திங்கள், 19 ஆகஸ்ட், 2019

எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை.. கதறி அழுத தீபா

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக இருந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப். "ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று ஓ.பி.எஸ்.க்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில், தான் நடத்தி வந்த ஜெ.தீபா பேரவையை அதிமுகவுடன் இணைத்துக் கொண்டு தன்னையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளுமாறு குறிப்பிட்டு இருக்கிறார்.
அதிமுகவில் சேர்ந்து கொள்ள வேண்டும் என கடந்த ஒரு மாதமாக பல முயற்சிகளை மேற்கொண்டார் தீபா. ஆனால், அங்கிருந்து க்ரீன் சிக்னல் எதுவும் வரவில்லை. இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதல்வரை சந்தித்துப் பேசி இருக்கிறார் தீபாவின் கணவர் மாதவன். அப்போது, ' தீபா யாரு என்னன்னு நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அவங்க அதிமுகவில் இணைந்து செயல்பட நினைக்கிறாங்க.
அதுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது ஓ.பி.எஸ்.தான். முன்பு ஒருமுறை அவரை பார்த்துட்டு அவரோட அணியில் சேரவில்லை என்ற கோபம் அவருக்கு இருக்கு. அதுவும் இல்லாமல் தீபா உள்ளே வந்தால் தனக்கான முக்கியத்துவம் குறையும் என அவர் நினைக்கிறாரு. தீபாவுக்கு எந்த பொறுப்பும் வேண்டாம். அவங்க ஹெல்த் சரியாக இல்லை. கட்சியில் மட்டும் சேர்த்துகிட்டா போதும். மற்றதை அப்புறம் பார்த்துக்கலாம். நாங்க எப்போதும் உங்களுக்கு விசுவாசமாக இருப்போம்...' என்று சொன்னதுடன் தீபாவுக்கு போன் போட்டு எடப்பாடியோடு பேச வைத்திருக்கிறார்.

'எங்க அத்தையோட கட்சியில் சேர்வதற்கு கூட நான் தகுதி இல்லாதவளாக ஆகிட்டேனா?' என அழுதுவிட்டாராம் தீபா. அதன் பிறகுதான் எடப்பாடி, ' ஓ.பி.எஸ். உங்க மீது வருத்தத்தில் இருப்பது உண்மைதான். அவரை ஆலோசிக்காமல் நான் உங்களை கட்சியில் இணைத்தால் அது சில சங்கடங்களை உண்டாக்கும். நீங்க வருவதால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நீங்க ஓ.பி.எஸ்.க்கு எழுதுவதை போல ஒரு கடிதம் எழுதுங்க. கட்சியில் சேர்த்துக் கொள்ளச் சொல்லி அதில் குறிப்பிடுங்க. அதை மீடியாவுக்கும் சொல்லிடுங்க. அதன் பிறகு அவரை நான் சமாதானப்படுத்திக் கிறேன்.
எனக்கும் ஒரு காப்பி அனுப்பிடுங்க. ' என்று ஐடியா கொடுத்திருக்கிறார் எடப்பாடி.
நீங்க என்னை வந்து பார்த்தது போனது எதுவும் வெளியே தெரிய வேண்டாம். நான் ஊரில் இல்லாத நேரத்தில் கடிதத்தை வெளியிடுங்க...' என்றும் அட்வைஸ் செய்தாராம். அதன்படியே தீபாவின் கடிதம் இன்று வெளியாகி இருக்கிறது.
எடப்பாடி சென்னைக்கு திரும்பியதும் தீபாவை அதிமுகவில் இணைப்பது சம்பந்தமாக பன்னீரிடம் பேசி முடிவெடுப்பாராம். மகளிர் அணியில் தீபாவுக்கு பொறுப்பு கொடுக்கலாம் என திட்டமிட்டு இருக்கிறாராம் எடப்பாடி. " என்று முடிந்தது அந்த மெசேஜ்.
தொடர்ந்து அடுத்த மெசேஜ்ஜும் டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப். " முதல்வரின் வெளிநாட்டு பயணம் திட்டமிடப்பட்ட ஒன்றுதான். முதலில் லண்டன் அடுத்து அமெரிக்கா என மொத்தம் 13 நாட்கள் முதல்வர் வெளிநாட்டை சுற்றி வரப் போகிறார். லண்டன் பயணத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டும் உடன் இருப்பார். அங்கே முதல்வருக்கு கம்ப்ளீட் ஹெல்த் செக் அப்க்கு பிரபல மருத்துவமனை ஒன்றில் இப்போதே அப்பாயின்ட்மெண்ட் உறுதிப்படுத்த பட்டு இருக்கிறதாம்.
13 நாட்கள் முதல்வர் வெளிநாடு செல்வதால் அவரது துறைகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் என்பது மரபாம். அந்த பொறுப்பு பன்னீரிடம் போகுமா அல்லது கொங்கு மண்டலத்தில் உள்ள அமைச்சர்களான தங்கமணி அல்லது வேலுமணி இருவரில் ஒருவரிடம் கொடுப்பாரா என்பதுதான் அதிமுகவில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. என்ன செய்யப் போகிறார் எடப்பாடி என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்!" என்ற மெசேஜ்க்கும் செண்ட் கொடுத்து விட்டு ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: