வியாழன், 22 ஆகஸ்ட், 2019

டொனால்ட் ட்ரம்ப் : மோடியை காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து வார இறுதியில் சந்திப்பேன்.. டிரம்ப் பரபரப்பு பேட்டி

பிரதமர் மோடியை வார இறுதியில் சந்திப்பேன்: காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் பரபரப்பு பேட்டி தினத்தந்தி :  காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்றும், பிரதமர் மோடியை வார இறுதியில் பிரான்சில் சந்திப்பேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.
 வாஷிங்டன், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு அதிரடியாக ரத்து செய்து விட்டது. அத்துடன் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது பாகிஸ்தானுக்கு பெருத்த அடியாக அமைந்து விட்டது. இதை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முயற்சித்தாலும், இந்தியா இது உள்நாட்டு விவகாரம் என தெளிவுபடுத்தி விட்டது. உலக நாடுகளும் இதை புரிந்து கொண்டு விட்டன.


ஆனாலும் இந்த விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து உள்ளது.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்த விவகாரம் தொடர்பாக கூறியதாவது:-

வெளிப்படையாக சொல்கிறேன். காஷ்மீர் பிரச்சினை, மிகவும் தீவிரமான பிரச்சினை.

நான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் பேசினேன். இந்திய பிரதமர் மோடியுடனும் பேசினேன். இருவரும் எனது நண்பர்கள். அவர்கள் பெரிய மனிதர்கள். அவர்கள் தங்களது நாட்டை நேசிக்கிறார்கள்.

பிரான்சில் ஜி-7 உச்சி மாநாட்டின்போது நான் பிரதமர் மோடியை சந்திப்பேன்.

எனவே வார இறுதியில் நான் மோடியுடன் இருப்பேன். (பிரான்ஸ் நாட்டில் பியாரிட்ஸ் நகரில் ஜி-7 உச்சி மாநாடு 24-ந் தேதி தொடங்குகிறது. 26-ந் தேதி முடிகிறது).

காஷ்மீர் பிரச்சினையில், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழலை தணிக்க நான் முயற்சிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இங்கு இப்போதுதான் வந்து சென்றார். நான் இருவருடனும் நல்லுறவு வைத்துள்ளேன்.

காஷ்மீர் பிரச்சினை மிக கடினமான பிரச்சினையாக உள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் பீரங்கிகளையும், கனரக ஆயுதங்களையும் பயன்படுத்துகின்றன. இது நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது.

எனவே நான் இந்தநிலையில் உதவ நினைக்கிறேன். ஆனால் இவ்விரு நாடுகள் இடையே மிகப்பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன.

இதில் நான் மத்தியஸ்தம் செய்ய முடியும் அல்லது என்னால் இயன்றதை செய்ய முடியும். அவர்கள் இருவருடனும் எனக்கு சிறப்பான உறவு உள்ளது. ஆனால் அவர்கள் இருவரும் இந்த தருணம், நண்பர்களாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர், இங்கிலாந்தை பொறுத்தமட்டில் காஷ்மீர் பிரச்சினை, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சினை என தெரிவித்தார்.

இவர்கள் இடையேயான தொலைபேசி உரையாடல் பற்றி இங்கிலாந்து பிரதமரின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேசித்தான் தீர்வு காண வேண்டும் என்பதை பிரதமர் போரிஸ் ஜான்சன் தெளிவுபடுத்தி உள்ளார். பேச்சுவார்த்தையின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியதின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்” என கூறப்பட்டுள்ளது.

ஜி-7 உச்சி மாநாட்டின்போது, பிரதமர் மோடியும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் முதன்முதலாக சந்தித்து பேச உள்ளனர்.

கருத்துகள் இல்லை: