மரியாதை காட்டுகிறோம்...அவரும், நம் கொள்கைகளை அறிந்து தானே விளம்பரம் அனுப்புகிறார். எனவே, யார் சொல்வது பற்றியும் கவலைப்படாமல் வெளியிடுவோம்.."என்றார் சிரித்தபடி!

கருத்துகள் இல்லை: