சனி, 9 நவம்பர், 2019

600-க்கும் மேற்பட்ட கருவிகளைக் கண்டுபிடித்துள்ள தஞ்சை அமிர்த கணேஷ்

பாண்டியன் சுந்தரம் :   600-க்கும் மேற்பட்ட கருவிகளைக் கண்டுபிடித்துள்ள
தஞ்சை அமிர்த கணேஷ் :"இதுவரை கண்டு பிடித்த கருவிகளையும், அதன் தொழில் நுட்பங்களையும் அரசுக்கு விட்டுத்தரத் தயாராக இருக்கிறேன்!"
தஞ்சை மாவட்டம் மருத்துவக் கல்லூரி ரகுமான் தெருவில் வசித்து வருபவர் 33 வயது நிரம்பிய அமிர்த கணேஷ். மின்னணுவியல் தகவல் தொடர்பில் பொறியியல் படித்து முடித்த இவர், கடந்த 12 ஆண்டுகளாக 600க்கும் மேற்பட்ட கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார்.
முக்கியமாக, விஷவாயு தாக்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு ஒரு புதிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து 2018 வரை தமிழகத்தில் மட்டும் 144 பேர் விஷவாயு தாக்கி இறந்து உள்ளனர். பல வருடங்களாகப் பயன்படுத்தாமல் இருக்கும் கிணறு மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளில் விஷவாயுக்கள் இருக்கும். அப்படி இருக்கும் தொட்டிகளில் விஷவாயுக்கள் உள்ளதா என்பதை மேலிருந்தே தெரிந்து கொள்ள ஒரு கருவியைக் கண்டுபிடித்து உள்ளார்.
இந்தக் கருவி ஒரு குழாயில் இணைக்கப்பட்டு இருக்கும். அதை தொட்டியினுள் விடும் போது அதில் இருக்கும் வாயுக்களில் விஷத் தன்மை இருந்தால் அந்த கருவி உடனடியாக அதிர்வை ஏற்படுத்தி எச்சரிக்கை செய்யும். அதன் பிறகு சக்கர் எனப்படும் கருவி மூலமாக அந்த விஷவாயுவை வெளியேற்றிவிடும்.
சில நேரங்களில் சுத்தம் செய்து கொண்டு இருக்கும் போதே, திடீரென விஷவாயுக்கள் வெளியேறி உயிரிழப்பு ஏற்படுவதும் உண்டு. இதைத் தவிர்க்க விஷவாயுவைக் கண்டறியும் கருவியுடன் கூடிய ஒரு ஹெல்மெட்டைக் கண்டறிந்துள்ளார்.
அந்த ஹெல்மெட்டில் விஷவாயுவைக் கண்டறியும் கருவி, பிராணவாயுவைக் கொடுக்கும் கருவி மற்றும் ஒலியை ஏற்படுத்தி தொட்டிக்குள் இறங்கியவரை எச்சரிக்கும் கருவி உள்ளிட்டவை இருக்கும். இதே போல் மேலே இருப்பவர்களுக்குத் தகவல் தெரிவிக்க சிகப்பு விளக்கு மற்றும் ஒலியுடன் கூடிய ஒரு கருவியும் இருக்கும். இதன்மூலம் உள்ளே இருப்பவர் மட்டுமல்லாது வெளியே இருப்பவர்களுக்கும் எச்சரிக்கையை ஏற்படுத்துவதால், விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்படாத வகையில் முற்றிலும் தடுக்க முடியும்.
இதயத்துடிப்பு அளவு, ரத்த அழுத்தம், உடல் எடை ஆகியவற்றைக் காட்டும் நாற்காலியை இவர் உருவாக்கி உள்ளார்.அதில் அமர்ந்தால் ஆரோக்கியம் குறித்த தகவல்களைச் சில வினாடிகளில் அறிந்து கொள்ளலாம்.
மருத்துவ மாணவர்களுக்குக் கண்களில் பொருத்தும் ஒரு கருவி உருவாக்கி உள்ளார்."அறுவை சிகிச்சைக்கான பயிற்சியை துல்லியமாகச் செய்ய இது உதவும்" என்கிறார்.
பெண்கள் பாதுகாப்புக்கு கைக்கடிகாரம் போன்ற ஒரு கருவி வடிவமைப்பு செய்து உள்ளார். இதைப் பெண்கள் அணிய, இயல்பு நிலைக்கு மாறாக எது நடந்தாலும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும், சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்கும் தகவல் அனுப்பி விடும்.உதாரணமாக அந்தப் பெண் பயந்து ஓடினாலோ, யாரிடமாவது சண்டை இட்டாலோ, அலறினாலோ உடனடியாக உதவிக்கரங்கள் நீள இக்கருவி வழிசெய்துவிடும்.
ஹெட்லைட் வெளிச்சத்தில் கண்கள் கூசுவதைத் தவிர்க்க ஒரு சாதனம் கண்டு பிடித்து உள்ளார்.நமது காரில் இரு சிறு சென்சாரைப் பொருத்தி விட்டால் எதிரில் வரும் வாகன வெளிச்சத்திற்கு ஏற்ப நம் வாகன வெளிச்சமும் கூடும், குறையும்.
மின் அளவுக் குறியீட்டாளர்கள் வீடு வீடாகச் சென்று மின் அளவீட்டை குறிப்பதற்குப் பதிலாக, ஒரு பகுதியிலேயே நின்று, அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளின் மின் அளவைத் துல்லியமாக அளவிடும் கருவியையும் அமிர்த கணேஷ் கண்டுபிடித்துள்ளார்.
சென்சார் மூலம் நில அளவை செய்யும் சாதனம் கண்டுபிடித்துள்ளார்.
கலப்படம் கண்டுபிடிக்க ஒரு கருவி. கேமரா போன்ற இக்கருவி முன் மிளகாய்த்தூள் போன்றவற்றை வைத்தால் அசலா நகலா எனக் காட்டி விடும்.
கள்ள வாக்கைத் தடுப்பதற்கு ஒரு கருவி.
வாக்களிக்கும் எந்திரத்தில் சின்னத்திற்கு நேராக பட்டன் வைப்பதற்குப் பதிலாக கைரேகை பதியும் கருவியை வைத்து விட்டால் போதும், கள்ள வாக்காளரை கையும் களவுமாகப் பிடித்து விடலாம்.
"எனது ஆய்வுகளுக்கு கேசவன், மூர்த்தி, கார்த்தி, ஜெயக்குமார் முதலிய நண்பர்கள் துணை நிற்கிறார்கள்.எங்கள் கண்டு பிடிப்புகள் அனைத்தும் முழுமை அடைந்தவை. ஆனால் அவற்றுக்கு உரிய அங்கீகாரம் பெற நான்முயலவில்லை. காரணம் அதற்கான வழிமுறைகளும் வசதிகளும் என்னிடம் இல்லை.ஆனால் நாங்கள் கண்டுபிடித்த ஒரு கருவி இந்திய ராணுவத்துக்கு உதவியாக இருக்கிறது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இதுவரை ரஷ்யாவிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பெறப்பட்ட அந்தத் தொழில்நுட்பத்தைச் சில லட்சங்கள் மட்டுமே செலவழித்து நாங்கள் உருவாக்கிக் கொடுத்தோம். நமது ராணுவத்தில் ராக்கெட் லாஞ்சரை துல்லியமாகக் குறிபார்ப்பதற்கு உதவுகிறது அந்தக் கருவி"என்று சொல்கிறார் அமிர்த கணேஷ்.."நான் சன்மானமோ சம்பளமோ எதிர்பார்க்க வில்லை.இதுவரை கண்டு பிடித்த கருவிகளையும், அதன் தொழில்நுட்பங்களையும் அரசுக்கு விட்டுத்தரத் தயாராக இருக்கிறேன். மக்களுக்கான அன்றாடப் பயன்பாட்டுச் சாதனங்களை மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எளிதாக்குவதே என் வாழ்நாள் லட்சியம்"
இது மட்டுமல்லாது இது போன்று மேலும் பல பொருட்களையும் கருவிகளையும் கண்டுபிடித்துள்ள- கண்டு பிடித்து வருகிற இளம் விஞ்ஞானி, தஞ்சை அமிர்த கணேஷின் கண்டுபிடிப்புக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய முறையில் ஊக்கமும் செயல்வடிவமும் ஆதரவும் அளித்தால், புதிய இந்தியா என்ற அனைவரின் கனவும் கூடிய விரைவில் நனவாகும்!

கருத்துகள் இல்லை: