புதன், 6 நவம்பர், 2019

இலங்கையில் இருந்து விமானத்தில் தங்கம் .. இரு பெண்கள் வயிற்றுக்குள் .. அந்த பெண்களை வழியில் கடத்திய மர்ம மனிதர்கள் .

தங்கத்தை கடத்தி வந்த பெண்களை கடத்தி சென்ற கும்பல்- சினிமா பாணியில் சென்னையில் பரபரப்புமாலைமலர் :வயிற்றுக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்த பெண்களை பரிசோதனையின் போது வழிமறித்த கும்பல் கடத்தி சென்ற சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தாம்பரம்:
இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பாத்திமா, திரேசா என்ற 2 பெண்கள் வந்தனர்.அவர்களது வயிறு பெரிதாக இருந்ததால் சந்தேகத்தின் பேரில் சுங்கதுறை அதிகாரிகள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது 2 பேரின் வயிற்றிலும் சிறிய மாத்திரை வடிவிலான தங்க கட்டிகள் இருந்தன.>
இதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று இனிமா கொடுத்து தங்கத்தை வெளியில் எடுக்க திட்டமிட்டனர். இதற்காக ஆஸ்பத்திரிக்கு 2 சுங்க அதிகாரிகள் பெண்களை அழைத்துச் சென்றனர். இதில் பெண் அதிகாரி ஒருவரும் இருந்தார்.
ஆஸ்பத்திரி அருகில் வைத்து 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வழி மறித்தது. காரில் இருந்து இறங்கியவர்கள் சுங்க அதிகாரிகளை கத்தியை காட்டி மிரட்டி, பாத்திமாவையும், திரேசாவையும் கடத்திச் சென்றனர்.


அந்த காரை சுங்க அதிகாரிகள் விரட்டிச் சென்றனர். ஆனால் கடத்தல் கும்பல் 2 பெண்களுடனும் காரில் தப்பி விட்டது. அயன் சினிமா படத்தில் வருவது போன்ற இந்த பரபரப்பான சம்பவம் குறித்து குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கடத்தல் கும்பலை தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே கடத்தப்பட்ட 2 பெண்களும் இன்று காலையில் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். சுங்க அதிகாரிகளிடம் சென்று, காரில் கடத்தியவர்கள் இனிமா கொடுத்து தங்களது வயிற்றில் இருந்த தங்கத்தை வெளியில் எடுத்து விட்டதாக தெரிவித்தனர்.

2 பெண்களிடமும் சென்னையில் உள்ள சுங்க அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

யாருக்காக தங்கத்தை கடத்தினீர்கள்? என்பது பற்றி இருவரிடமும் சுங்க துறையினர் விசாரித்து வருகிறார்கள். போலீஸ் விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: