வியாழன், 22 ஆகஸ்ட், 2019

சந்திரயான் 2 விண்கலம் எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு

சந்திரயான் 2 விண்கலம் எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு மாலைமலர் :  சந்திரயான் 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.

சந்திரயான் எடுத்த நிலவின் மேற்பரப்பு புகைப்படம்
 பெங்களூரு: நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் கடந்த மாதம் 22-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் 2 விண்கலம், கடந்த புதன்கிழமை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் தொடங்கியது.ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம்,  ஆகஸ்ட் 20-ல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது.
அதன்பின் சுற்றுவட்டப் பாதையின் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியாக செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்நிலையில், நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 2, நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ நிறுவனம் இன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. சுமார் 2,650 கி.மீட்டர் தொலைவில் இருந்து நிலவின் மேற்பரப்பை சந்திராயன் 2 புகைப்படம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: