சனி, 18 ஜூலை, 2020

ஐஸ்வர்யா ராய்க்கு திடீர் மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில்.. கொரோனா தொற்று.. வீடியோ

மாலைமலர் : கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின்னம்பலம் : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலிவுட்டின் மெகா ஸ்டார் எனப் போற்றப்படும் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது ஜூலை 11ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டது. அமிதாப் பச்சனின் வயதைக் கருத்தில் கொண்டும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டதாலும் அவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் வீட்டில் இருந்த வேலையாட்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதில் நடிகர் அபிதாப் பச்சனின் மருமகளும், நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியுமான நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அதே நேரத்தில் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு ரிசல்ட் நெகட்டிவ் என வந்தது. அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
பெரிய அளவிலான உடல்நலக் குறைவுகள் ஏற்படாததால் கடந்த ஐந்து நாட்களாக அவர்கள் இருவரும் வீட்டிலேயே இருந்தனர். இந்த நிலையில் நேற்று(ஜூலை 17) இரவு அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இருவருக்கும் லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் மும்பை செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் இவர்களும் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி ஐஸ்வர்யா ராய் ரசிகர்களை கலக்கமடைய செய்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு அவர்களுக்கு அதிக உடல்நலக்குறைவு ஏற்பட்டதா? ஐஸ்வர்யா மற்றும் அவரது மகள் நலமாக இருக்கின்றார்களா? என்று ரசிகர்கள் கலக்கமுடன் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
-இரா.பி.சுமி கிருஷ்ணா

கருத்துகள் இல்லை: