சனி, 9 நவம்பர், 2019

மேயர் பதவிகளுக்கு அதிமுகவே போட்டியிடும் ... கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சி ?

dmdk
நக்கீரன் :தற்போது அரசியல் கட்சிகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலில் கவனத்தை செலுத்தி வருகின்றன. அதிமுக, கட்சி நிர்வாகிகளை அழைத்து உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தொடங்க உத்தரவிட்டுள்ளது. இதேபோல் அதன் கூட்டணிக் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. கூட்டணியில் உள்ள தேமுதிக, சென்னை மற்றும் மதுரை ஆகிய இரண்டு மாநகராட்சிகளோடு சில நகராட்சித் தலைவர் இடங்களையும் கேட்டு ஒரு பட்டியலை கொடுத்திருக்கிறது. பாமகவும், சென்னை, வேலூர், சேலம் ஆகிய மூன்று மாநகராட்சிகளை ஒதுக்க வேண்டும் என்றும் மேலும் சில நகராட்சித் தலைவர் இடங்களையும் கேட்டு ஒரு பட்டியலை கொடுத்துள்ளது. சென்னை, திருப்பூர், நாகர்கோவில், கோவை, ஓசூர் ஆகிய 5 மாநகராட்சிகளை கேட்டுள்ளது பாஜக. இதனை பார்த்த அதிமுக சீனியர்கள் நாடாளுமன்றத் தேர்தல் மாதிரி இதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வத்திடம் சொல்லி வருகிறார்களாம். மேலும், மேயர் பதவிகள் முழுவதிலும் அதிமுகவே போட்டியிட வேண்டும். துணை மேயர் உள்ளிட்ட பதவிகளை வேண்டுமானாலும் கூட்டணிக்கு ஒதுக்குகிறோம் என்று சமாளியுங்கள்.
கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தினால் எக்காரணத்தைக்கொண்டும் சென்னை, சேலம், கோவை, மதுரையை விட்டுக்கொடுக்காதீர்கள்.

பாமக, பாஜகவுக்கு தலா ஒன்று வேண்டுமானாலும் கொடுங்கள். நாகர்கோவிலை திமுக, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினால் அங்கு பாஜகவுக்கு ஒதுக்குங்கள்.
வேலூரில் திமுக போட்டியிட்டால் பாமகவுக்கு அதனை ஒதுக்குங்கள், தேமுதிகவுக்கு நகராட்சித் தலைவர் பதவியில் போட்டியிட வாய்ப்பு வழங்குகிறோம் என்று சமாளியுங்கள் என்று அதிமுக சீனியர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தியுள்ளனர். அதிமுகவின் சீனியர்கள் சிலரும் இதனை கூட்டணிக் கட்சிகளுக்கு பக்குவமாக எடுத்து சொல்லி வருகிறார்களாம்.
அதிமுகவிடம் இருந்து இதுபோன்ற பதில் வரும் என்று எதிர்பார்க்காத கூட்டணிக் கட்சிகள் கடும் அப்செட்டில் உள்ளது

கருத்துகள் இல்லை: