புதன், 21 ஆகஸ்ட், 2019

ஸ்டாலின் : ப.சிதம்பரம் ஒரு சட்ட வல்லுநர்; சட்ட ரீதியாக வழக்கை சந்திப்பார்: ஸ்டாலின்

hindutamil. :  ப.சிதம்பரம் தன் மீதான வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பார் என,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று (ஆக.21) மறுத்துவிட்டது.
ப.சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்கும் வகையில் அமலாக்கப்பிரிவு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க இயலாது, மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்புவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துவிட்டார். இதனால் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "இந்த பிரச்சினையை பொறுத்தவரை அரசியல் காழ்ப்புணர்வோடு, இவை நடைபெறுவதாகத்தான் நான் எண்ணுகிறேன். ப.சிதம்பரம் ஒரு சட்ட வல்லுநர். எனவே அதனை சட்ட ரீதியாக அவர் சந்திப்பார்", என தெரிவித்தார். மேலும், காஷ்மீர் விவகாரம் குறித்து நாளை (ஆக.21) டெல்லியில் நடைபெறவுள்ள போராட்டத்தை, மக்களவை திமுக தலைவர் டி.ஆர்.பாலு வழிநடத்துவார் என்றும், அப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என, ஸ்டாலின் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: