செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

பிலிம் நியூஸ் ஆனந்தனின் அந்தப் பொக்கிஷங்கள் கேட்பாராற்று தரமணி பிலிம் சிட்டியில்...

பாண்டியன் சுந்தரம் : < "என் குழந்தை என்னை விட்டுப் போவது போல
கலங்கினேன்"-தமிழ்சினிமாவின் தகவல் களஞ்சியம் பிலிம்நியூஸ் ஆனந்தன்! அப்போது சென்னை இராயப்பேட்டை நியூ காலேஜ் அருகில் குடியிருந்தார் பிலிம்நியூஸ் ஆனந்தன். அவர் வீட்டுக்கு
சென்று வராத சினிமா நிருபர்களே இருக்க முடியாது. பலதகவல்களுக்காக, பலமுறை அவரைத் தொந்தரவு
செய்தாலும் ஒவ்வொரு முறையும் முகம் சுளிக்காமல், குறிப்பாக, எந்த பலனையும் எதிர்பாராமல் திரைப்படம் சம்பந்தமான புகைப்படங்கள், செய்திகள், விளக்கங்களைத் தருவார். தமிழ் திரைப்படம் பற்றி எந்த சந்தேகம் என்றாலும், அவருக்கு போன் அடிக்கலாம்.

‘ஆனந்தன்’ என்று மறுமுனையில் அவரே பேசுவார். வீட்டுக்குச் சென்றால், அவருடைய உயிரான மனைவி வாஞ்சையுடன் உபசரிப்பார்கள். சில ஆண்டுகளாக அவர் பார்வைக் கோளாறில் கஷ்டப்பட்டபோது, அந்தம்மா படித்துத் தகவல்களைச் சொல்ல, பிலிம் நியூஸ் ஆனந்தன் அவற்றை ஆவணமாக்கினார்.
இந்த ஆண்டு, இந்தப் படம் வெளியானது எனப் பல தகவல்களை மனிதர் புட்டு, புட்டு வைப்பார். நடிகர்கள், நடிகைகள்,
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அவரிடம் தகவல்கள் பெறாத நபர்களே

இருக்கமுடியாது. சம்பந்தப்பட்ட பட நிறுவனங்கள், நடித்த நடிகர்களிடம் கூட புகைப்படங்கள் இருக்காது. ஆனால், அவர் பாதுகாத்து வைத்து இருப்பார். எந்த நேரத்திலும் அதைக் கொடுத்து உதவுவார்.
தமிழ் சினிமாவில் முதல் படம் கீசகவதம். அந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியவர் நடராஜ முதலியார். அவரைப்
படமெடுத்த ஒரே நபர் பிலிம்நியூஸ் ஆனந்தன்தான்.நடராஜ முதலியாரின் மகன் தனது அப்பா போட்டோவை ஒரு
கண்காட்சியில் பார்த்துவிட்டு, அவரிடம் வந்து குமுறி அழுதிருக்கிறார்.
பிலிம்ஸ் ஆனந்தன் இல்லாவிட்டால், தமிழ் சினிமா தகவல்கள், போட்டோக்கள் யாருக்கும் தெரியாமல் போய் இருக்கும். அதேபோல், முதல் பேசும்படமான
காளிதாஸ் நாயகி டி.பி.ராஜலட்சுமி அவர்களையும் படமெடுத்து இருக்கிறார். அவர் கேமராவில் சிக்காத நடிகர், நடிகைகளே அந்தக் காலத்தில் கிடையாது. சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு என்ற அவரின் புத்தகம், தமிழ்சினிமாவின் பெரிய சொத்து. அதில் அவ்வளவு தகவல்கள், போட்டோக்கள் இருக்கின்றன...
கடந்தஆட்சியில் அவருடைய படைப்புகள் அரசுடைமையாக்கப்பட்டது. பல ஆண்டுகளாக அவர்சேகரித்த தகவல்கள்,
போட்டோக்கள் ராயப்பேட்டை வீட்டில் இருந்து சென்னை தரமணி பிலிம் சிட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
"அப்போது சின்னக் குழந்தை போல அழுதேன். என் குழந்தை என்னை விட்டுப் போவதைப் போல கலங்கினேன்" என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
இப்போதும் பிலிம் நியூஸ் ஆனந்தனின் அந்தப் பொக்கிஷங்கள் கேட்பாராற்று
தரமணி பிலிம் சிட்டியில் கிடக்கிறது என்று கூறப்படுகிறது. அதை நவீனப் படுத்த வேண்டும். அந்தத் தகவல்களை டிஜிட்டல் ஆக்கவேண்டும். அப்போதுதான் தமிழ்சினிமா வரலாறு இன்னும் பல நுாறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும். 21-3-2016-இல் காலமான பிலிம் நியூஸ் ஆனந்தனின் ஆசையும் கூட அதுதான்!

கருத்துகள் இல்லை: