ஞாயிறு, 3 நவம்பர், 2019

எடப்பாடியிடம் ராமதாஸ் கொடுத்த பட்டியல்..

மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.
“நடந்து முடிந்த விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல்களில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு புதிய சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதற்கு முன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்ச் செல்வனை அழைத்துக் கொண்டு அமைச்சர் சிவி சண்முகம் ஒவ்வொரு தலைவராக சென்று சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அந்த வகையில் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று டாக்டர் ராமதாஸையும் சந்தித்து இந்த தேர்தலில் முத்தமிழ்செல்வனை வெற்றி பெற வைத்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் சிவி சண்முகம்.
அப்போது முதல்வர்- ராமதாஸ் சந்திப்பு நடைபெற வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அதாவது நவம்பர் 1ஆம் தேதி திடீர் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருக்கிறார். முதல்வரின் மாமனார் காளியண்ணன் காலமானதை ஒட்டி துக்கம் விசாரிப்பதற்காக ராமதாஸ், முதல்வரின் வீடு தேடிச் சென்று சந்தித்தார் என்று பாமக வட்டாரத்தில் சொல்கிறார்கள்.அதேநேரம் பாமகவில் இன்னொரு தகவலையும் சொல்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதை ஒட்டி அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பாமக அறிவித்துவிட்டது. இதையடுத்து வன்னியர் சங்கத்திற்கான புதிய தலைவர் உட்பட பல்வேறு வகைகளில் உள்ளாட்சித் தேர்தலுக்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வருகிறது பாமக.
கடந்த மக்களவைப் பொதுத் தேர்தல்- மினி சட்டமன்றத் தேர்தலில் பாமக அதிமுக கூட்டணி ஏற்பட்ட போது அது பற்றி சிறப்பு கூட்டம் நடத்தி பாமக நிர்வாகி களிடம் பேசினார் ராமதாஸ். அந்தக் கூட்டத்தில் பேசிய அன்புமணி, ‘இந்தக் கூட்டணியில் கடுமையா உழைச்சா உள்ளாட்சித் தேர்தல்லையும் கூட்டணி தொடரும். அப்போது பாமகவுக்கு பல உள்ளாட்சிப் பதவிகளில் அமரும் வாய்ப்பு கிடைக்கும். அதனால் கடுமையாக உழைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக பாமக கூட்டணி தோல்வி அடைந்தாலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமகவின் ஆதரவோடு ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள தேவையான சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றது அதிமுக. அண்மையில் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்க்காத அளவுக்கு வாக்கு வித்தியாசம் அதிகமானதற்கு டாக்டர் ராமதாஸும் ஒரு காரணம் என்பதை அதிமுகவினரே ஏற்றுக் கொள்கிறார்கள்.
இந்த அரசியல் பின்னணி சூழலில்தான் டாக்டர் ராமதாஸ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நவம்பர் 1-ஆம் தேதி அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அப்போது வருகிற உள்ளாட்சித் தேர்தலில் பாமக போட்டியிட விரும்புகின்ற நகராட்சிகள் உள்ளிட்ட பதவிகள் குறித்து ஒரு பட்டியலை எடப்பாடியிடம் கொடுத்திருக்கிறார் ராமதாஸ். இதில் மிக முக்கியமான விஷயம் சென்னை மேயர் பதவியை பாமகவுக்கு கேட்டு அந்தப் பட்டியலில் வற்புறுத்தி உள்ளார் ராமதாஸ். சென்னை மாநகரில் வன்னியர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால் சென்னை மாநகராட்சியை தங்களுக்குத் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ராமதாஸ்.
பட்டியலை வாங்கி வைத்துக்கொண்டு முதல்வர் கண்டிப்பா நாம பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்று சொல்லி அனுப்பி உள்ளார் . பாஜகவும் ஏற்கனவே சென்னையைக் கேட்கிறது. அதிமுகவிலேயே சென்னை மேயர் வேட்பாளராக அமைச்சர் ஜெயக்குமார் தன் மகன் டாக்டர் ஜெயவர்தனை நிற்க வைக்க தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறார். இந்த வகையில் சென்னை மேயர் சீட்டுக்கு பாமகவும் குறி வைத்திருக்கிறது” என்ற மெசேஜ் க்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

கருத்துகள் இல்லை: