சனி, 18 ஜூலை, 2020

திருப்பதி கோயிலில் 140 பேருக்கு கொரோனா.. அர்ச்சகர்கள் உட்பட...

மின்னம்பலம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில், கொரோனா பாதிப்பு ஊரடங்கால் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது.
சமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினி தெளித்தல் ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஜீயர்கள், 14 அர்ச்சகர்கள், லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள், சமையலறை ஊழியர்கள் என ஏழுமலையான் கோயிலில் வேலை செய்து வரும் 140க்கும் மேற்பட்டோருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், ஏழுமலையான் கோயிலின் சடகோப ராமானுஜ பெரிய ஜீயருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் உள்ள ஸ்ரீ பத்மாவதி மாநில கோவிட் மருத்துவமனையில் இன்று (ஜூலை 18) அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைஷ்ணவ சம்பிரதாய அடிப்படையில் செயல்படும் ஏழுமலையான் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நடை அடைக்கப்படும் வரை நடைபெறும் கோயில் சடங்குகளை மேற்கொள்ளும் ஜீயருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், கைங்கரியங்களை யார் மேற்கொள்வது என்று கேள்வி எழுந்தது.

இதுகுறித்து, தேவஸ்தான அறக்கட்டளை தலைவர் சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜீயருக்கு சிறந்த சிகிச்சையை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், நித்ய கைங்கரியங்களில் இடைவெளி வராமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கோயில் அதிகாரிகளுக்கு சுப்பா ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதுபோன்று சடகோப ராமானுஜ சின்ன ஜீயருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, திருப்பதி கோயிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதுலு, “கோயிலில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட பலருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 பேருக்கான ரிசல்ட் இன்னும் வரவில்லை. தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தரிசனத்தை நிறுத்த மறுக்கிறார். இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை தேவை” என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ட்விட்டரில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த சூழலில், திருப்பதி கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்குத் தற்காலிக தடை விதிக்குமாறு தேவஸ்தானத்துக்கு ஆந்திர போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: