ஞாயிறு, 3 நவம்பர், 2019

1940... மார்ச் 1.. ஏ.டி.பன்னீர்செல்வம் சென்ற விமானமும் தமிழகத்தின் தலைவிதியும் நடுக்கடலில்

அந்த 1940... மார்ச் 1.. தமிழர்களை துயரக் கடலில் ஆழ்த்திய சர் ஏ.டி.பன்னீர்செல்வம் மரணம்! இங்கிலந்தில் இந்திய அமைச்சருக்கான செயலாளராக பொறுப்பேற்க திராவிடர் இயக்க மூத்த தலைவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் ஓமன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அவரது விமானம் விபத்துக்குள்ளாகாமல் இருந்தால் பாகிஸ்தானைப் போல திராவிடஸ்தான் அன்று உதயமாகி இருக்கும் என கண்ணீர்வடித்தனர் பெரியார் உள்ளிட்ட பெருந்தலைவர்கள்.
Saravana Kumar : தமிழர்களின் பெருஞ்செல்வம்! பன்னீர்செல்வம்!
தம்பி,
அந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இரவு நேரங்களில் தனிமையின் போது கத்தி அழத்தோன்றாவிட்டாலும் கூட லேசாக விழிகளில் கண்ணீர் கசைகிறது. அதை நினைக்கும் போது உடல் நடுக்கம் கொள்கிறது. மனம் வேதனை அடைகிறது. இழக்ககூடாததை இழந்துவிட்ட வலி நெஞ்சை
அழுத்துகிறது. நான் வாழும் இந்த வாழ்வை இருந்து பார்த்து மகிழ்ந்து இருக்ககூடாதா எனும் ஏக்கம் பிறக்கிறது. அது நடந்தது இயற்கை என்கிறது அறிவியல். எல்லாம் அவன் செயல் என்கிறது வைதீகம்.
தம்பி! அப்போது அண்ணன் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நாளை காலை முழு ஆண்டுத் தேர்வின் சமூக அறிவியல் பாடத் தேர்வு. அதாவது அந்த ஆண்டின் கடைசித் தேர்வு. கட்டிட வேலைப் பார்த்து உழைத்துக் கலைத்து வந்த தாய், பிள்ளைகள் பசியோடு இருக்குமென சோர்வைக் காட்டிக் கொள்ளாமல், அரக்கப்பறக்க வேலை செய்தாள். சமைத்து முடித்து எடுத்து வைத்து எல்லாரும் ஒன்றாக அமர்ந்து கதைபேசி மெதுவாக உண்ண எல்லாம் நேரமில்லை. பசி வாட்டி எடுத்தது. தாய் அடுப்படியில் பனியாரம் சுட பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டோம். சுட்டுப் போட சுட்டுப் போட அறக்கப் பறக்க ஆவி பறக்க வாயில் போட்டுக் கொண்டோம். சிரித்துப் பேசி மகிழ்ந்து ஒன்றாகத்தான் உறங்கினோம்.

அதிகாலை தாயால் எழமுடியவில்லை. சரியாக பேசவும் முடியவில்லை. நான் எழுந்து வாசல் கூட்டி, ஏனம் விளக்கி, சோறாக்கி முடித்தேன். மதியம் தான் தேர்வு என்றாலும் காலையிலேயே பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும். பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகிவிட்டது. தாயை மெதுவாக எழுப்பி பல்லை விளக்கிவிட்டு பக்கத்துவீட்டு உறவினரிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ஏழு மைல் சைக்கிளை அழுத்தி கிளம்பி வந்துவிட்டேன். மதியத்தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று மாமா பள்ளிக்கூடத்துக்கு வந்துவிட்டார். என்னை அழைத்துச் சென்று தலைமை ஆசிரியரிடம், “இவன் அம்மா டெத் ஆயிட்டாங்க. கூப்பிட்டு போறேன்” என்றார். அப்போது டெத் என்ற ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத வயசு.
அடுத்து காவல் நிலையம், திண்டுக்கல் போகும் பேருந்துகளில் எல்லாம் ஊர் மக்கள், அவர்களின் ஓயாத அழுகை எல்லாம் நடந்து முடிந்த சம்பவத்தை புரிய வைத்தது. மருத்துவமனை சென்று இறங்கியதும், பெருங்கூட்டத்தின் அழுகைச் சத்தம் வரவேற்றது. பிணவறையில் கிடத்தப்பட்டிருந்த தாயின் உடலை கொஞ்சம் தூரத்தில் இருந்து ஜன்னல் வழியாகக் காட்டினார்கள். வாடாமல் கிடந்த பூவை செத்துப் போய்விட்டது என்றார்கள். காலையில் பார்த்த அதே கனகாம்பரம் நிறச்சேலை. அதற்குப் பிறகு அழுகை, மயக்கம் என்று எதுவும் நினைவில்லை.
தம்பி! குடும்பம் நடந்த ஆதாரமான தாயின் உழைப்பில் வந்த சம்பளம் அறுவது ரூபாய் நின்றுவிட்டது. அடுத்துப்பட்ட துன்ப துயரத்துக்குள் எல்லாம் சென்று உன்னையும் வேதனையில் ஆழ்த்த விரும்பவில்லை. தம்பி! தாயின் மரணத்திற்குப் பிறகு நெருங்கிய பலரின் மரணத்தைப் பார்த்துவிட்டேன். நாம் இறப்பு என்பதை எல்லா உயிரினங்களுக்கும் நடைபெறும் ஒரு சாதாரண நிகழ்வாக பார்ப்பதில்லை. நேற்றுவரை நடமாடிக் கொண்டிருந்த உடல் இன்று எந்த உணர்வற்றும் படுத்துக் கிடக்கிறது. நேற்று வரை பேசிப் பழகி சிரித்து மகிழ்ந்த உடல் எந்த வித அசைவும் அற்று கிடக்கிறது. இனி அந்த உடலில் இருந்து அன்பைப் பொழியும் இனிமையான குரல் வரப் போவதில்லை. உரிமையோடு திட்டவும் கண்டிக்கவும் போவதில்லை. நேற்று வரை இருந்தது இனி இருக்கப்போவதில்லை. என்றும் இருக்கப்போவதில்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம் வேதனைப்படுகிறது. உடல் தனது அசைவை நிறுத்திக் கொண்டது. மூச்சை நிறுத்திக்கொண்டது. இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. உயிர் நின்று விட்டது என்பதெல்லாம் விஞ்ஞானம். உயிர் உடலில் இருந்து பிரிந்துவிட்டது என்கிறது அஞ்ஞானம்.
தம்பி! உயிர்மூச்சு நின்றுவிட்டது என்பதற்கும் உயிர் பிரிந்துவிட்டது. என்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. உயிர் நின்றுவிட்டது என்றால் அது தனது செயல்பாடுகளை முடித்துக் கொண்டது. இனி செயல்படாது என்ற பொருளாகிறது. ஆனால் உயிர் பிரிந்துவிட்டது என்னும் போது, பிரிந்த உயிர் என்ன ஆனது, எங்கே செல்கிறது, அதன் செயல்பாடு என்ன, அதன் நினைப்பு என்ன போன்ற கேள்விகள் எல்லாம் எழுகிறது. கேள்விகள் தேடுதலை நோக்கி நகர்த்துகிறது. தேடுதலில் உணர்ந்து கொண்ட, புரிந்து கொண்ட ஒன்று சரியோ தவறோ அதை வைத்து தத்துவங்களும் கோட்பாடுகளும் உருவாகிறது. அந்த தத்துவங்களும் கோட்பாடுகளும் கடவுள்களையும், மதங்களையும், சமயங்களையும், மார்க்கங்களையும் உருவாக்குகிறது.
தம்பி! சமயத் தத்துவக் கோட்பாடுகளும் தத்துவங்களும் நிறைய உள்ளது. உலகாய்தம், எண்ணியம், சாங்கியம், தாந்திரீகம், சிறப்பியம், அணுவியம், ஓகம், ஊழ், தற்செயல், பிரம்மம் போன்ற பல. இவற்றில் பிரம்மத்தை ஆராயப்புகுந்தவர் ஆதிசங்கரர். அவர் தான் பல வழிப்பாட்டு முறைகளை ஒருமையும் பொதுமையும் படுத்தினார். அவருடைய கொள்கை வேதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதற்குப் பெயர் வைதீகம். அதன் பின்பு வெள்ளைக்காரன் கொடுத்த பெயரான இந்து மதமாகிறது. இந்த ஆரியவேத வைதீக மதம் என்பது பெரும்பாலும் இறப்பின் பிறகான பலனைப் பேசக்கூடியது. உயிர் பிரிந்த பிறகான அதனுடைய தேவைகள், விருப்பங்கள், அது செல்லும் மேலோகம், சொர்க்கம், நரகம், மறுபிறப்பு, பிரம்மம் அல்லது ஆன்மா போன்ற இவற்றைப் பற்றிப் பேசக்கூடியது தான் வைதீகம். இதற்கு மாறான எதிரான கருத்துக்களையும், தத்துவ கோட்பாடுகளையும் கொண்டது அவைதீகம். அதாவது வேதத்தை அடிப்படையாகக் கொண்டது வைதீகம். வேதத்துக்கு எதிரானது அவைதீகம். உலகம் படைக்கப்பட்டது என்பது வைதீகம். உலகம் உருவானது என்பது அவைதீகம். உயிர் பிரிந்துவிட்டது என்பது வைதீகம். உயிர் நின்றுவிட்டது என்பது அவைதீகம்.
“என்ன அண்ணா! தலைப்பை ஒன்றை வைத்துவிட்டு, தாயின் மரணம், தத்துவக்கோட்பாடுகள், மதங்கள் என்று சொல்லிக்கொண்டு போகிறாயே” என்று நீ கேட்க நினைப்பது புரிகிறது. தம்பி! எவ்வளவு பெரிய தைரியம் இருந்தாலும் இரத்த சொந்தம், நெருங்கமானவர்கள் இறந்தால் மனம் உடைந்து போகிறோம். தம்பி! தனது மனைவி நாகம்மை இறந்தபோதும், தமையனார் ஈ.வெ.கிருஷ்ணசாமி இறந்த போதும் தாயார் இறந்த போதும் பெரியார் எழுதியதை படித்துப் பார். தலைப்பும், நான் சொன்னதும் புரிய வரும்.
“நீங்கள் இவ்வளவு பெருத்திரளாகக்கூடி எங்கள் குடும்பத் தலைவர் பெரியார் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களின் மறைவுக்காக அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றியதற்காக உள்ளபடியே நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். சாதாரணமாக கவனிக்கப் போனால், இதற்காக நாம் துக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்பதோடு, இம்மறைவில் அதிசயப்படத்தக்கதும் ஏதும் இல்லை. ஏனெனில், அவர் இளம் வயதில் மறையவில்லை. 73 வயது தாண்டி 74ஆம் வயதில்தான் மறைத்துள்ளார். இது இந்நாட்டினரின் சராசரி வயதுக்கு மூன்று மடங்காகும். பெரும்பாலான மக்கள் 30 வயதிற்குள்ளாகவே இந்நாட்டில் இறந்துவிடுதல் மிகச் சாதாரணமாகும். எனவே, இந்தவகையில் நாம் அதிகம் வருந்துவதற்கில்லை. காலமாறுதல்களும், பஞ்சமும் மற்றும் பல கொடிய நோய்களும் மக்களை வாட்டி வதைத்து வரும் இக்காலத்தில் 70வயது வரை உயிர் பிழைத்திருந்ததுதான் அதிசயமே ஒழிய மாய்வதொன்றும் அதிசயமே இல்லை. (விடுதலை 07-02-1950)
”95 வயது காலம் சுகமே வாழ்ந்து, சுகமா இருந்து வந்த எனதருமைத் தாயார் சின்னத்தாயம்மாள் 28.07.1936 ஆம் தேதி செவ்வாய் நள்ளிரவு 12மணிக்கு முடிவெய்தினார். அம்மையார் இந்திய மக்களின் சராசரி வயதுக்கு 4 பங்கு காலம் அதிகமாகவே வாழ்ந்துவிட்டார். தானாக நடக்க, இருக்க, மலஜலம் கழிக்க சவுகரியமுள்ள காலம் அவ்வளவும் வாழ்க்கை நடத்தி விட்டு, சவுகரியம் குறைந்த 2 மணி நேரத்தில் முடிவெய்திவிட்டார். 28ம் தேதி இரவு 9.30 மணிக்கு அம்மையிடம் அனுமதி பெற்றே ஜோலார்பேட்டை பிரச்சாரத்துக்கு சென்றேன். 12 மணிக்கு ஆவி போக்குவரத்து நின்றுவிட்டது. காலை 9 மணிக்கு வந்து சேர்ந்தேன்.
எனக்கு அவர் முடிவெய்தியது பற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது. அந்தம்மாளுடைய கோரிக்கை எனக்கு ஒரு கலியாணம் செய்து வைத்துவிட்டுச் சாக வேண்டுமென்பதெ. எனது கோரிக்கை எனக்கு முன்னதாகவே அம்மையார் முடிவெய்திவிட வேண்டுமென்பதே. (குடி அரசு 2-08-1936)”
“எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1933 தேதி ஆவி நீத்தார். நாகம்மாளை நான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்திற்கு வரவில்லை. நான் சுயநலவாழ்வில் மைனராய், காலியாய், சீமானாக இருந்த காலத்திலும் பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்கமுடியாத காரியம்.
பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கின்றேனோ அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழுயோக்கியதை இல்லை. நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு வினாடியும் உணர்ந்தே வந்தேன். ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவுமே விளங்கவில்லையே.
நாகம்மாளை அற்ப ஆயுளென்று யாரும் சொல்லிவிட முடியாது. அவருக்கு 48 வயது ஆனபோதிலும் அது இந்திய மக்களின் சராசரி வாழ்நாளாகிய 23.5 வயதிற்கு இரட்டிப்பென்றே சொல்ல வேண்டும். நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும் கருதாமல், அதை ஒரு மகிழ்ச்சியாகவும் லாபமாகவும் கருத வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன். கடந்த 2, 3 வருசங்களுக்கு முன்பிருந்தே நா இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் (சங்கரச்சாரிகள் போல. ஆனால் அவ்வளவு ஆடம்பரத்துடன் பணவசூலுக்கல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப்பயணத்திலேயே இருக்க வேண்டும் என்றும், நமக்கென்று ஒரு வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்திர வாசமோ இருப்பது கூடாதென்றும் கருதி வந்ததுண்டு. அதற்கு வேறு எந்த தடையும் இருந்திருக்கவில்லை என்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தாள். இப்போது அந்தத் தடை இல்லாது போனது ஒரு மகிழ்ச்சிக்குரியக் காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையே தருவதாகும். (குடி அரசு 14.5.1933)
தம்பி! பெரியார் தனது தமையனார் இறந்த போது ஆகட்டும், தாய் இறந்த போது ஆகட்டும், நாகம்மை இறந்த போது ஆகட்டும் கலங்கவில்லை. கல்மனம் கொண்டு அல்லவா இருந்திருக்கிறார் என்று கூட எண்ணத் தோன்றும். ஆனால் தம்பி! பன்னீர்செல்வம் இறந்தபோது அவர் சின்னப்பிள்ளை போல தேம்பி அழுதார். பன்னீர்செல்வம் அவர்கள் இறந்த போது எழுதியதைப் படித்துப்பார்.
”நமது உண்மைத் தோழரும், உற்ற துணைவரும், உள்ளும் புறமும் ஒன்றாய் உள்ளவரும், தமிழர் இயக்கத்தில் உறுதியான பற்றுக்கொண்டு அல்லும் பகலும் உழைத்து வந்தவரும், நம்மிடத்தில் களங்கமற்ற அன்பும் பற்றுதலும் விசுவாசமும், கொண்டிருந்தவரும், நினைத்தால் திடுக்கிடும்படி எதிரிகள் நெஞ்சில் எப்போழுதும் திகிலை உண்டாக்கிக் கொண்டிருந்தவருமான அருமை பன்னீர்செல்வம் அவர்களை இன்று ’காலம் சென்ற பன்னீர்செல்வம்’ என்று எழுத நேரிட்டதற்கு மனம் பதைக்கிறது. நெஞ்சு திக்கு திக்கென்று அடித்துக் கொள்கிறது. மெய் நடுங்குகிறது. எழுத கையோடவில்லை. கண் கலங்கி மறைக்கிறது. கண்ணீர் எழுத்துக்களை அழிக்கிறது.
பன்னீர் செல்வத்திற்குப் பாழும் உத்தியோகம் வந்ததும் போதும். அது அவரது உயிருக்கே உலையாய் இருந்ததும் போதும். தமிழர்களைப் பரிதவிக்க விட்டுவிட்டு மறைந்துவிட்டார். இந்த உத்தியோகம் ஏன் வந்ததென்றே ஒவ்வொரு வினாடியும் தோன்றுகிறது. அவருக்கடுத்தாற் போல் யார் யார் என்று மனம் ஏங்குகிறது. தேடுகிறது. தேடித் தேடி ஏமாற்றமடைகிறது. என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்த போதும், இயற்கைதானே 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா? இது பேராசை அல்லவா என்று கருதினேன். 10 வயதிலேயே லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைத்த ஒரே அண்ணன் மகன், படித்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்து சரியாக 20 வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை. சிதறவில்லை.
பன்னீர் செல்வத்தின் மறைவு மனத்தை வாட்டுகிறது. தமிழர்களைக் காணுந்தோறும் காணுந்தோறும், தமிழர் நிலையை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நெஞ்சம் பகீரென்கிறது. காரணம், முன் சொல்லப்பட்ட மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைவு என் தனிப்பட்ட சுக துக்கத்தைப் பொறுத்தது. தன்னலம் மறையும்போது அவர்களது மறைவின் நினைவும் மறந்து போகும். பன்னீர்செல்வத்தின் மறைவு பொதுநலத்தைப் பொறுத்தது. தமிழர்களின் நிலையைப் பொறுத்தது. எனவே தமிழர்களைக் காணுந்தோறும் நினைக்குந்தோறும் பன்னீர்செல்வம் ஞாபகத்துக்கு வருகிறார். இது என்று மறைவது? இவருக்குப் பிறகு யார் என்றே திகைக்கிறது.
பாழாய்ப்போன உத்தியோகம் – சர்க்கரை பூசிய நஞ்சுருண்டை குத்திய தூண்டில் முள்ளாக இருந்துவிட்டது. அம்முள்ளில் பட்ட மீனாக ஆகிவிட்டார் செல்வம். இனி என் செய்வது? தமிழர் இயக்கமானது தோன்றிய நாள் முதல் இப்படியே பல தத்துக்களுக்கு ஆளாகி வந்திருக்கிறது என்றாலும், நாளுக்கு நாள் முன்னேறியே வந்திருக்கிற அனுபவந்தான் நமக்கும் தமிழ் மக்களுக்கும் சிறிது ஆறுதலளிக்கும் என்று கருதுகிறேன். காலம் சென்ற பன்னீர்செல்வமே! காலம் சென்றுவிட்டாயோ? நிஜமாகவா? கனவா? தமிழர் சாந்தி பெறுவாராக” (குடி அரசு 17.031940)
தம்பி! பன்னீர்செல்வம் இறந்தபோது பெரியார் எழுதிய இரங்கல் அறிக்கையை இப்போது படிக்கும் போதும் கண்ணீர் கசைகிறது. தனது தமையன், தாய், மனைவி சாவின் போதெல்லாம் அழுகாத பெரியார் ஏன் பன்னீர்ச்செல்வத்தின் மறைத்தின் போது அவ்வளவு கலங்கி போனார். தமிழர்களின் எதிர்காலம் மீதான காதலும் அக்கரையும் தான் காரணம். நட்டாற்றில் தவிக்க விட்டு என்று சொல்வார்களே. அந்த நிலையில் தமிழர்கள் இருந்த போது நம்மை தவிக்க விட்டு சென்றவர்கள் முக்கியமான இருவர். ஒருவர் டி.எம்.நாயர். மற்றொருவர் பன்னீர்செல்வம். பன்னீர்செல்வம் உயிரோடு இருந்திருந்தால் நாம் ஒருவேளை தனிநாடு பெற்று இருக்கக்கூடும். தம்பி! யார் அந்த பன்னீர்செல்வம் என்று அறிந்து கொள்ள உனக்கு ஆவல் பிறந்திருக்கும்.
பன்னீர்செல்வம் தஞ்சை மாவட்டம் பெரும்பண்ணையூரில் 1883ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பிறந்தார். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்று இலண்டன் சென்று பாரிஸ்டர் ஆனார். அங்கேயே கிரேஸ் இன்னில் வழக்கறிஞராகத் தொழில் பார்த்து வந்தார். சில காலம் கழித்து இந்தியாவுக்குத் திரும்பினார். பின்னர் தஞ்சை மாவட்டத்தில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1924 முதல் 1930 ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாகத் தஞ்சை மாவட்டத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1922 முதல் 1924 வரை தஞ்சை மாவட்ட உயர்நிலைப் பள்ளிக் கல்விக் கழகத்தின் தலைவராகவும் மாவட்ட கல்விக்குழுவின் தலைவராகவும் இருந்தார். 1918 முதல் 1920 வரை தஞ்சை நகராட்சியின் தலைவராகவும் பணியாற்றினார். 1930 ஆம் ஆண்டு முதல் சென்னை சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இலண்டனின் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்றார். 1935 முதல் 1937 வரை சென்னை மாகாணத்தின் உள்நாட்டு அமைச்சராகப் பணியாற்றினார். இடைக்கால அமைச்சரவையில் பன்னீசெல்வம் ஓர் அமைச்சராக இருந்தார். 1938 ஆம் ஆண்டு சர் பட்டம் வழக்கப்பட்டது. சர் செல்வம் நீதிக்கட்சிக்காரராகவும் சுயமரியாதை வீரராகவும் வாழ்ந்தார்.
தமிழ்நாடு தமிழருக்கே ஆகவேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதி காட்டினார்.. சமஸ்கிருதமும், ஆரியப் பண்பாடும் நம்முடையவை அல்ல. அவை வேறானவை என்பதை நிலைநாட்டி மேடைகளில் முழங்கி வந்தார். பார்ப்பனர், தமிழரல்ல என்றும் அவர் ஆய்வுரை நிகழ்த்தினார். கலை, மொழி, நாகரிகம் ஆகியவற்றில் திராவிட ஆரிய பேதம் இருப்பதை அவர் விளக்கினார். ஒவ்வொரு கூட்டத்திலும் பேசுகிறபோது, பெரியார் வேண்டுகோளின்படி தமிழர்கள் நடக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுப்பார். 1939ஆம் ஆண்டு அக்டோபரில் சர் செல்வம் அவர்களை வந்து சந்திக்கும்படி வைசிராயிடமிருந்து அழைப்பு வந்தது. வைசிராயின் அழைப்பிற்கிணங்க சர் செல்வம் 10.10.1939 இல் டில்லிக்கு ரெயில் ஏறினார். ஏராளமானோர் சென்ரல் இரயில்நிலையம் சென்று வழி அனுப்பி வைத்தனர். வைசிராயைப் பேட்டி கண்டு அக்டோபர் 18ஆம் தேதி சென்னைக்குத் திரும்பினார். அவரைத் திரளான பொதுமக்கள் வரவேற்றனர். அன்று மாலையே சென்னை பிராட்வே டாக்கீசுக்கு அருகே இருந்த பெரிய மைதானத்தில் கூட்டம் ஏற்பாடாகி இருந்தது. அக்கூட்டத்தில் தாம் வைசிராயைக் கண்டு பேசிய விஷயத்தைப் பற்றிக் கூறினார்.
ஈரோட்டில் பெரியாரைச் சந்தித்து வைசிராயைச் சந்தித்த விஷயங்களை எல்லாம் அவரிடம் கூறினார். சர் செல்வம், பிறகுதான் அவர் செல்வபுரம்- திருவாரூர் அருகேயுள்ள ஊர்- தன் சொந்த இருப்பிடத்திற்குச் சென்றார். தலைமையிடம் அவ்வளவு பற்று வைத்திருந்தார். அதேபோல தொடக்கத்திலிருந்தே பெரியாரும் சர் செல்வத்தின் மீது பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால்தான் செங்கற்பட்டில் நடைபெற்ற முதலாவது சுயமரியாதை இளைஞர் மாநாட்டிற்கு சர் செல்வத்தைப் பெரியார் தலைமை ஏற்கச் செய்தார்.
1940 மார்ச் 11ஆம் தேதி இந்தியா மந்திரியின் ஆலோசகர் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக அவர் பயணப்பட்டார். ஹனிபால் எனும் விமானம் அவரைச் சுமந்து சென்றது. விமானம் ஓமான் கடலிலே வீழ்ந்தது. பன்னீர் செல்வம் 2.3.1940இல் மறைந்தார். தம்பி! அவர் இறந்ததும் பெரியார் எழுதிய இரங்கல் அறிக்கையை படிக்கும் போது கண்ணீர் கசைகிறது. மேலும் அறிஞர் அண்ணா குடிஅரசில் எழுதிய இரங்கல் அறிக்கை படிக்கும் போது மேலும் கண்ணீர் ஊற்றெடுக்கிறது. இதோ அதையும் எடுத்துத் தருகிறேன்.
”மறைந்தாயோ செல்வமே! துறந்தாயோ மானிலத்தை! என்று 2 கோடி தமிழர்கள் அலறித் துடிக்கவும், ‘காலஞ்சென்ற பன்னீர் செல்வமே காலஞ்சென்று விட்டாயா?’ என்று பெரியார் புலம்பும்படி விட்டுச் சென்றார் நமது செல்வம் என்று எண்ண வேண்டியிருக்கிறது. கவர்னரின் அனுதாபச் செய்தியிலிருந்து,மார்ச்சு மாதம் 1ம் நாள் அதிகாலை கராச்சியை விட்டு நமது செல்வத்தைத் தாங்கிச் சென்ற ஹனிபால் எங்கே? எங்கே? என்று மக்கள் துடிக்கின்றனர். ஹனிபால் மறைந்த மாயமென்ன? செல்வத்திற்கு உற்ற கதி என்ன? என்று மக்கள் துடித்தனர். கவர்னர் அறிக்கை ஹனிபால் கடலுள் மூழ்கியிருக்க வேண்டும், நமது செல்வம் உயிர் துறந்திருக்க வேண்டும் எனக் கருதவேண்டியிருக்கிறதென முடிவு கட்டிவிட்டது. எனவே இனி நமது அருஞ்செல்வத்தைக் குறித்து எண்ண என்ன இடமிருக்கிறதென்பது நமக்கு விளங்கவில்லை. இச்செய்தி ஏற்கனவே மார்ச்சு 2 ம் நாள் முதல் சித்தம் கலங்கித் தவிக்கும் தமிழர்களைப் பித்தங்கொள்ளச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைந்த காலையில் எல்லாம் பதறாத சிதறாத நமது பெரியார், செல்வம் மறைந்தார், மற்றவர்களைக் குறித்து நாம் என்ன சொல்ல வேண்டுமென்று கேட்கிறோம். இவ்வளவு பெரிய கலக்கத்தை துயரத்தை அவரது மறைவு உண்டு பண்ணியதேன் என்றால் அவர் தமிழர்கள்பால் காட்டிய அன்பும் தமிழர்கள் அவர்பால் கொண்ட நம்பிக்கையும் என்றே சொல்வோம். தந்தை தனது தனையனைப் பிரிந்த காலையிலும், தனையன் தந்தையைப் பிரிந்த காலையிலும் வருந்துவதன் காரணம் அன்பு காதல் என்று சொன்னாலும் ஒருவரிடமிருந்து மற்றவர் எதிர்பார்த்த உதவியென்பதே நமது அபிப்பிராயம். ஆனால் இன்று, நமது செல்வத்தின் மறைவைக் குறித்து 2 கோடி தமிழர்களும் அலறித் துடிப்பதன் காரணம் அன்பு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்று நாம் எந்த மலையுச்சியிலிருந்தும் சொல்வோம். பெரியாரிடம் அவருக்கிருந்த அன்பு எவ்வளவு உண்மையானதென்பதை அன்று அதாவது சென்ற பிப்ரவரி திங்கள் 26ம் நாள் மாலை செண்ட்ரல் ஸ்டேஷனை விட்டு நமது செல்வத்தை ஏற்றிச் சென்ற ரயில்வண்டி புறப்பட இருந்த சமயத்தில் இருவர்களுடைய கண்களின் கலக்கத்தையும் உதடுகளின் அசைவையும் கண்ட எவரும் நன்கு அறிவார்கள்.
அக்காட்சி ஒன்றே போதும் செல்வம் தமிழர்கள் நலனில், தமிழர்கள் வாழ்வில் கொண்டுள்ள பற்றை விளக்க என்று நம்புகிறோம். வெண்ணெய் திரண்டு வருகையில் தாழி உடைந்தாற்போல், அரசியல் எதிர்களால், நையாண்டி செய்யப்பட்டு வந்த நீதிக்கட்சி உருண்டு திரண்டு உருவாகி, வருகையில் செல்வம் மறைந்தார் என்ற் செய்தி உண்மையாகவே 2 கோடி தமிழர்களும் தங்கள் தலையில் இடிவிழுந்ததென எண்ணுவர் என்பதில் சந்தேகமில்லை. நீதிக்கட்சியே அவரது உயிராயிருந்த தென்பதற்கு 1939ம் ஆண்டு மே திங்களில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருக்கையிலுங்கூட கட்சியின் ஆக்கவேலையைச் செய்யும்படி தமிழரைக் கேட்டுக் கொண்டு அறிக்கையொன்று வெளியிட்டதே போதுமெனக் கருதுகின்றோம்.
தமிழர்கள் வாழ்வே தமது வாழ்வு, தமிழர்களின் உயர்வே தமது உயர்வு என்று எண்ணி உயிர் வாழ்ந்துவந்த நமது செல்வத்திற்குப் பெரியார் கூறுவதுபோல் பாழும் உத்தியோகம் அவரது உயிருக்கே உலையாய்விட்டது போலும். அவரது மறைவு நீதிக்கட்சிக்கு, பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு எவ்வளவு பெரிய நஷ்டம், ஈடு செய்ய முடியாத நஷ்டம் என்பது பெரியார் துயரிலிருந்து நன்கு விளங்கும். இத்தகைய ஒப்பும் உயர்வுமற்ற தலைவரைப் பிரிந்து பரிதவிக்கும் கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்கு நாம் என்ன சொல்லி ஆறுதலளிப்போம் என்பது தோன்றவில்லை. தோன்றலும் மறைதலும் உலக இயல்பே. ஆனால் நமது செல்வத்தின் மறைவு அதைப் போன்றதென்பதற்கில்லை. இத்தகைய மறைவு மிக அபூர்வம் என்றே சொல்வோம். விண்ணில் பறந்த விமானம், மறைந்தது கண்டுபிடிக்க முடியவில்லையென்று நாம் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. ஒரு வேளை கடலில் வேண்டுமானால் அத்தகைய சம்பங்கள் ஏதோ ஓரோர் சமயத்தில் நடந்திருக்கின்றனவே யன்றி விண்ணில் ஒரு போதும் நடந்ததாகக் காணோம்.
ஆகவே இத்தகைய ஆபத்து நமது செல்வத்தைத் தாங்கிச் சென்ற விமானத்திற்கா தேடி வரவேண்டும்? ஹனிபாலுக்கு வந்த விபத்து பெரிய மாயமாகவே இருக்கிறது. இன்றுடன் நாட்கள் 17 ஆகியும் இன்னும் அதன் விபத்தைக் குறித்து ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை ராஜாங்க சபையில் கேட்ட கேள்விகளுக்கு இந்திய மத்திய சர்க்கார் போக்கு வரவு இலாகா காரியதரிசி, சர் பன்னீர்செல்வம் ஏறிச் சென்ற ஹனிபால் என்னும் விமான விபத்து சம்பந்தமாய் விசாரணை முறையைப் பற்றியும் அவ்விசாரணைக் கமிட்டிக்கு யார் யாரை நியமிப்பதென்பதைக் குறித்தும் இந்திய சர்க்காருக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கும் கடிதப் போக்குவரத்து நடந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். விசாரணை நடத்தி விடுவதினாலே தங்கள் பொறுப்பு நீங்கி விட்டதென சர்க்கார் கருதிவிடாமல் தமிழர் செல்வத்தை பொக்கிஷத்தைப் பிரிந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்குப் போதிய பரிகாரம் தேடித் தரவேண்டியது அவர்களது நீங்காக்கடமை என்பதையும் நினைவுறுத்துகிறோம்.
பார்ப்பனரல்லாத அப்பெருஞ் சமூகம் இந்நிலையிலிருப்பதற்குக் காரணம், தங்கள் தலைவர்களைக் குறித்த உண்மை அபிமானமில்லாததேயாகும் என்று சொன்னால் பலருக்குக் கோபம் வரலாம். ஆனால் அவர்களை நாம் ஒன்றுகேட்க ஆசைப்படுகிறோம். அதாவது டாக்டர் நாயர் பெருமான் லண்டனில் மாண்டகாலையியும், தியாகராயர் பெருமான் உயிர் துறந்த போதிலும், பானகல் அரசல் மறைந்த சமயத்திலும் அலறின மக்கள், துடித்த மக்கள் அவர்களைப் பின்பற்றி யாது செய்தார்கள் என்று கேட்கிறோம்? அவர்கள் செய்த தியாகங்களின் பரிசை பலனைப் பெற்றவர்கள் தங்கள் தங்கள் சுற்றமெங்கே? வீடுவாசலெங்கே? நிலபுலம் எங்கே? என்று திரிகின்றனரே யல்லாது அவர்களின் தியாகங்களைப் பின்பற்றி எத்தனைப்பேர் சுயநலமற்று பொதுநலமே தங்கள் நலமென்றிருக்கின்றனர் என்று கேட்கிறோம்.
அவர்களைப் பின்பற்றியிருந்தார் நமது செல்வம். இன்று அவரும் மறைந்து விட்டார். பெரியாரும் பன்னீர்செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது. தமிழர்களைக் காணுந்தோறும் காணுந்தோறும் தமிழர் நிலை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நெஞ்சம் பகீரென்கின்றது. காரணம் பன்னீர் செல்வத்தின் மறைவு பொதுநலத்தைப் பொறுத்தது தமிழர்களின் நிலையை பொறுத்தது. இவருக்கு பதில் யார் என்றே திகைக்கிறது என்று அலறுகிறார். பெரியாரின் அலறலுக்கு, இதோ நாங்கள் இருக்கிறோம் என்று அபயம் தர எத்தனை பேர் முன் வருகிறார்கள் என்று கேட்கிறோம்.
ஆகவே நமது செல்வம் மறைவைக் குறித்து உண்மையிலே தமிழர்கள் துயருகிறார்கள் என்றால் செல்வம் எதற்காக அல்லும் பகலும் பாடுபட்டாரோ எந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தாரோ அதே கொள்கைக்காக ஒவ்வொருவரும் உழைக்க பாடுபட முன்வரவேண்டும். அவர் மொழிந்த ஒவ்வொரு சொல்லும் எதிர்காலத்தில் தமிழர் ஆட்சியில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். அவரது உருவச்சிலை இல்லாத ஊருக்கு அழகு பாழ் என்று ஒவ்வொரு தமிழனும் எண்ண வேண்டும். ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் செல்வத்தின் திரு உருவப்படமிருத்தல் வேண்டும். இப்படியாக 2 கோடி தமிழர்களும் செல்வமாகவே விளங்கிவிட்டால், செல்வத்தைப் பறிகொடுத்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு இதைவிட மனப்பூரிப்பு, மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியுமென்று கேட்கிறோம். 2 கோடி தமிழர்களும் நமது செல்வத்தின் மறைவைக் குறித்து சித்தங்கலங்கி பித்தங் கொண்டிருப்பது உண்மையானால் இதைச் செய்ய முன்வருவார்களா என்று கேட்கிறோம்.
தோன்றுக செல்வம் எங்கும்!
தோன்றுக செல்வம் என்றும்!
தோன்றுக செல்வம் மானிலத்தில்!. (அறிஞர் அண்ணா )
தம்பி! பன்னீர்செல்வம் இறப்பிற்கு பிறகு திராவிடர் கழகம் நிகழ்வுகளில் எல்லாம் பன்னீர்செல்வம் படத்திறப்பு நடைபெற்றது. அந்த காலகட்டத்தில் நிறையப் பேருக்கு பன்னீர்செல்வம் என்று பெயரிட்டார்கள். பன்னிர்செல்வம் இறந்து 80 ஆண்டுகள் ஆகிறது. இருந்தும் அந்த இறப்பை நினைக்கும் போது கண்கள் கசைகிறது. தமிழர்களின் பெருஞ்செல்வம் பன்னீர்செல்வம்! பன்னீர்செல்வத்தின் புகழ் நிலைத்து நிற்கிறது. நிற்கும்.
அண்ணன்
ம.சரவணகுமார்
02-11-2019

கருத்துகள் இல்லை: