புதன், 21 ஆகஸ்ட், 2019

பிக் பாஸ் தற்கொலை மிரட்டல்: மதுமிதா மீது விஜய் டிவி முறைப்பாடு !

தற்கொலை மிரட்டல்: மதுமிதா மீது விஜய் டிவி புகார்!மின்னம்பலம் : பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதாவின் செயல்பாடு கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக மதுமிதா, தனது கையை அறுத்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
“டாஸ்க்குக்குப் பின் நடைபெற்ற விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். எனவே, மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்று நிகழ்ச்சி குழு தெரிவித்தது.
காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து மதுமிதா அனுப்பிவைக்கப்பட்டார் இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 21) மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி-யின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், “ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா, ஏற்கனவே ரூ. 11,50,000 பெற்றுள்ளார். மீதமுள்ள ஒரு நாளுக்கு 80,000 ரூபாய் வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தோம். அதை ஒப்புக் கொண்டு சென்றார். பிறகு கடந்த 19ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக மதுமிதா மிரட்டல் விடுத்துள்ளார். பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் ‘தற்கொலை செய்து விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார்" என்று பிரசாத் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தப் புகாரை மதுமிதா மறுத்துள்ளார். ஒப்பந்தப்படி உள்ள பணத்தை மட்டும் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
மதுமிதாவுக்கு சேரவேண்டிய பணத்தை பிக் பாஸ் போன்ற மிகப்பெரிய டீம் நிறுத்திவைத்திருப்பது ஏன் என்று, பிக் பாஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, “ நாள் ஒன்றுக்கு 80,000 ரூபாய் வீதம், 42 நாட்களுக்கான 33 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் பாக்கி இருக்கிறது. இது மதுமிதாவுக்கு சேரவேண்டிய பணம் என்பது உண்மை தான். ஆனால், இந்தப் பணத்தை 100 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு முன்பாகக் கொடுத்தால், அத்துடன் அவருடனான பிக் பாஸ் அக்ரிமெண்ட் முடிவுக்கு வந்துவிடும். அதன்பிறகு, அவர் வீட்டில் நடைபெற்றவற்றை வெளியில் சொல்லிவிட்டால், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் குறைந்துவிடுவார்கள்” என்று கூறுகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது, வெளியில் வந்தபிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசக்கூடாது என்பது மட்டுமல்லாமல், 100 நாட்கள் வரை எந்தத் தகவலையும் வெளியிடாமல் அமைதியாக இருந்தால் மட்டுமே பணம் கொடுக்கப்படும் என்பதும் அக்ரிமெண்டில் இருப்பதால்தான் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்கின்றனர்

கருத்துகள் இல்லை: